தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.
தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.