


செய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.
ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.
லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.
செய்தியின் பின்னணி:
இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.
வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2
வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3
வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.
புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்
வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!
‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.
‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.
ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது.
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.
மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.
இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.
பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.
இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.
ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.