2009

2009

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு; பெற்றோர் விசனம்

schoolgirls-sri-lanka.jpgமத்திய மாகாண கம்பளை கல்வி வலய புப்புரெஸ்ஸ க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். 576 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையில் கற்பித்தல் பணிகளுக்கு 32 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 13 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.

19 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு அடங்கலாக கற்பித்து வந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.

அண்மையில் 11 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற போதும், பாடசாலையில் ஏற்கனவே இருந்த 11 ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை தோன்றியுள்ளதுடன், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பிரதான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால் இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை விண்ணப்பித்திருக்கும் கடன் நாணய நிதியத்தின் நோக்கத்திற்கு “பரீட்சை’

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் உயர் கடன் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இது அந்த அமைப்பின் நோக்கத்திற்கான பரீட்சையாக அமையும் என்றும் பிரதி நிதியமைச்சரான சரத் அமுனுகம கூறியுள்ளார்.

இக் கடன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருந்த நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையின் கடன் விண்ணப்பம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அரசியலுக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது. இது பொருளாதார விவகாரம் அல்ல. அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பதில் என்னவென்பது பற்றி எமக்குத் தெரியவரும் என்று கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

1.9 மில்லியன் டொலரை அவர்கள் வழங்குவார்களா என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நோக்கத்திற்கு இது பாரிய பரீட்சையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும் கடனை வழங்காவிடின் அவர்கள் தரப்பில் (நாணய நிதியம்) சங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் சரியான விடயத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் கப்ரால் கூறியுள்ளார்.

அன்பென்று கொட்டு முரசே!!! – தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்

Comrade_Siva_Meetingதோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையை ஆற்றுகிறார். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாய் முழுவதும் மானிடத்திற்காய் உழைத்தவர் தோழர் சிவம் என்ற தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் என தேடகம் அவரை கௌரவித்து உள்ளது. அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் இந்நிகழ்வை தேடகம் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Further Details : Comrade_Siva_Meeting

Related Articles:

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

கனடாவில் நாளை ‘உயிர்த்தெழுவோம்’: மாபெரும் எழுச்சி நிகழ்வு

kalam-pulam.jpgகனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘உயிர்த்தெழுவோம்’ எழுச்சி நிகழ்வு ரொறன்ரோவில் குயின்ஸ்பாக் – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நாளை சனிக்கிழமை 4 ம் திகதி மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இலங்கையரை ஆஸி.க்கு கடத்தியதாக பிரிட்டிஷ் பிரஜை மீது குற்றச்சாட்டு

boat.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு இலங்கையரை சட்ட விரோதமாகக் கடத்தி வரும் நடவடிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனது போர்டிங் அனுமதி அட்டையை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்திக்கொண்டு கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க 63 வயதுடைய ஒருநபர் இடமளித்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பயணிகளின் போர்டிங் அட்டைகளைப் பயன்படுத்தி மேலும் இரு இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க இந்த நபர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து டார்வினுக்கு திங்கட்கிழமை விமானம் மூலம் வந்த இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் ஆகக்கூடியது 10 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். டார்வின் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த நபர் ஆஜர் செய்யப்படவிருப்பதாக “நெரால்ட் சன்’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு கல்வியமைச்சு ஒத்துழைப்பு!

train_.jpgவடக்கின் வசந்தம் யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

நேசத்தின் தரிப்பிடம என்ற பேரில் கல்வியமைச்சு இதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஆனையிறவு ரயில் நிலையத்தைப் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவிகளைப் பெற கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் இம்மாதம் 7ம்திகதி முதல் 17ம் திகதிவரையான இருவார காலத்துள் பாடசாலைகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தம்

profrajiwawijesinha.jpgஇலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30 ஆந் திகதியுடன் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சமாதானச் செயலக நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொந்த மனங்களை குணப்படுத்த வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது.- ஜனாதிபதி

slprasident.jpgஒருவருக் கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து,  சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சுழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையினால் பயங்கரவாதத்தினால் சகல உரிமைகளையும் இழந்திருந்த அப்பாவி மக்களை மீட்க முடிந்துள்ளது. அம் மக்களது நொந்த மனங்களை குணப்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. அபிவிருத்தியில்லாமல் நல்லிணக்கமில்லை என்பதை நம்புபவன் நான். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளைக் களைந்து நல்லுறவு,  சமத்துவமான எதிர்காலத்தை உரிமையாக்கிக் கொள்வதற்காக சகலரும் செயற் பட வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்தினால் கடந்த காலங்களில் தமது அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகத்தை இழந்த மக்கள் நம் நாட்டில் இருந்துள்ளனர் என்பதை நான்அறிவேன். மனிதாபிமான நடவடிக்கையினால் அவர்களை நாம் மீட்டுள்ளோம். உலகிலேயே பெருமளவு பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். அம் மக்களின் நொந்த மனங்களை தேற்றுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு கட்சியின் பொறுப்பு மட்டுமல்ல. அதனால் நாம் தற்போது எம் மத்தியில் நிலவும் வேற்றுமைகளை ஆராய்வதை விடுத்து நம் மத்தியிலுள்ள சமத்துவம் எதுவென ஆராய வேண்டும். அதற்கிணங்க ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

வடக்கில் நலன்புரி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நலன் பற்றியும் அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நான் முன்னரே தெரிவித்தது போன்று வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதும் அவர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். அதற்கு விரைவான அபிவிருத்தி அவசியம். நாம் தற்போது ஆரம்பித்த இந்த நடவடிக்கையை மிக ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமாகும். இப்போது மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 651 குடும்பங்களைச் சேர்ந்த 2409 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். நாம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மக்களை மீளக் குடியமர்த்த முன்னர் நாம் மிதிவெடிகளற்ற பிரதேசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

எவரையும் முகாம்களில் தங்கவைக்கும் அவசியம் எமக்கில்லை. அவர்களை மிக விரைவாக அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதே எமது நோக்கம். மிதிவெடி அகற்றப்பட்டதும் எமது முதல் நடவடிக்கையும் அதுவே. அதேபோன்று அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். அதற்காக 180 நாள் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதன் குறைநிறைகளை ஆராய்ந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. இனவாத அரசியல் கட்சிகள் எம்மத்தியில் இருகின்றன என நான் எண்ணவில்லை. இனவாதம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டது. இந்நாட்டிலிருந்து இன வாதத்தை ஒழித்து நாட்டை நேசிக்கும் மக்களை கட்டியெழுப்ப வேண்டியதும் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய நாம் விரைவில் கூட வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்

_vanankaman-captionali.jpgஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது. வணங்காமண் கொண்டு வந்த பொருட்களை இந்திய கப்பலில் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இக்கப்பலிலிருந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொலரா எனும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. பின்னர் 8ஆம் திகதி அக்கப்பல் கொழும்பு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

“தமிழினத் தாகம் தணியாது”: பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம். அறிக்கையின் முழுவடிவம்:-

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரச கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு, மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 இலட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள், கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள். இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம். உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் இருந்த ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்ததால். அந்த கட்டமைப்புக்கும் அதன் செயற்பாட்டுக்கும் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தினார்கள். தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டார்கள் இன்று அந்த கனவை நனவாக்கினார்கள்.

அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் இன்று எம்மிடம் மிக முக்கிய அவசர கடமைகள் காத்திருக்கின்றன. எமது தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், எமது போராட்டத்தின் அடுத்த வடிவமாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் 1976 ம் ஆண்டு அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 ல் இலங்கைத்தீவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பெருமித்த ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போரில் ஒப்பற்ற அர்ப்பணிப்புகளுடாக வலுப் பெற்று, சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சித்திரை 18 ம் திகதி 2009 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களால் வாக்களிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடும்.

தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்.

பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது இனத்தின் தனித்துவங்களையும், இனத்துவ அடையாளங்களையும் பேணிப்பாதுகாக்கவும், பிரான்ஸ் மக்களுடன் நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்தவும் பாடுபடும்.

இது தமிழ் மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டுச்சபையாக, எமது உரிமைகளை இந்நாட்டினருக்கும், உலகிற்கும் எடுத்துச் செல்லும் அமைப்பாக, தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அமையப்போகின்றது.

பிரான்சில் பரந்து வாழும் தமிழ் மக்களுடனும் அதற்காக உழைக்கும் அமைப்புகளுடனும், மனிதநேய தொண்டர் அமைப்புகளுடனும், ஸ்தாபனங்களுடன் தொடர்ந்து செயலாற்றவுள்ளோம்.

இந்த தமிழீழ மக்கள் பேரவையில் இங்கு வாழும் புத்திஜீவிகளும், மூத்த கல்விமான்களும், பிரெஞ்சு, தமிழ் சட்டவாளர்கள்,அரசியல்வாதிகள், தமிழினப் பற்றாளர்கள், தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இதுவரை தொண்டாற்றி வருபவர்கள் எல்லோரினதும் ஆலோசனைகளோடு, பங்களிப்போடும் உருவாக்கம் பெறவுள்ளது.

இந்த பேரவையினால் முன்னெடுக்கப்படும், செயற்பாட்டிற்கும், தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியாய் தன்மான உணர்வுள்ள தமிழராய், ஒருமித்த குரலினால் ஓங்கி வளர்த்திட உங்கள் எல்லோரினதும் அன்பையும், ஆசியையும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும், இன்னும் பிற வள உதவிகளையும் தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்