2009

2009

திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும்

trincomalee-district.jpgதிருகோண மலை மாவட்டத்தின் கல்வி வரலாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். இப்பணியில் திருகோணமலைக் கல்வி வலயத்தின் ஆக்கத்திறன் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்தார்.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் வலயப் பாடசாலைகளுக்கான 2009 புத்தாக்கக் கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகப் பணிப்பாளர் தண்டாயுதபாணி கலந்துகொண்டு பேசினார். திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இக் கண்காட்சி நடத்தப்பட்டது.

“திருகோணமலையில் அறிஞர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். ஆனால், அவை தொகுக்கப்பட வேண்டும். இத்துறையில் விடப்பட்டிருக்கின்ற இடைவெளியை நிரப்ப வேண்டும். மாவட்டத்தின் கல்வி வரலாறு ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் கல்வி வரலாறு, புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். அது அவசியமாக செய்யப்பட வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் இதனைச் செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். இப்பணியை திருகோணமலை கல்வி வலய அலுவலகத்தின் ஆக்கத்திறன் மற்றும் ஆவணப்படுத்தல் தகவல் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளேன்’ என்றும் பணிப்பாளர் தண்டாயுதபாணி தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களுக்கு அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு

25dallas_alahapperuma.jpgஇலங்கை ரயில்வே சேவையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு ஒன்றை  வழங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்துள்ளார்.

எமது நாட்டில் செயற்திறன்மிக்க ரயில்வே சேவையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காகவும்  மற்றும் ரயில்வே ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் இந்த  விசேட அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம்

ltteir-banner-1.jpgவிடு தலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.

இதற்கு துணைபுரியும் வகையிலேல் www.ltteir.org என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மேலும் – மக்களோடு நெருங்கி செயல்படும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக – ‘பத்மநாதன் பக்கங்கள்’ எனும் ஒரு சிறப்புத் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ltteir-banner-1.jpg

செவ்வாய்க்கிழமை மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்

maical-jak.jpgமைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம் வருகிற செவ்வாய்க்கிழமை லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ளது. உடல் அடக்கத்திற்கு முன்னதாக ஜாக்சனின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ரான்டி பிலிப்ஸ் கூறியுள்ளார்.

ஏஇஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலதிகாரியாகவும் இருக்கும் பிலிப்ஸ் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸ் நேரப்படி காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கும். அங்குள்ள ஸ்டேப்பி்ள்ஸ் மையத்தி்ல் ஜாக்சன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறும்.

20 ஆயிரம் பேர் அந்த மையத்தில் அமர முடியும். ஆனால் பெருமளவில் கூட்டம் கூடும் என்பதால், மையத்திற்கு வெளியே பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும். இடம், நேரம் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜாக்சன் குடும்பத்தினருடன் இறுதியாக பேசிய பின்னர் அவையும் தீர்மானிக்கப்பட்டு விடும் என்றார்.

ஜாக்சனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள மையம், கால்பந்து சங்கத்திற்குச் சொந்தமானதாகும். முன்னதாக ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் உடல் அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் சிக்கல்கள் இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

வடக்கில் மீன்பிடித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்!

felixperera.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை மேம்படுத்த மீனவக் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மீன்பிடிää நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று ஜா-எலயில்  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

இத்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்குத் தேவையான படகுகள்,  வலைகள் மற்றும் மீன்பிடிக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன. வடக்கில் மீன்பிடித்தடைகள்; இப்பொழுது அகற்றப்பட்டு  24 மணி நேரமும்  மீன்பிடியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 219 மீனவக் கிராமங்களில் உள்ள 39 ஆயிரத்துக்கும்  அதிகமான மீனவர்கள்; நன்மையடையவுள்ளனர்.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் 67, 500 மெற்றிக் தொன்னையும் விடக் கூடுதலான மீன்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. எனினும் வடக்கின்  கடற்றொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் அதைவிடக் கூடுதலான மீன்களை தெற்கிற்கு கொண்டுவர முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் 

டொலர்களாலும் பவுண்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி

slprasident.jpg“பவுண் களாலும், டொலர்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அதற்கு தூரநோக்குடனான கடின உழைப்பு முக்கியமானது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கஷ்டமான விடயம் என எண்ணி அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதைக் கைவிட்டு விடுவது தலைவனுக்குரிய இலட்சணமல்ல. கஷ்டமானது என்பதற்காக நல்ல இலக்குகளை கைவிடக் கூடாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான போதும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமது கடமையைக் கைவிட்டுப் போகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

எமது படை வீரர்கள் இரவு பகல் என்று பார்க்கவில்லை; தமது உரிமைகள் கொடுப்பனவுகள் பற்றிச் சிந்திக்கவில்லை; பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்கிலேயே கருத்தாயிருந்து 24 மணித்தியாலமும் உழைத்தனர். அதன் மூலமே இலக்கை வெற்றிகொள்ள முடிந்ததெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்களான பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் சிவில் பாதுகாப்புச் செயலணியின் பணிப்பாளர் நாயகம் சரத் வீரசேகர ஆகியோரைப் பாராட்டும் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்ட வீரதீரச் செயல்களைப் பாராட்டி “ஆனந்த விருஹரசர” என்ற தொனியில் இவர்களுக்கான பாராட்டு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

முழு உலகையும் வியப்பிலாழ்த்தும் வகையில் எமது படையினர் பயங்கரவாதத்தை வெற்றிகொண்டுள்ளனர். நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் இது என்பதை மக்கள் உணர்ந்து பாராட்டுகின்றனர். இதற்காக ஆனந்தாக் கல்லூரி தமது பழைய மாணவர்களின் திறமையைப் பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கின்றது. இந்த வெற்றி நாட்டின் சகல தரப்பு மக்களினதும வெற்றி என்பதுடன் இது ஆனந்தாக் கல்லூரியினதும் வெற்றியாகிறது. ஏனெனில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பிரிகேடியர் பிரசன்ன சில்வா, பிரிகேடியர் ஷாகி கால்லகே போன்ற இரண்டாம் அணித் தலைவர்களுட்பட பல தலைவர்கள் இந்த ஆனந்தாக் கல்லூரியிலிருந்து தான் உருவாகியுள்ளனர்.

1983ல் பயங்கரவாதம் பலிகொண்ட எமது முதலாவது இராணுவ அணிக்குத் தலைமைதாங்கியவர்களும் ஆனந்தாக் கல்லூரி பழைய மாணவர்களே. அதேபோன்று பயங்கரவாதத்தை ஒழிக்கும் இறுதி புதுமாத்தளன் யுத்தத்திற்குத் தலைமைத்துவம் வழங்கியவர்களும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களே.
பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எமது தலைவர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. நோக்கம் மட்டுமே போதுமானதல்ல, அது நியாயமானதாகவும் அமைவது அவசியம். உலகில் பல தலைவர்களுக்கு நோக்கமிருந்தது. இந்த வகையில் ஹிட்லர், பொல்பொட் அதுபோல பிரபாகரனுக்கும் கூட நோக்கம் இருந்தது. எனினும் அது நியாயமானதா என்பதே கேள்வி. பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ளப்பட்ட இலக்கு நியாயமானது என முழு நாடும் ஏற்றுக்கொண்டது. நோக்கம் மட்டும் போதாது, அந்த நோக்கம் மாறாமல் இருப்பதும் முக்கியம். எமது பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த மூன்று வருடத்தில் படைக்கு வந்தவர்களல்ல. அவர்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். கோதாபய ராஜபக்ஷ, சரத்பொன்சேகா போன்றோர் வடமராட்சி யுத்தத்திலும் இருந்தவர்கள். வசந்த கரணாகொட நீண்ட காலம் கிழக்கின் கடற்படைக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவர். 1990ல் இவர்கள் அனைவருமே யுத்தக் களத்தில் இருந்தவர்கள். எனினும் இவர்கள் ஸ்தீரமான ஒரே நோக்கில் வழிநடத்தப்படவில்லை. தலைவர்களின் நோக்கங்கள் நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது கைவிடப்படாது அர்ப்பணிப்புடன் தொடரப்படவேண்டியது. கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரும் போது நோக்கத்தைக் கைவிட்டுச் செல்லும் தலைவன் தன்னையும் நாட்டையும் சீரழித்துக்கொள்கிறான். நோக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமெனில் அறிவுசார்ந்த திட்டம் வேண்டும்.

திட்டங்களைத் தீட்டும்போது எதிர்கொள்ளப்போகும் சவால்கள், கஷ்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். புலிகள் நச்சுவாயு உபயோகிப்பார்கள், மாரிகாலம் வரும் அப்போது எமது படையினர் பின்வாங்கிவிடுவார்கள் என சிலர் கூறினார்கள். எனினும் நாம் அதற்காக ஏற்கனவே தயாரானோம். இதனால் இந்த கஷ்டங்களையும் எமக்கு வாய்ப்பாக்கிக்கொள்ள முடிந்தது. மனித உரிமை தொடர்பில் உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது இதுபற்றி நாம் முன்னரே அறிந்திருந்தோம். இதனால்நாம் எந்தளவு விமானத் தாக்குதல் நடத்திய போதும் கனரக ஆயுதங்கள் உபயோகித்தபோதும் அவை எந்த சிவில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உபயோகிப்பதற்கு நாம் திட்டம் தீட்டியிருந்தோம். அதனால்தான் அதற்கு நாம் மனிதாபிமான நடவடிக்கையென பெயரிட்டோம்.

அதனால்தான் வெற்றிகளைப் படையினருக்கு வழங்கி தோல்வியைத் தலைவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பற்றி எவரும் எதைக் கூறினாலும் விமர்சித்தாலும் தாய்நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய படையினரை எவரும் விமர்சிக்கக் கூடாதென நான் கூற விரும்புகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை: சர்வதேச நாணய நிதியம்

050709imf_.jpgஇலங்கைக்கு 1.9 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவது குறித்து, தமது நிறைவேற்று அதிகாரிகள் சபைதான் முடிவுசெய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

இலங்கையின் இந்த கடனுக்கான விண்ணப்பம் குறித்து முடிவு செய்வதற்கான கூட்டத்துக்கான திகதியை சபை இன்னமும் நிர்ணயிக்கவில்லை என்று நாணய நிதியத்தின் சார்பில் பேசவல்ல, கரோலின் அட்கின்ஸன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அது பற்றிய கலந்துரையாடல்கள் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டங்களை, இலங்கை கையாண்ட விதம் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளால் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, இந்தக் கடனுக்கான இலங்கையின் கோரிக்கை மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் : முரளிதரனுக்கு காயம்

cricket20-20.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் முகம்மது யூசுப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணி தற்போது பலம் வாய்ந்த அணியாகக் காணப்பட்டாலும் இலங்கையில் நடைபெறும் ஆட்டம் என்பதால் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும் என்றே விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாகும்.

இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போட்டியில் ஆடமாட்டாரென்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.

முரளிதரனின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இறுதி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததுடன் சுராஜ் முகமட் அல்லது ரங்கன ஹேரத் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி – இலங்கை கிரிக்கெட் நிறுவன 11 பேர் அணியுடனான போட்டி வெற்றி தோல்வியின் முடிவுற்றது. இதேவேளை இலங்கை அணியின் புதுமுக வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது மட்டுமல்லாமல் சிறப்பாக பந்து வீசி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், சுரங்க லக்மல், கெளசல் சில்வா ஆகிய 3 புதுமுகங்கள் இடம்பெற்று உள்ளனர். மெத்திவ்ஸ் 20 ஓவர் போட்டியில் ஆடி உள்ளார். வேகப்பந்து வீரர் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தம்மிக இடம்பெற்றுள்ளார்.

இலங்கை அணி வருமாறு:

சங்கக்கார (கப்டன்), வர்ணபுர, தரங்க, ஜயவர்த்தன, சமரவீர, டில்சான், மெத்திவ்ஸ், கபுகெதர, மெண்டீஸ், துஷார, தம்மிக பிரசாத், கெளசல் சில்வா, சுரங்க லக்மல்.

பாகிஸ்தான் அணி வருமாறு:-

யூனுஸ்கான் (கப்டன்), மிஸ்பா உல்ஹக், சல்மான் பட், குர்ராம் மன்சூர், முகம்மது யூசுப், சுஐப் மலிக், கமரன் அக்மல், உமர் குல், சஹீட் அக்மல், முகம்மட் ஆமீர், டினேஷ் கனேரியா, அப்துல் ரசாக், அப்துல் ரவுப், பைசால் இக்பால், பவாட் அலாம்.

முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு பற்றிய உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 முதல் 6 வரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை ஒழுங்கு செய்துள்ள முதலாவது உலக ஆய்வு மாநாடு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.

தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாடு இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்றுபடுத்துவதுடன் மனிதப் பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தாம் கொண்டுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது தொடர்பான அறிவினை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த உலக ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழக மொழித்துறை செய்து வருகின்றது.

இந்த மாநாட்டில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்” எனும் கருப்பொருளுக்கு உட்பட்டு இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமுகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறு மலர்ச்சி எனும் தலைப்புக்களில் ஏதாவதொன்றின் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையினையும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களைப் பெற விரும்புபவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்திணைக்கள சர்வதேச ஆலோசனைக் குழு செயலாளர்களான கே. ரகுபரன் (0718218177), திருமதி எம். ஏ. எஸ். எப். சாதியா (0718035182) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

மட்டு. ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

nimal-sripala.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்குத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நட்டுவைத்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தையும் திறந்துவைத்துள்ளார்.  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா புதிய நான்கு மாடி கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் அக்கட்டிடத்தில் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவு, இரத்தவங்கி, கண், மூக்கு, செவிகளுக்கான சிகிச்சைப் பிரிவினையும் ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கலை அரங்கினையும் திறந்து வைத்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இன நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்கள், மாகான சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதம விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ் வைத்தியசாலைக்கும் இம் மாவட்ட மக்களுக்கும் தேவையாக உள்ள பல சேவைகளை நிறைவேற்றவுள்ளோம். எதிர்காலத்தில் இந்த மக்கள் தங்களது அனைத்துச் சுகாதார சேவைகளையும் இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படுமென்றார்.