2009

2009

இனவாத அரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல – அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த

000samanthurai.jpgதமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் விமரிசையாக நடைபெற்றன.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற்றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசுவதைக் காண முடிகிறது. இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.

தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்திப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்றேன். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.

முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.

கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது.  இன்று அந்நிலை இல்லை.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இனவாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே. நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட்டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர்மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.

அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர். கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர்காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளையில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.

முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதையெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது. கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.

நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.

இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பன்றி காய்ச்சலுக்கு 2100 பேர் பலி

10092009.jpgசர்வதேச அளவில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பலியானோர் தொகை 2110க்கு மேல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் மட்டும் 1,876 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த படியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 139 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். உலகில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுர செயற்பாடு பரீட்சிப்பு

tunami.jpgதானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுரங்களின் செயற்பாடு குறித்து பரீட்சித்துப் பார்க்கும் நடவ டிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வெவ்வேறு தினங்களில் நடத்தப்படும். குறிப்பிட்ட தினங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டு அனர்த்தம் நிலவப் போகிறது என்ற அறிவித்தலும் விடுக்கப்படும்.

பரீட்சார்த்தமாக நடைபெறும் இந்நிகழ்வு குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கிறது.

முன் எச்சரிக்கை பரீட்சார்த்தம், குறிப்பிடப்படும் தினங்களில் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை நடைபெறும்.

களுத்துறை- செப்டம்பர் 01 ஆம் திகதி.
செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு.
செப்டம்பர்-03 கம்பஹா.
செப்டம்பர் 06- புத்தளம்
செப்டம்பர் 08- திருகோணமலை
செப்டம்பர் 10- மட்டக்களப்பு
செப்டம்பர் 12- அம்பாறை
செப்டம்பர் 15- அம்பாந்தோட்டை
செப்டம்பர் 17- மாத்தறை
செப்டம்பர் 19- காலி

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை சமிக்ஞையாக சைரன் ஒலி எழுப்பப்படும்.

தென்னிந்திய அகதி முகாம்களிலிருந்து 500 தமிழ் குடும்பம் தாயகம் திரும்பின

தென்னிந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலிருந்து 500 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்களென இலங்கை யின் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக வெள்ளியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மக்கள் நலன்சார் பல்வேறு நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இலங்கையிலுள்ள சகல மக்கள் மத்தியிலும் அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. இன, மத வேறு பாடின்றி சகல மக்களும் நடத்தப்படுகிறார்களென அவர் செய்தியார்களிடம் சுட்டிக் காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முதலீடு செய்வதற்குரிய சாதகமான சூழ்நிலை உருவாகிவிட்டது. வெளிநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன் வருகின்றன. கடந்த ஜுலை மாதம் மட்டும் 45.2 வீதமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலிருந்த 500 தமிழ்க் குடும் பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கிறதென அவர் கூறினார்.

அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) – புன்னியாமீன்

international-day-of-the-disappeared.jpgஅனைத்துலக காணாமற்போனோர் தினம்  (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. ‘காணாமற்போனோர்’ என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.

காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம்,  அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது. இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித்தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற்போனோர் இடம் பெற்றதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. அடிமைத்துவ யுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற்போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல்நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்  சுவிடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் என்பவர் காணாமல்போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார்.20ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஓல் வொலண்பேக் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள்  குறிப்பிடுகின்றன. உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமற்போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஓல் வொலண்பேக் இன்று வரை போற்றப்படுகிறார். 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஓல் வொலண்பேக் ரஸ்யப்படையினால் கைது செய்யப்பட்டார்.இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது. காணாமற்போனோர் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரங்களில் ரஓல் வொலண்பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.

காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது  உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ,  மாஃபியா குழுக்கலாலோ,  ஆயுதக்குழுக்களினாலோ  பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வட அமெரிக்காவுக்கும்,  தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில்  உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.  இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான “மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு” மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்  ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு  செயற்படுகின்றன. “அனைத்துலக காணாமற்போனோர் நாள்” இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

அண்மைக்காலத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம்  ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு  விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ,  அல் காயிதா பயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள்.என்று கூறப்படுகிறது.இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைபபலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொணடனர். இதனூடாகவும் காணாமட் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது.அதே நேரம அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத்தில் கூட பல்வேறு பட்ட வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இயற்கைகாரணிகளாலும் காணாமல் போவது இடம் பெறுகின்றது. உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமல் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக்கூறப்படுகிறது.  

கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர்பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத்திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள் , இளம் பெண்களை கடத்தல், பழிவாங்கும் நோக்கத்தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல் உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்…. இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.  

‘அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள்,  குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ,  பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்.” என்று  முன்னால் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும். ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக்கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடைமுறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொண்டாடி வருகிறது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில்,  மனித குலத்திலேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது. என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில்,  அரசுகள்,  தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன்.என்றும் அவ்வறிக்கையில்  மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் – சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள்,  தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர்கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் – இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன; அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னால் செயலாளர் கொண்டலீசா ரைஸ்,  ‘ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்” .என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வேதச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார். நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில்,  ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல்,  தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் “புரோக்கர்’களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில்,  சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும்,  ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது. இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். 

2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால்,  இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்,  நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.

சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே எவ்வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அந்த அறிக்கை  உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில்,  பாலியல் தொழிலுக்கான தேவையே,  ஆள் கடத்தலையும் நேரடியாகவோ,  மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது. வேலைக்காக ஆட்களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள்,  வீட்டு வேலையாட்கள்,  பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி,  ஊமைகளாய்த் தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது. அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக்கைக்கும் உரியது. மனிதநேயமற்ற,  கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

காணாமற்போனோர் பற்றி எடுத்துப் கொள்கையில் காணாமற்போனவர் ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தை மீறி காணாமற்போனோர் இடம் பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.

ஆஃப்கானிய அதிபர் தேர்தலில் அதிபர் ஹமீத் கர்சாய் முன்னிலை

hamid_karzai_president-of-afghanistan.jpgஆஃப்கானிய அதிபர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஏனைய வேட்பாளர்களைவிட அதிபர் ஹமீத் கர்சாய் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்துள்ளது.

45 சதவீத வாக்குகளை அதிபர் கர்சாய் பெற்றிருக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் உள்ள முக்கியப் போட்டியாளர் அப்துல்லா அப்துல்லா 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய அளவிலும் அரசு நிறுவனங்களின் துணையுடனும் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்துல்லா மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கர்சாய்க்கு வாக்களிக்கின்ற போலியான வாக்குச்சீட்டுகள் லட்சக்கணக்கானவை வாக்குப்பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்தன என்று அவர் கூறியுள்ளார். வாக்குப்பதிவு நியாயமாக நடந்திருந்தால், இந்நேரம் தான் முன்னணி வகிப்பாரென அவர் கூறியுள்ளார்.

கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் கொழும்பு வரும்

pathmanathan.jpgஇந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது. 1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.

மத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது. எனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

1800 அதிபர்களுக்கு பதவியுயர்வு கடிதம் இன்று கையளிப்பு

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற 1800 பேருக்கு பதவி உயர்வுக் கடிதங்களை கையளிக்கும் வைபவம் இன்று (30) கொழும்பு டி. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம்பெறுகிறது.

1992 ஜூன், 1994 ஜூன் மாதங்களில் இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரம் முதலாம் வகுப்பில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு சேவை மூப்பு திறமை அடிப்படையில் சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இந்நியமனங்கள் வழங்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.

இதற்காக, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்ட போது சகல  ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு திருப்தி காணப்பட்டவர்களுக்கே இன்று நியமனம் வழங்கப்படுகிறது. ஏனையவர்களுக்கு குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டதும் நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையினையும் கல்வி அமைச்சு எடுத்து வருகிறது.

வவுனியா அரச அதிபர் இந்தியா, சீனா பயணம்

ga-vavuniya-222.jpgவவுனியா அரசாங்க அதிபர் பீ.எம். எஸ். சார்ள்ஸ் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார். புதுடில்லியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் இன்று புதுடில்லி செல்கிறார்.

தெற்காசிய பிராந்திய தரத்திலான அனர்த்த நிவாரண முகாமைத்துவம் பற்றிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே அவர் புதுடில்லி செல்கிறார்.

புதுடில்லி சென்று திரும்பும் அவர், 6ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். சீன மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டிற்காகவே அவர் சீனா செல்லவுள்ளார்.

2543 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை

IDP_Camp_Aug09வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் விரைவில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள் வவுனியா அதிகாரிகளினால் திரட்டப்பட்டு, யாழ் மாவட்டத்தி்ன் செயலகத்திற்கும், பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 2543 குடும்பங்களே விரைவில் மீள் குடியயேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வவுனியா அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் விபரங்கள் குறித்து யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில் அதிகாரிகளும், பொலிசாரும் நடத்திய விசாரணைகள் முடிவடைந்து, இந்தக் குடும்பங்கள் தொடர்பான பட்டியல்கள் இப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட இரண்டாம் கட்டமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 5 ஆயிரத்து 167 குடும்பங்கள் தொடர்பான தகவல்களும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 974 பேரின் விபரங்கள் தொடர்பாக சிவில் அதிகாரிகளினாலும், அந்தந்த பிரதேசத்து பொலிசாரினாலும் விசாரணைகளின் ‘மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.