2009

2009

முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவும் முடிவு

மாகாண சபைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதிகளைப் பெற்றுக் கொள்வதுடன் சில விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். மாகாண முதலமைச்சர்களின் 26வது மாநாடு நேற்று (19) ஆம் திகதி ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநாடு நடைபெற்ற ஹோட்டல் முன்பாக ஏழு மாகாண சபைகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மாகாண சபையின் பிரதான செயலாளர்கள், திறைசேரி மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

விவசாயத்துறை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவ் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான கூடுதலான நிதியைப் பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சின்அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் “நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம்” தேசிய வேலைத் திட்டம் ஊடாக விவசாயிகளின் பொருளாதார துறையை முன்னேற்றுவதற்கு மாகாண சபைகள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கும் மாகாண சபையின் கீழுள்ள குளங்களை புனரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மாகாண சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைப்பில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான ஆயுர்வேத மத் திய மருந்தகங்களை மீள வடமத்திய மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனோடு பேசியுள்ள தாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். இறுதியாக 27 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை வடமேல் மகாணத்தில் நடத்துவதற்கும் அதன் தலைவர் பொறுப்பை மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவுக்கு வழங்கவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களை காக்க கோரி பல நகரங்களில் கிறிஸ்தவர் ஊர்வலம்

200909.jpgஇலங்கையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை தங்கள் பூர்வீக இடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அமைச்சர் டியூ குணசேகர

200909-deu.jpgதற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.  அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல என்று அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியிருந்த நேர்காணலில்.தெரிவித்திருந்தார்
 

கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?

பதில் : முப்பது வருடகால பயங்கரவாதம், 30 வருட கால யுத்தம் நாட்டின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மாற்றியமைப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. இரண்டாவதாக 1977 காலப் பகுதியில் ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது 2006இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பொருளாதார வழிமுறைகளில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்பட்டிருப்பினும் கூட எமது தேசிய உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

விசேடமாக தேசிய உற்பத்தியை கிராமிய, மாகாண மட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது. தேசிய உற்பத்தியில் 50 சதவீத அதிகரிப்பை மேல் மாகாணமும், 2.9 வீதம் வட மாகாணமும், கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன. இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இவற்றின் பெறுபேறுகளிலேயே தங்கியிருக்கின்றன.

கேள்வி : யுத்தத்தின் பின்னரான சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.

அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல. வேறு நாடுகளில் அகதிகளைப் பராமரிப்பதில் நிலவும் பிரச்சினைகளைப்போல நமது நாட்டில் இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய தீவான எமது நாட்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை நிவாரணக் கிராமங்களில் வைத்து பராமரிப்பதென்பது சாதாரண விடயமல்ல.

முதலில் மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் பிரதான பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான் அப்பகுதிகள் பொரு ளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

அடுத்த கட்டமாக அப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடியதொரு நிலைமை ஏற்படும். மன்னார் மாவட்டத்தில் 45 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. அவற்றில் பல முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் பொலிஸார் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். படிப்படியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தனியொரு அமைச்சினால் மட்டும் செய்துவிட முடியாது. அனைத்து அமைச்சுக்களினதும் முழு ஒத்துழைப்புடனேயே இவ்வாறான பணிகளைச் செய்ய முடியும். வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. அடையாள அட்டை இல்லாமல் அவர்களால் எந்தவொரு தேவையையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு பிரச்சினைகள் அதிகம்.

கேள்வி : பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி?

பதில் : இது ஒன்றும் புதிய விடயமல்ல: 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற்படும் மாகாண சபை முறை 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்துவது 13ஆவது திருத்தத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆயினும் கடந்த 20 வருடங்களாக தமிழ் மொழியை அமுலாக்க முடியாது போய்விட்டது. தற்போதைய ஜனாதிபதி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அதற்கமைய நான் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், பிரத்தியேக முயற்சிகள் ஆகியன காரணமாகவும் அதனை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாகவும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக முழு அளவில் முன்னெடுக்க அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மொழியை அரச கரும மொழியாக முன்னெடுப்பதற்கான அரசியல் தடைகள் முற்றாக நீங்கியுள்ளன.

எனினும் தமிழ் மொழியை அரச திணைக்களங்களில் உரிய முறையில் அமுல்படுத்துவதற்கேற்ற ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தாய்மொழி தமிழாக இருப்பின் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்றிருத்தல் அவசியமாகும். அதுபோல் தாய் மொழி சிங்களமாக இருப்பின் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை கற்றிருத்தல் அவசியமாகும். அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சாதாரண ஊழியர்கள் வரையிலானோர் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

2007 ஜுலை முதலாம் திகதியிலிருந்து அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சம்பள அதிகரிப்புப் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அரச திணைக்களங்களில் இரண்டாம் மொழி தொடர்பாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தெற்கே சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் கற்பிக்கும் அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரச உத்தயோகத்தர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தெற்கில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் அதேவிதமான பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பான்மை சமூகம் முங்கொடுக்கிறது. இதுவே கள யதார்த்தமாகும்.

இந்த வாரம் தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயலாளர் மட்டத்திலான அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார். அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழித் திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அவரையே சாரும். நமது நாட்டில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இதுவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செயலாக அமையும்.

கேள்வி : எப்போதும் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்து வரும் தெற்கில் உள்ள அரசியல் தடைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?

பதில் : அதற்கு நாம் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எமது அரசியல் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் சிறுபான்மையினர் அல்ல என்பதையும் இவ்விடத்தில் கூற வேண்டும். இதுவரை காலமும் நாட்டை ஆண்டுவந்த பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கிடையே இது தொடர்பில் ஒரு இணக்கம் ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்.

தேசியப் பிரச்சினை தொடர்பாக மொழி, மதம், இனம் ஆகிய விடயங்களில் ஒரு இணக்கம் ஏற்படத் தவறியமையும் முக்கிய காரணமாகும். அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவதற்கான காரணம் இந்தப் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கேயாகும். இவ்விடத்தில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்காவது வரவேண்டும்.

கேள்வி : இதற்கு பதின்மூன்றாவது திருத்தம் எந்த வகையில் உதவியாக அமையும்?

பதில் : பதின்மூன்றாவது திருத்தம் புதிய விடயமல்ல. நமது அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அதனைக் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் கடந்த 17 வருடகாலமாக அம் மாகாணங்கள் தவிர்ந்த வேறு மாகாணங்களில் அது செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் கிழக்கில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல், பின்னர் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை இயங்கி வருகிறது.

வடக்கில் ஏற்கனவே நான் கூறியதுபோன்று அனைத்து விடயங்களையும் கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு தெற்கில் இருக்கிறது. முக்கியமாக காணி, பொலிஸ் ஆகிய விடயங்களில் அதிகாரம் தொடர்பான பீதி அர்த்தமற்ற ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் சிறு தொகை காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகும். அப்பிரதேசங்களில் சொற்ப அளவிலான நிலங்களே அரசுக்கு சொந்தமானதாகும்.

கேள்வி : 13ஆவது திருத்தம் தொடர்பில் அரச தரப்பினருக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டமுடியாதுள்ளதே?

பதில் : ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய, விமல் குழு இவர்கள்தான் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மொழிப் பிரச்சினை தொடர்பான எதிர்ப்பைச் சமாளித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது போன்று இதனையும் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே நான் கருதுகிறேன்.

கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாம் 88, 89 களில் இருந்தது போன்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த காலங்களில் நிலவிய யதார்த்த நிலை அது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகளும் மாற வேண்டும். நிச்சயம் மாறும் என்றே நானும் கருதுகிறேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் அந்த மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து புலிகளை ஏசுவதையோ, விமர்சிப்பதையோ விடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட விடுவதே சிறந்தது. அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் அவர்கள் அப்பகுதி மக்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் உண்மையான பிரதிநிதிகளா இல்லையா என்ப தையும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அது வரையில் அவர்களை அப்பிரதேச ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.

கேள்வி : இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?

பதில் : வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஐந்து இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயற்படுவது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரின் மனம் புண்படாதவாறு செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி : வடபகுதி மக்களின் மனங்களைத் தெற்கு எவ்வாறு வெற்றிகொள்ளலாம்?

பதில் : வடக்கில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் தெற்கு மக்களின் கரிசனையிலிருந்தே மக்களின் மனங்களை வென்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை சந்தோஷத்திற்குரியதாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சி அதைத் தூக்கிப்பிடிக்காமல் ஏற்பட்டிருக்கும் சுமுக நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

முப்பது வருட காலமாக இடம்பெறாத சுமுக அரசியல் நிலையை ஏற்படுத்தி அதற்கான களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு, பொது மக்கள், சமூகக் குழுக்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

நேர்கண்டவர் : பி. வீரசிங்கம்

13வது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருந்தபோதும் பல்வேறு தடைகள்

cheif_ministers_meeting.pngஅரசியல மைப்பின் 13வது திருத்த சட்டத் தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதி காரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றை செயற்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (19 ஆம் திகதி) ஹபரண விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு ஆகிய ஏழு மாகாண சபைகளினதும் முதல மைச்சர்கள் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரைநிகழ்த்திய மாகாண முதலமைச்சர்: மாகாண சபைகள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும் மத்திய அரசாங்கத்தினால் அதற்குத் தேவையான நிதி வழங்கப்படா மையினால் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இவ்விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டுள்ளது. அவற்றைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. காணி சம்பந்தமான அதிகார ங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி தற்போது எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு: 28 கிராமங்களில் 1000 குடும்பங்கள் இன்று மீள்குடியமர்வு

101009displacedidps.gifவவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களுள் ஆயிரம் குடும்பங்கள் இன்று (20) தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்படுகின்றன. இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 25ம் திகதி முன்பதாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்ட 35 கிராமங்களில், 28 கிராமங்களுக்கே ஆயிரம் குடும்பங்கள் இன்று அனுப்பிவைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நாலாயிரம் பேரை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நிகழ்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்களென அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியாவில் பல்வேறு கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து உறவினர்களின் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் தங்கியுள்ளவர்களே இன்று தமது சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அரச அதிபர் திருமதி சார்ன்ஸ் தெரிவித்துள்ளார். சொந்த இடம் திரும்புவோருக்கு, அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் உலருணவுப் பொதிகளை வழங்குகின்றது. மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் நாளை (21) திங்கட்கிழமை திறந்துவைக்கப்படுகின்றது. இதுவரை காலம் வவுனியாவில் இயங்கிய இந்த அலுவலகம் தற்போது உரிய இடத்தில் இயங்கவிருக்கின்றது.

இதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எதிர்வரும் 25ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு அனுமதி நாளை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வவுனியாவிலிருந்து காலை கிளிநொச்சி சென்று மாலையில் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு வார காலத்திற்குள் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளுக்கு உதவ 403 டன் தங்கத்தை விற்கும் ஐஎம்எப்!

19-gold-bars.jpgஏழை நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்காக தன்னிடம் உள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்னை விற்கிறது சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப்.  இதன் மூலம் 13 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு, அது ஏழை நாடுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். ஐஎம்எப்பின் இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை அதன் செயற்குழு வழங்கியுள்ளது.

ஏற்கெனவே ஜி 20 உச்சி மாநாட்டின் போது, ஐஎம்எப்பிடமுள்ள தங்க இருப்பை விற்று நிதி ஆதாரத்தைப் பெருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் இப்போது தங்கத்தை விற்பனை செய்து, அதன் மூலம் திரளும் தொகையை ஏழை மற்றும் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வசதியை மேம்படுத்த கடனாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று வாஷிங்டனில் நடந்தது. அதில் கை இருப்பில் உள்ள தங்கத்தில் 403 டன் தங்கத்தை விற்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 186 உறுப்பு நாடுகளில் 85 சதவீத நாடுகள் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. மேலும் கடன் வாங்கிய சில நாடுகள் வட்டி தொகை செலுத்த இயலவில்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வட்டி தொகையை சர்வதேச நிதிக்கழகம் ரத்து செய்வதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தெரிவித்தார்.

ஐஎம்எப்பிடம் தற்போது 3217 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது!

மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் வாக்குறுதி கூர்ந்து கவனிக்கப்படும் – ஐ.நா

170909-pascoe.jpgஇலங்கையின் வடக்கே யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு கொழும்பு திரும்பிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த அகதிகளில் எழுபது சதவீதம் பேர் வரும் நவம்பர் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ளவர்கள் வரும் ஜனவரி மாத முடிவிற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் காப்பாற்றப்படுகிறதா என்பதை ஐ.நா. கூர்ந்து கவனிக்கும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.மன்ற துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கூறியுள்ளார். மேலும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் முகாம்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை என்று உறுதிசெய்வதை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்றாலும்கூட முடிந்த அளவுக்கு சீக்கிரமாக மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

அத்தோடு இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான உதவிப் பணிகளை நிறுத்திக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை தனது கடந்த காலத்துக்கு பதில் சொல்லா விட்டால் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய அமைதி அங்கு ஏற்படுவது சிரமம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியா மீண்டும் முதலிடம்

999cri.jpgடெஸ்ட் போட்டித் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஆஸ்ட்ரேலியா தற்போது ஒரு நாள் கிரிக்கெட் ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் இந்தியா 3-வது இடத்திற்கு கீழிறங்கியது. தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டிங்காமில் நடைபெற்ற 6-வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்ட்ரேலியாவும் புள்ளிகள் அளவில் 127 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளதால் 7-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெறாமல் செய்து விட்டால் ஆஸ்ட்ரேலியா மீண்டும் 3-வது இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

தரவரிசை விவரம்:

ஆஸ்ட்ரேலியா – 127 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா – 127 புள்ளிகள்
இந்தியா – 126 புள்ளிகள்
பாகிஸ்தான் – 109 புள்ளிகள்
இலங்கை – 108 புள்ளிகள்
நியூஸீலாந்து – 105 புள்ளிகள்
இங்கிலாந்து – 102 புள்ளிகள்
வெஸ்ட் இண்டீச் – 78 புள்ளிகள்
வங்கதேசம் – 55 புள்ளிகள்
ஜிம்பாப்வே – 26 புள்ளிகள்.

நாளை நோன்புப் பெருநாள்

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால் புனித ரமழானை 30ஆக பூர்த்திசெய்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமை கொண்டாடுவது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (19) மஃரிப் தொழுகையைத் தொட ர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலை வரும், மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபரு மான மெளலவி உஸ்தாத் ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலை வர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் கூட்டாக இணைந்து ஏகமனதாக உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ் ஷாஸ¤லி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), மெளலவி அரூஸ் உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள் ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ் லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியாக்கள், தக்கி யாக்கள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

flood1111.jpgஎதிர் வரும் நாட்களில் இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென இலங்கை வளிமண்டலவியல்  திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.பி. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளமக்களிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மண்சரிவு, வெள்ளம், இடி மின்னல் மற்றும் சுழற்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நாட்களில் தாழமுக்க நிலை காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக, பொதுமக்கள் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.