2009

2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம்; சிவல் நிர்வாகத்தை ஏக காலத்தில் முன்னெடுக்க நடவடிக்கை

mullai-ga.jpgகிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் அதேநேரத்தில் சிவில் நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக முல்லைத்தீவு கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகக் கட்டடங்களை திருத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட நிர்வாகத்தையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த மாதம் 25ஆம் திகதியும் அடுத்த மாதம் 15ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களை மீளகுடியமர்த்தும் அதே சமயத்தில் சிவில் நிர்வாகமும் தோற்றுவிக்கப்படுமென அரச அதிபர் திருமதி சுகுமார் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்பதாகக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியது பாரிய சவாலான விடயமாகும். அதற்கு முன்பதாக கட்டடங்களின் அமைவிடம் குறித்து அறிந்து அவற்றுக்கான பாதைகளையும் அடையாளம் கண்டு அதன்பின்னர் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அதிபர் கூறியுள்ளார்..

கட்டடங்களைத் திருத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்டு வந்துள்ளதுடன், மக்களைக் குடியேற்றியதும் சிவில் நிர்வாகத்தையும் தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருவதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைத் திறப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அரசாங்கத்துக்கு கடிதம்

210909jail.jpgஇலங் கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மற்றும் அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள் தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எவ்வித விசாரணையும் இன்றி தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது குறித்த அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய இலங்கை அமைச்சர் புத்திரசிகாமணி, இவர்களின் விவகாரம் தொடர்பாக ஒரு அரசாங்ககுழு ஆராய்ந்து வருவதாகவும் அது எடுக்கும் முடிவுன் அடிப்பையில் இவர்கள் ஒவ்வொருவரது விடயமும் தனித்தனியாக கையாளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் அரசியல் கைதிகள் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத போதிலும், விரைவில் இவர்கள் விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

முஸ்லிம் பாடசாலைகள் நாளையே ஆரம்பம்

school-girls.jpgநாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை 23 ஆம் திகதியே ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரமழான் நோன்பையிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று 22 ம் திகதி ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், ரம்ஸான் பெருநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதால் முஸ்லிம் பாடசாலைகளை நாளை ஆரம்பிப்பதென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் ஆலோசனைக்கமைய தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

கிழக்கு இலக்கிய பெருவிழா 24, 25 ம் திகதிகளில்

கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ்.  முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்)  த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

school-girls.jpgபுனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர் மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வே தேர்தல் – நோர்வே நக்கீரா

தேர்தல் 2009 நோர்வேயில் களமாடி 15.09.2009 முடித்திருக்கிறது. இடது, வலது, நடு, சிவப்பு, நீலம், பச்சை, என மக்களைப் பங்குபோட்டுப் பங்குபிரித்து ஜனநாயகமான சனநாயகம் பதில் தந்திருக்கிறது. நாம் எவ்வளவுதான் புலம்பெயர் நிலத்தில் புதைந்தாலும் நாம் பாலர்களாய் தவழ்ந்தபோது நக்கித்தின்ற மண் எமது உடம்பில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சிந்தனை சிறகடிக்க என்நாட்டிலும் இப்படிச் சுதந்திரமாய் மக்கள் வாக்களிக்கும் நிலைவராதா என்ற ஏக்கம் எம் உணர்வுகளை எடைபோடத்தான் செய்கிறது.

norway partiesகட்சிகள்

றோசா பூ: தொழில்கட்சி
நீலத்துண்டு: வலதுசாரிகள்
பச்சை இலை: மத்தியகட்சி
SV: சோசலிச இடதுசாரிகள்
Fr:(அப்பிள்): முன்னேற்றக்கட்சி
Krf: கிறீஸ்தவக்கட்சி
V: இடதுகட்சி

நோர்வேயில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வன்ஸ்திர என்று அழைப்பப்படும் இடக்கட்சி (இடக்கட்சி என்பதற்காக இவர்கள் இடதுசாரிகளாக இருப்பார்கள் என்று எண்ணினால் தவறானது) இம்முறை தேர்தல் தடைவரப்புக்குக் தட்டத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் என்றும் வலதுசாரிகளுடனேதான் கூட்டமைப்பார்கள். தேர்தல் தோல்வியை கருத்திற் கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து லாஸ் ஸ்பூண்கொய்ம் பதவி விலகியுள்ளார்.

பலகாலமாக நோர்வேயில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நாட்டை நல்ல நிலைக்கு முன்னேற்றிய தொழிலாளர் கட்சி சுமார் 35.4 வீதமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 2.7 வீதம் அமோகமான வாக்குக்களைப் பெற்றுள்ளார்கள். ஆளுங்கட்சியில் தொடர்ந்திருக்கும் கட்சிகள் அடுத்தடுத்து வெல்வது கடினம். இந்த உலகம் முழுவதும் ஆடிப்போன பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாய் வென்று, தேர்தலிலும் தம்வெற்றியை நிலைநாட்டிய தொழிலாளர் கட்சிக்கு எம்வாழ்த்துகள்கள். இம்முறை இவர்கள் முக்கியமாக முன்வைத்த விடயங்கள் பாடசாலை, படிப்பு, தொழில் வாய்ப்பு என்பனவாம். ஒவ்வொரு முறையும் தொழிற்கட்சி கூட்டமைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

தொழிலாளர் கட்சியை அடுத்துப் பெரியகட்சியாக வளர்ந்துள்ள முன்னேற்றக்கட்சி (Frp) 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெருங்கட்சியானாலும் எதிர்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பார்களா என்பது கேள்விதான். அவர்கள் நேராகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்களை எதிர்ப்பவர்கள். ஏறக்குறைய துவேசத்தை வளர்ப்பவர்கள் எனலாம். எமது நாட்டைப்போல் வாக்குகளைப் பெறுவதற்காக துவேசத்தை வளர்த்துவிட்டு நாடு என்னவாகி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இந்த வாய்பேச்சு வீரர்கள் அனைவரையும் கூட்டமைப்பாக இயங்க அழைத்தாலும் எந்தக்கட்சியும் இவர்களுடன் இணைய விரும்புவதில்லை. அதற்கு வெளிநாட்டவர்கள் கொள்கையல்ல காரணம். இவர்களிடம் நிரந்தரமான உறுதியான எந்தக் கொள்கையையும் காணவியலாது. அன்று சொன்னோம் உங்களுக்கு இப்பதான் தெரிகிறதா என்று அடிக்கடி கேட்பார்கள். இலகுவாக எதையும் பொறுப்பிலில்லாதபோது பொறுப்பற்றுச் சொல்லலாம். இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவர்களுடன் எந்தகட்சியும் இணைந்து அரசமைக்கவோ எதிர்கட்சியமைக்கவோ விரும்புவதில்லை.

உதாரணமாக; தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தவேளை கட்சித் தலைவர்களின் உரையையும் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியின் தலைவி சீவ் என்பவர் மேடையில் அறைகூவல் விடுத்தார்; நாம் ஏனைய வலதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க விரும்புகிறோம், இடது கட்சியையும் சேர்த்துத்துத்தான் என்றார். அவவே தன்பழைய தலைவரான கார்ல் ஈ காகனை அழைத்துப் பேசுமாறு கேட்டபோது அவர் இடதுகட்சி வேண்டாம் என்று பேசினார். கட்சித்தலைவி வாய்மூடமுன்னரே மறுதலிப்பு. இப்படியான ஒருகட்சி இம்முறை 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் நோர்வேயின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதுதான். இவர்களிடம் வெளிநாட்டவர் எதிர்ப்பு என்பதே முன்னுரிமையாக்கப்படும். இவர்கள் கருதும் வெளிநாட்டவர்கள் நிறமனிதர்கள் அதாவது கறுப்பு, மண்ணிநிறங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பழைய தலைவர் கார்ல் தங்குவதே ஸ்பானியாவில்தான். அவருக்கு அங்கே வீடு உண்டென்றும், நோர்வேயை விட அதிகமாக அங்கேதான் தங்குவார் என்றும் அறியப்படுகிறது. இக்கட்சி எவ்வளவுக்கெவ்வளவு நோர்வேயின் சேமிப்புப் பணத்தை எடுத்து தூதாரித்தனம் செய்ய முடியுமோ அதற்கான வரவுசெலவுத் திட்டத்தையே இவர்கள் முன்மொழிவார்கள். அடிப்படை உணவு விலையை விட சிகரெட், வைன், மது போன்றவற்றின் விலையை குறை என்பார்கள்.

norway parlimentகட்சிகளின் வாக்குறுதிகள்

தொழிலாளர் கட்சி :- சமமான பாடசாலை அனுமதி, போதியளவு அரச உடைமைகள், தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல், எல்லோருக்கும் வேலைவாய்பு வயோதிபர் பாதுகாப்பு என்பனவாகும்.

சோசலிச இடதுசாரிகள் :- சுற்றம் சூழல்பாதுகாப்பு, சமமானவரி அல்லது சிறுகுறைப்பு, அரசபோக்குவரத்துச் சேவையை முன்னுரிமைப்படுத்தல், நீதியான வேலைவாய்ப்பு, பாடசாலை, சமூகஉதவி, தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல்,

வலதுசாரி கட்சி :- வரிக்குறைப்பு, தனியார் மயமாக்கல், தனியால் முதலீடுகளை ஊக்குவித்தல், அரசஉடமைகளை ஏலத்தில் விடுதல், தனியார் பாடசாலைகளை ஊக்குவித்தல், பெருந்தெருக்கள் அமைத்தல், வீதிப்பராமரிப்பு.

முன்னேற்றக்கட்சி :- அகதிகளைக் குறைத்தல், வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்துதல், முல்லா கிரேக்கார் எனும் குறுடிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதத் தலைவனை நாட்டை விட்டு வெளிறேற்றல், அரச உடமைகளை தனியார் மயமாக்கல், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமாக முதலாளிகளுக்குச் சலுகைகள், மாணவர்களின் படிப்புக்கான வங்கிக்கடனை நிறுத்துதல், பெருந்தெருக்கள், வீதிகள் அமைத்துப் பாதுகாத்தல், மது, சிகரெட்டுகளின் விலையைக் குறைத்தல்.

வலதுசாரிகளின் கண்களில் சுற்றம் சூழல் என்பது ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லையோ. மேலும் 2009 தேர்தலில் துவேசக்கட்சியை விழுத்துவதற்காகவே இடதுசாரிகளுக்குப் பல வெளிநாட்டவர்கள் தமது வோட்டுக்களை இட்டார்கள்.

சோசலிச இடதுசாரிகளின் ஒரு பிரதிநிதிதான் எரிக் சூல்கெய்ம். இவர்தான் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தடிகொடுத்து ஓடியவர். இவர் தன்கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சோசலிச இடதுசாரிகளை புறக்கணிக்குமாறும் கம்யூனிஸ்கட்சிக்கு (கம்யூனிஸ்கட்சி/ Red / RV ) வாக்களிக்குமாறும் ஒரு தமிழ்குழு வேண்டுகோள் விடுத்தது. இது சரிதானா என்பதை அலசிப்பார்ப்பது முக்கியமானது.

இந்த கம்யூனிஸ்கட்சி அதி கூடுதலாக ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார். கடைசி காலங்களில் பல ஆண்டுகளாக அவர்கள் நாமமே பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இக்கட்சிக்கு வாக்களிப்பதூடாக எம்தமிழர்களின் வாக்குகள் பெறுமதியற்று விட்டன. காரணம் இக்கட்சியில் ஒருவர் கூட நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லை. இத்தமிழர்களின் வாக்குகள் மற்றைய இடதுசாரிகளுக்கு விழுந்திருந்தால் குறைந்தபட்சம் வாக்குவீதமாவது இடதுபக்கமுள்ள ஒரு கட்சிக்குக் கூடியிருக்கம் அல்லவா? இன்னும் அரசியலில் நாம் தீர்க்க தரிசனமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.

நோர்வேயில் இடதுசாரிகள் கூடுதலாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், வலதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளுக்கும் தம் வாக்குக்களைப் போடுவார்கள். சுமார் 1 அல்லது 2வீதமான மக்கள் மட்டுமே இடதுசாரிகளா? வலதுசாரிகளா ஆட்சியில் அமர்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம்:- தொழிலாளர் கட்சி 2.7 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதேவேளை சோசலிச இடதுசாரிகள் 2.6 வீதத்தால் குறைந்துள்ளார்கள். ஆக 0.1வீதம் மட்டுமே தம்வாக்குக்களை மாறிப் போட்டிருக்கிறார்கள். இதே போன்றே வலதுசாரிகளிலும் 0.9 வீதமானவர்கள் மட்டும் தம்வாக்குக்களை மாறிப் போட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 0.1 சதவீதமான மக்களே தேர்தல் முடிவகளைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மேலும் துவேசக்கட்சியான முன்னேற்றக் கட்சியின் அபரீதமான முன்றேற்றம் நாட்டை போரொன்றிற்கோ கலவரம் ஒன்றிற்கோ இட்டுச்செல்லும் என எண்ணத் தோன்றுகிறது. இலங்கையில் 70கள் போல் துவேசப்பின்னணி தலைதூக்கும் போது அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தூக்கிய நிலை கண்முன் விரிகிறது. வெளிநாட்டவர்களின் அதிக வரவு இக்கட்சிக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. அதிலும் வெளிநாட்டவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர் வருகை அதிகரிப்பும் துவேசத்தை அதிகரிக்கிறது. ஐரோப்பியர் பார்வைக்கு வெள்ளையர்களாய் இருப்பதால் அவர்களை வெளிநாட்டவர்கள் என்று இக்கட்சி கணிப்பதில்லை. இந்த கிழக்கு ஐரோப்பியரே முக்கியமான பெரிய சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள். இக்கட்சி எதை எடுத்தாலும் கறுப்பு வெளிநாட்டவர்களையே தாக்குவார்கள். முக்கியமாக முஸ்லீம்களே இவர்களின் சத்துருக்கள்.

இக்கட்சியின் வளர்ச்சி எம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்கு நாகரீகத்தில் இருந்து மனிதவதை வரை நாம் முன்னோடிகளே. எமது சுவடுகளைதான் இவர்கள் தொடர்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பெரும்பான்மை வாக்குக்களை ஏன் தொழிற்கட்சி பெற்றது என்றால்; இப்பொருளாதார நெருக்கடியிலும் நாட்டை உடையவிடாது வங்கி வட்டிகளைக் குறைந்து மக்களிடையே பணப்புழக்கத்தை சீர்படுத்தியதும், துவேசக்கட்சியை நிறுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் தொழிற்கட்சி தெரிவுசெய்ததும், வலது பக்கத்தவர்களிடையே நிரந்தமில்லாத கூட்டுத்தலைமை என்பதெல்லாம் தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இத்தொழிற்கட்சி வரி உயர்த்துவது வழக்கம்.

இன்னும் நாலு வருடங்களின் பின்னரும் தேர்தலில் துவேசக்கட்சி இதைவிடப் பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிலவேளை கூட்டமைக்காமலே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த மீண்டும் இன்று கைது

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கிஇ சேதம் விளைவித்ததாக  தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம  மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.

கடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கடும் நிலநடுக்கம்

அஸ்ஸாமில் இன்று பிற்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக ஷில்லாங் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அஸ்ஸாமில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், இன்று மதியம் 2.23 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு வடமேற்கே 125 கி.மீ தொலையில், பூமிக்கடியில் 7.2 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஒபாமா முன் ஐ.நாவில் உரையாற்றும் லக்னோ சிறுமி

21-yugrathna.jpgநியூ யார்க்கில் அமெரிக்க அதிபர்  ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுப்புற சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்றுப் பேசவுள்ளார். அவரது பெயர் யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா. லக்னோவில் உள்ள புனித பிடலிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாளை நடக்கும் கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக புவி வெப்பமாதல் குறித்து பேசவிருக்கிறார்.ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறார் யுக்ரத்னா.

இந்த கூட்டத்துக்கு ஐநா பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.

ஜனாதிபதி நாளை வாகரைக்கு விஜயம்

slpr080909.jpgஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வாகரை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை வைபவ ரீதியாக திறந்து வைக்கவிருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மகா வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அங்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

2004ஆம் ஆண்டு சுனாமியின் போது வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதிகள் சேதமடைந்திருந்தன. சுனாமி மீள் கட்டுமான திட்டத்தின் கீழ் இவ்வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய யுனியன் முன்வந்திருந்தது.

புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு இணைந்து ஐரோப்பிய யுனியனின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலை கட்டிடத் தொகுதி,  நவீன தொழில் நுட்பத்துடன்,  மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முன்மாதிரி பாடசாலையாக அமைந்துள்ளது என ஐரோப்பிய யுனியன் தெரிவிக்கின்றது.

இம்மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கல்வி பயிலும் 700இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள். முழுமையான வசதிகளுடன் நூலகம்,  விஞ்ஞான ஆய்வு கூடம், கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம்,  விளையாட்டு மைதானம் ஆகியன வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வித்தியாலக் கட்டிடத் திறப்பு விழாவில் ஐரோப்பிய யுனியனின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ்கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,  மத்திய தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்