27

27

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் !

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான உர மானியம்15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிப்பு !

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, இந்த மானியம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதியானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்காக களத்தில் இறங்கி பணி செய்ய எண்ணுகிறேன் – மனோ அணியிலிருந்து விலகினார் கே.டி. குருசுவாமி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர்,

 

“நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம்.

 

இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சியோடு இதுவரையில் வகித்து வந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து, இன்றோடு உடனடியாக விலகிக்கொள்கின்றேன்.

 

தங்களோடும், கட்சியோடும் பயணித்த 13 ஆண்டு கால அரசியல் பாதையில் என்னை வழி நடத்தியதற்கும் நெறிப்படுத்தியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கட்சியின் சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவது முழுமையாக தடை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு !

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய;

“.. பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையின் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்.” என கூறிய பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை முழுமையாக நிறுத்துமாறும் உத்தரவு வழங்கியுள்ளார்.