22

22

சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இலங்கை நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டும் – முதலாவது உரையில் அனுர குமார திசாநாயக்க!

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றது என புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.

அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.

 

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள்.

 

எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

 

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை அனுரவிடம் கையளிக்கிறேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் நெகிழ்ச்சி உரை !

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு,

 

வணக்கம்

அன்புள்ள பிரஜைகளே,

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது.

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியானார் அனுரகுமார திஸாநாயக்க – சங்கை ஊதிக்கெடுத்தார் தமிழ் பொதுவேட்பாளர் !

சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானித்த இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமாரதிஸாநாயக்க இலங்கையின் 10ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதலாவது சுற்று வாக்கெடுப்பில் 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்று 5,634,915 வாக்குகளை பெற்றுக்கொண்ட அனுரகுமார திஸாநாயக்க விருப்பு வாக்கு அடிப்படையிலும் அதிக வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இதேவேளை இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாகும் முதல் இடதுசாரி ஜனாதிபதியாகவும் – 50வீதங்களை கடக்காது ஜனாதிபதியாகும் முதல் ஜனாதிபதி வேட்பாளராகவும் அனுரகுமார திஸாநாயக்க காணப்படுகின்றார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

இதேவேளை சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் உள்ளார். இந்த நிலையில் தாங்கள் 05 லட்சம் வாக்குகள் பெற்றால் அது தமிழரின் தனித்தேசிய அவாவை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாக அமையும் என கூறி தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் சங்கு சின்னத்தில் களமிறக்கப்பட்ட  பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்குகளையே பெற்று கொண்டதுடன் தமிழர்கள் பெருந்திரளாக வாழும் எந்த பகுதிகளிலுமே  தமிழ் பொதுவேட்பாளரால் அதிக வாக்குகளை பெற முடியவில்லை. இந்த நிலை யாழ்ப்பாணம் தொடங்கி மட்டக்களப்பு வரை காணப்பட்டது.

தபால் மூல வாக்குக்கெடுப்புக்கு முதல் நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு வடக்கில் குறிப்பாக யாழில் ரணிலுக்கு சற்று அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தாலும் தெற்கில் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்று வருகின்றது. தெற்கில் அனுராதபுரத்தில் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் தபால் வாக்குகளில் முன்னணியில் நிற்கின்றார். ஏனைய மாவட்டங்களான குருநாகல், இரத்தினபுரி, கேகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஐம்பது வீதத்திலும் அதிகமான தாபால் வாக்குகளைப் பெற்று வருகின்றார்.

வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்று வருகின்றனர். தமிழ் பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸவும் வாக்குகளைப் பெற அரியநேத்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து, அவர்களை ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலிலும் இது இவ்வாறே அமையும் என்பதை தேசம்நெற் ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வி வருகின்றனர். இவர்களுக்கு இனிமேல் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் எவ்வித தகுதியும் கிடையாது. தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தமிழ் தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் பயணிப்பது மிக அவசியமானதும் அவசரமானதுமான தேவை. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. இதுவரை நாட்டை சூறையாடியவர்கள் இலகுவில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவதும் கடினமானதாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் 15 தேர்தல் மாவட்டங்களில் அனுர குமார திசாநாயக்கவுக்கு முதலிடம் – செல்லுபடியற்ற வாக்குகளில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கு முதலிடம்!

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.

 

இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

 

அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பட்டியலில் முழுமையான இலங்கை தீவிலும் அதிகப்படியான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கொண்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விருப்பு வாக்கு நோக்கி நகர்த்தப்பட்டது இலங்கை ஜனாதிபதி தேர்தல் !

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவிதித்துள்ளது.

இதற்கமைய, விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெளியாகும் தேர்தல் முடிவுகள் – வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளின் அரைவாசியை கூட பெறாத தமிழ்பொதுவேட்பாளர் !

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகின்றார். அண்மைய நிலவரப்படி 43.73 சதவித வாக்குகுளுடன் அனுரகுமார முன்னிலை வகிப்பதுடன் 30.24 சதவீத வாக்குகுளுடன் சஜித்பிரேமதாஸ இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேவேளை தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு பாரிய ஆதரவு இருப்பதாக பிரச்சார காலத்தில் கூறப்பட்ட போதிலும் கூட தமிழர்பபகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி சஜித்பிரேமதாஸ பெற்ற வாக்குகுளின் அரைவாசியை கூட தமிழ்பொதுவேட்பாளரால் பெறமுடியவில்லை என்பதையும் வாக்கு விகிதங்கள் தெளிவாக காட்டிநிற்கின்றன.

Vanni District – Total
வன்னி மாவட்டம் – மொத்தம்
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – kopay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Udupiddy Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Manipay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Kankesanturai Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Chavakachcheri Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி
May be an image of 4 people and text
Jaffna District – Kilinochchi Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text