25

25

தென்லெபனான் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல் !

தென்லெபனான் மற்றும் பெக்காவின் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்லெபானின் நெபட்டியா நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்லெபானை சுற்றியுள்ள நகரங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் !

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு புறப்பட தடை விதிக்கப்பட்ட வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ..? – வெளியாகியுள்ள பின்னணி !

தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (24) அவரது பதிவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன.
அந்த செய்தியில், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும்போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும், தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். – மக்களுக்கான உரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க !

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.

நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.

தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது.

அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம். பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம்.

செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம். தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு.

அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம் சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒரு கண்ணோட்டைத்தை உருவாக்க முடியும்.

அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும் மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அதையும் தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம்.

அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு ‘நான் இலங்கையர்’ என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை. அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும் அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம்.

அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்கு நம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம்.

சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்கு நாம் செயற்படுவோம். அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்று விசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காக பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம்.

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன்.

அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன.

மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன.

அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்! ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..! இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிட நடவடிக்கைகள்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.

அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும்.

 

ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும்? அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு, ஒழிந்துச் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம்.

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.

ஜனாதிபதி இதுதொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் குவிக்கப்படும் அமைச்சர்களின் வாகனங்கள் – சலுகைகள் இல்லாத அமைச்சரவை விரைவில்!

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த வாகனங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களிலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் படி, புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால், எஞ்சும் வாகனங்களை ஜனாதிபதி என்ன செய்வார், எதிர்காலத்தில் அவை எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவேளை மக்களுக்கு சேவை செய்யும் பணியாக அரசியல் மாற்றப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்ததுடன் அமைச்சர்களின் வாகன இறக்குமதி- அது தொடர்பான பாவனை தொடர்பிலும் அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்கள விடயங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பொலிஸாரின் மீதான மக்களின் நம்பிக்கை குன்றியுள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

 

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் பொலிஸாரின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது எமது கடமையாகும்.

 

இந்த முயற்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது, அரசியல் செல்வாக்கு இன்றி பொலிஸ் திணைக்களம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் வலியுறுத்தினார்.

ரணில் விக்ரமசிங்க வழங்கிய மதுபான விற்பனை லைசன்ஸ்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கிய அனுர குமார திசாநாயக்க!

ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம்!

வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில்,  தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று(24)  பொறுப்பேற்றுள்ளது.
அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக பணியாற்றிய பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை  நேற்றையதினம்(23) இராஜினாமா செய்துள்ளதாக  வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அந்தவகையில், வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.