15

15

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – PAFFREL

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்தது பிரித்தானியாவின் மிகப்பெரும் இரண்டு தசாப்த கால சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விவகாரம் !

2 தசாப்தங்களுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஏழு ஆண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பிரித்தானியாவின் மிகப்பெரிய விசாரணையின் கீழ் வெள்ளிக்கிழமை (13) கடுமையான சிறைத்தண்டனைகளைப் பெற்றனர்.

 

2000 களின் முற்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரோதர்ஹாமில் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு தற்சமயம் ஏழு முதல் 25 ஆண்டுகள் வரை சித்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரித்தானியாவின் ஒரு தசாப்தகால விசாரணையில் இந்த வழக்கு மிகப்பெரியது ஆகும்.

 

சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர்கள் 11 மற்றும் 15 வயதுடையவர்களாக இருந்ததாகவும், குற்றம் நடந்த காலத்தில் இருவரும் பராமரிப்பு அமைப்பில் நேரத்தைச் செலவிட்டதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.

 

1997 மற்றும் 2013 க்கு இடையில் ரோதர்ஹாமில் ஆண்களின் கும்பல்களால் குறைந்தது 1,400 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் மற்றும் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் திகதி சென்றடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.

 

ஒன்பது நாள்கள் அந்த நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

 

ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது. யாரையும் ஏற்றாமல் ஸ்டாா்லைனா் விண்கலம் மட்டும் கடந்த வாரம் பூமி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தேசமாய் ஒன்றுபடுவோம் – யாழ் பல்கலை சமூகம் அழைப்பு !

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

 

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

 

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.

 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது.

அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

 

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

 

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம் !

 

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

 

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

 

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

 

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

 

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

 

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ !

ஜனாதிபதி தேர்தல் அன்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.