08

08

இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய கோரி ஓவல் முன்பு தமிழர்கள் போராட்டம்!

இலங்கை – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (08) இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை  தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை என்றும், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இலங்கை போர்க்குற்றம் இழைத்த நாடு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும், இலங்கையின் தற்போதைய அரச தலைவரை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் ஏற்கனவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிவிட்டதால் நான் பதிலளிக்க தேவையில்லை – அனுர குமார திசாநாயக்க

யாழ்ப்பாணத்தில் தான் ஆற்றிய உரை குறித்த விமர்சனங்களிற்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை கிளறியமைக்காக ரணில்விக்கிரமசிங்கவே மன்னிப்பு கோரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்” – அங்கஜன் இராமநாதன் காட்டம் !

 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா,  வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீ லங்கா’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும்.இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா?  அல்லது வீழ்ச்சியடைவதா ?  என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்,

தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு !

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

 

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் அனுரகுமார திசாநாயக்க பேசியிருக்க மாட்டார் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வடக்கில் உள்ள மக்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தென்னிலங்கை மக்கள் பின்பற்றும் அதே முறையை வடக்கு மக்களிடமும் பின்பற்றுமாறு கடந்த நாள் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச“2010 இல் சரத் பொன்சேகாவுக்கு  நீங்கள் வாக்களித்தீர்கள், தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு  வாக்களித்தார்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, 2015 இல் நீங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தீர்கள் தென்பகுதி மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள்.எனினும்,  உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

2019 இல் நீங்கள் சஜித்துக்கு வாக்களித்தீர்கள் ஆனால் தென்பகுதி மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள். எனினும், கோட்டாபய ராஜபக்ச உங்களை துன்புறுத்தவில்லை. இந்த முறையை கடைப்பிடியுங்கள், உங்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்” என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அநுரகுமார கூறினார்.

இதற்கு பதிலளித்த ரணில்,அநுர குமார திஸாநாயக்க, தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதற்காக வடமாகாண மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக அவர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள், எனவே சஜித்துக்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க யாழில் இனவாதமாக பேசியது கண்டிக்கப்பட வேண்டியது என பலரும் தங்கள் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தி வரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது “இனவாதத்தை தூண்டும் விதமாக அனுரகுமார திசாநாயக்க பேசியிருக்க மாட்டார். அதை நான் நம்பவில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு நான் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி கர்பி டி லெனரோல் ஆயர் தலைமையில் 160 மாணவர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு தாம் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை எனவும், மதத்தை எப்போதும் அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்து, அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து மத மக்களும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்ட ஆயர் பேரவையின் சிடொனின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி கிர்பி டி. லனரோல் அருட்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த தசாப்தத்தில் அப்போஸ்தலிக்க ஆயர் பீடத்திற்கு அருட்தந்தை லனரோல் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.

நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார்.

இலங்கையில் கிறிஸ்தவ சமூகத்தின் வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பல நூற்றாண்டுகளாக நாட்டில் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்டார்.

தமது மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அனைத்து மதத்தினருக்கும் சமமான வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மத நடைமுறைகளின் எதிர்காலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என இரண்டு முக்கிய சவால்களை சுட்டிக்காட்டினார்.

 

யொஹெதஸ் குட்டன்பேர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் போன்ற தொழில்நுட்பம் மத போதனைகளை பிரபலப்படுத்துவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மதங்களுக்கு ஏற்படுத்தக் கூடிய புதிய சிக்கல்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

 

குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்கள் தொடர்பான அண்மைக்கால பிரச்சினைகளுக்குரிய நிகழ்வுகளை எடுத்துரைத்துடன், இப்பிரச்சினைகளைத் தீர்க்க மத மற்றும் சமூகத் தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதே சிறந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மதப் பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பான தகவல்களை முன்வைத்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மக்கள் எந்தவித மத, இன பாகுபாடும் இன்றி இன்னல்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார். இக்கட்டான நேரத்தில் பொறுப்பேற்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்டிய சாகல ரத்நாயக்க, அவரது அமைதியான மற்றும் நம்பகமான தலைமைத்துவத்தையம் பாராட்டினார்.

மத்திய வங்கியின் சுதந்திரம், புதிய அரச நிதி முகாமைத்துவ சட்டங்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலங்களை நிறைவேற்றியமை போன்ற குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புகள் பற்றி குறிப்பிடப்பட்ட சாகல ரத்நாயக்க, நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டார்