16

16

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை – சிறீதரன் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது.

மத்திய குழுவில் கடந்த முதலாம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை என நான் எழுத்து மூலமாகவும் வழங்கி இருக்கிறேன். நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் எழுத்து மூலமாக அறிவித்து விட்டு தான் பிரித்தானியா சென்று இருந்தேன்.

6 திகதி நான் மீளவும் இலங்கைக்கு திரும்புவேன். ஏழாம் திகதி வரை கூட்டத்தினை வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அவ்வாறு கூட்டங்கள் வைத்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படாது என்று பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனக்கு உறுதிமொழியையும் தந்திருந்தார்.

தற்போதைய தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவை 26 ஆம் தேதி சந்தித்து பேசுகின்ற போது நாங்கள் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றமாட்டோம் சில விடயங்கள் தொடர்பாக பேச இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி 2024. 8. 18ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு கூடி தீர்மானம் எடுக்காத நிலையில் மத்திய குழுவில் அவசர அவசரமாக யாருடைய தேவைக்காக யாருடைய தீர்மானத்தை எடுத்தார்கள். சஜித் பிரேமதாசவுக்காக அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அந்த தீர்மானம் எடுத்த பின்னர் நான் கடிதம் மூலமாகவும் தெரிவித்திருந்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையில் நாங்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருந்தேன். அதனை இப்போதும் கொண்டிருக்கிறேன். இன்றும் இந்தக் கூட்டத்தில் அதனை வலியுறுத்தி என்னுடைய கருத்து இவர்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது என்பதனை பதிவு செய்யுமாறு தெரிவித்து இருக்கிறேன்.

ஸ்ரீதரன் இதனை ஏற்கவில்லை அதாவது ஸ்ரீதரன் சஜித் பிரேமதாசாவுக்கு மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க உட்பட்ட தென்னிலங்கையினுடைய வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு அந்த கூட்டத்திலிருந்து என்னுடைய நேரம் முடிந்ததும் புறப்பட்டேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது..? வெளியானது தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம்மிக்க உயர்மட்ட கலந்துரையாடலையடுத்தே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

 

இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.

 

அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.

 

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபீ தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் இடம்பெற்றன.

 

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.

 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயற்படுதல் வேண்டும்.

 

13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

 

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும்.

 

சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.

 

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும்,

சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.

 

2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். ‘எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்’ என்பதையும் குறிப்பிட்டார்.

 

‘இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ‘ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.’ தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.’

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.

 

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் ” எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்!

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்

 

வெற்றி பெற்று 50 நாட்களுக்குள் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அனுர குமார திசாநாயக்க

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

பன்னல பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது. ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம். இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

 

இப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.” என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு !

அமெரிக்காவில்குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை அங்கு பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா கோல்ப் கிளப்பில் கோல் விளையாட டிரம்ப் சென்றபோதே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்,எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.