September

September

முடங்கிய நூற்றுக்கணக்கான ஆடைத்தொழிற்சாலைகள் – ஆட்சி மாற்றத்தின் பின்பும் திணறும் பங்களாதேஷ்!

பங்களாதேஷில் உள்ள நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக வேலையைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உரிய நேரத்தில் ஊதியம், சிறந்த ஊக்கத்தொகை வழங்கப்படாமை மற்றும் தன்னிச்சையான பணிநீக்கங்களை நிறுத்தக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் வருகை போனஸ் மற்றும் உணவு கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அதேபோல் பல்வேறு குழுக்களுக்கு இடையேயான ஆட்குறைப்பு மற்றும் ஊதிய பாகுபாடு மற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதில் இருந்து விடுபட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.

இந்த இடைக்கால நிர்வாகத்தில் ஹசீனாவின் நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.

ஒரு முன்னணி பங்களா செய்திச் சேவையின் படி, ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தொழிலாளர்களின் நடவடிக்கைகளால் 100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை வளாகங்களில் அரசாங்கம், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை நிறுத்தியுள்ளது.

வார இறுதிக்குப் பிறகு சனிக்கிழமையன்று (14) தொழிற்சாலைகள் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாவிட்டால், பங்களாதேஷின் ஆடைத் துறை ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்று (14) நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) நீங்கள் வெகுவாக வாக்களித்தால் அதற்கு மதிப்புண்டு மாண்புண்டு. அதை வைத்து தமிழ் மக்களின் அடையாளமாக காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்கு கூறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எமக்கு இழைக்கும் இன்னல்களை தடுக்கலாம். இவர் இத்தனை இலட்சம் வாக்குகளைப் பெறறவர் என அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கும்.

பெரும்பான்மை அரசியல் வாதிகளை ஆதரிப்பது தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மையினைத தரும் ஆனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென தொடங்கிய பகிஷ்கரிப்பாளர்கள் இப்போது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்க சொல்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி பற்றிய இலங்கை சிறுபான்மை மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது..? இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி , இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் 158 முறைப்பாடுகளும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன்,  சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இலஞ்சம் மற்றும்  ஊழல் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.

மேலும், இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பும் விடுத்தது. எனவே, இந்தக் கட்சியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது.
வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அந்தப் பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்குச் சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரிய கஜேந்திரன் கைதாகி விடுதலை!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு நேற்று (13-) கிளிநொச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும். – அனுர குமார திசாநாயக்க

நமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது. மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும்.

ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, மக்களும் சுகபோகமாக வாழ வேண்டும். எம்மைப் போன்ற வறுமையான நாடுகள், முன்னேற வேண்டுமெனில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். இன்று எமது கல்வி முறைமையானது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாரமாக மாறியுள்ளது.

 

ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் நடந்தே பாடசாலைக்கு சென்று விட முடியும். ஆனால் இங்கோ பேருந்துகளிலோ வேனிலோ நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 3 கிலோ மீற்றருக்குள் சிறந்த பாடசாலையை மாணவர்களுக்காக நிறுவுவோம்.

 

நகரத்திற்கு ஒரு வகையான கல்வியும் கிராமத்திற்கு ஒரு வகையான கல்வியும் கற்பிக்கப்படும் கட்டமைப்பை மாற்றி, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம். 2030 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஐ.டி. பொறியியலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

18ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை !

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும்.தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திரள்வார்களா தமிழர்களும் – முஸ்லீம்களும்..! வெளிப்படும் மக்களின் குமுறல்கள்..!

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திரள்வார்களா தமிழர்களும் – முஸ்லீம்களும்..!
வெளிப்படும் மக்களின் குமுறல்கள்..!

10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பது போல்,கொழுந்து, விவசாயிகளின் மிளகு மற்றும் பால் ஆகியவற்றிற்கு நியாயமான மற்றும் நிலையான விலையை வழங்க நாங்கள் தெளிவாக பாடுபடுவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

சிறு தேயிலை உரிமையாளர்களுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு திட்டத்துடன் வேலை செய்கிறோம்.

மேலும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், எனது அன்பான தாய் தந்தையரே, அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம்.

இக்கட்டான நேரத்தில், சவாலான காலக்கட்டத்தில், ஒரு குழுவுடன் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கை எடுத்தோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு முன்னால் புள்ளிடியிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லுமாறு நான் உங்களை அழைக்கின்றேன்” என்றார்.