02

02

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முயற்சி – இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகள்!

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் இது தொடர்பில் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற போது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டாபயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும், தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.