08

08

தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை தலிபான்கள் வழங்கவேண்டும் – ஐ.நா வலியுறுத்தல் !

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.

என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார். ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் ஒரே வருடத்தில் 400 யானைகள் பலி !

மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 395ஆக உள்ளது.

இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

யானையின்-மனித மோதல் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2019ஆம் ஆண்டில் 207 யானைகள், 2020இல் 318 யானைகள் மற்றும் 2021இல் 375 யானைகள் இறந்துள்ளன.

இதேவேளை சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலைய அறிக்கையின்படி, இலங்கையில் தினமும் ஒரு யானை இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை – ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம்

ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம் அதிகப் பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என்று தெரிவித்துள்ளது.

இவ்வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரியில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என iNews இணையத்தளம் தெரிவித்துள்ளது.