03

03

ஐ.எஸ் அமைப்பு அங்கத்தவருடன் தொடர்பு – காத்தான்குடியில் ஒருவர் கைது !

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

“நான் ரணில் விக்கிரமசிங்க ஆதரவாளன். விடுதலைப்புலிகளை புதுப்பிக்க முயற்சிக்கவில்லை.” – சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் பிறந்து, 2003ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று, தற்போது திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவருக்கு எதிராக கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இந்திய புலனாய்வுப்பிரிவு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்பேரிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை இரத்துச்செய்யவேண்டும் என்றும் குறித்த பொதுமகன் சென்னை நீதிமன்றை கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், தாம் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தம்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் 2020 ஆண்டிலும் தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அந்த வழக்கு தொடர்வதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது கால்பந்து நாயகன் பீலேவின் உடல் !

உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.