2023

2023

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவானது ”PUCSL”க்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

செவ்வாய் கிரகத்தில் நீர் – சீனா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

 

இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை !

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சில மீம்கள் வைரலாகி வருகின்றன.

 

 

சபாலிங்கம் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனால் படுகொலையும் செய்யப்பட்டார் !

சபாலிங்கம் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனால் படுகொலையும் செய்யப்பட்டார் ! சபாலிங்கம் 30 ஆண்டுகள் நினைவு ! மற்றும் பாரிஸ் படுகொலைகள் !

 

இது தொடர்பில் தேசம் திரையில் கலந்துரையாடப்பட்ட காணொளியை காண  கீழேயுள்ள Link ஐ Clickசெய்யவும்.

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – கண்டுகொள்ளாத மோடி அரசு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த நட்சத்திரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மற்ற விளையாட்டு பிரபலங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யாதது தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டிய 7 மல்யுத்த வீராங்கனைகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அவர் மீது டெல்லி போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் குடிநீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இதே போல அவர் மீது குற்றம் சுமத்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என்றும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

முல்லைத்தீவை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் !

இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்டு மெரைன் பொலிசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவலின் பெயரில் மெரைன் பொலிசார் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அரிச்சல் முறை கடற் பகுதியில் இலங்கை முல்லை தீவு தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உள்ளிட்ட ஏழு பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வந்தவர்களை மெரைன் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வைத்து விசாரணை செய்யும் பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழி இன்றி இலங்கை முல்லைதீவு தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த நியூட்டன் வில்லியம், வனிதா, தோனி, ஜோன், விஷால், ஷாலினி, அதிஸ், ஆகிய ஏழு பேர் இலங்கையில் இருந்து இலங்கை பணம் கொடுத்து மர்ம படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சென்று இறங்கியது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மரைன் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து இன்று வருகை தந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 244 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர்.! – அரசியல்வாதியின் காடழிப்பை பகிரங்கப்படுத்தியற்காக இலக்கு வைக்கப்படுகிறாரா ஆசிரியர் திருமகன்..?

கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் வவுனியாவின் தரணிக்குளம் கணேஷ் வித்யாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக பணிபுரியும் திருமகன் என்பவர் பாடசாலை மாணவிகளிடம் தவறான வகையில் வாட்ஸ்அப் இல் பேசி உள்ளதாகவும் – தொடர்ச்சியாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது தொடர்பான சில Screen shot தேசம் இணையதளத்துக்கும் கிடைத்திருந்தது. கிடைத்திருந்த அடிப்படை தகவல்களைக் கொண்டு தேசம் இணையதளம் இது தொடர்பான மேலதிக தகவல்களை திரட்ட ஆரம்பித்திருந்தது.

 

முதலில் அந்த ஆசிரியர் தொடர்பான விடயங்களை அலசி இருந்த நிலையில் குறித்த ஆசிரியர் கடந்த வாரம் வவுனியாவின் கட்டையர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த காடழிப்பு தொடர்பில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியதுடன் இது தொடர்பான பல பிரச்சனைகளையும் தனிப்பட்ட ரீதியில் அவர் எதிர்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் நேற்றுமுன்தினம் (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த காடழிப்பு  விடயத்தில் வவுனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கு.திலீபனும் தொடர்புபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆசிரியர் தரப்பிலும் – இது தொடர்பில் நாம் விசாரித்த வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த ஒரு ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆசிரியர் தொடர்பில் வலயக்கல்வி பணிமனையில் நல் அபிப்பிராயம் உள்ளதாகவும் குறித்த வலயக்கல்வி பணிமனை ஆசிரியர் நம்மிடம் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் உலாவும் தவறான செய்திகளாலும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதையும் அறியமுடிகிறது.

இதே நேரம் இந்த பிரச்சனையுடன் தொடர்புடைய தமிழ் பாட ஆசிரியரான திருமகன் தொடர்பில் குறித்த பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கக்கூடிய சில இளைஞர்களிடம் – அவருடைய வகுப்பில் கல்வி கற்ற சில மாணவிகளிடமும் நாம் தேசத்தின் ஊடாக தொடர்பு கொண்டிருந்தோம். அவரிடம் கடந்த வருடம் கல்வி கற்று இருந்த உயர்தர மாணவி ஒருவர் எம்மிடம் குறித்து ஆசிரியர் தொடர்பில் கூறிய போது “பொதுவாகவே தமிழ் பாட ஆசிரியர்கள் என்றால் இரட்டை அர்த்தமுடைய வார்த்தைகளை வகுப்பில் பாவிப்பார்கள். ஆனால்  திருமகன் ஆசிரியர் ஒரு தடவை கூட அவ்வாறான வார்த்தைகளை பிரயோகித்ததில்லை. திடீரென கோபப்படும் சுபாவம் உடைய சேர் தான். ஆனால் நடத்தைகள் பொருட்டு எனக்கும் என்னுடைய நண்பிகளுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் உறுதியாகவே சொல்கிறேன் நம்முடைய ஆசிரியர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்.” என குறித்த மாணவி உறுதிப்படக் கூடியிருந்தார். குறித்த ஆசிரியர் பணி புரியும் கிராமத்து இளைஞர்கள்ஜசிலரிடம் வினவிய போதும் மேற்குறித்த மாணவி கூறிய தகவல்களுடன் ஒத்த தகவல்களையே எங்களுக்கு வழங்கினர்.

இங்கு மிகப் பிரதானமான கேள்வி எங்கு என்ன நடந்தால் என்ன..? நாம் உண்டு நம்முடைய வேலை உண்டு என கடந்து செல்லும் இன்றைய அரச அதிகாரிகளிடையே தன்னுடைய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய தலையீட்டுடன் சுமார் 12 ஏக்கர் காடு  அழிக்கப்பட்டதை அந்த ஆசிரியர் சுட்டிக் காட்டியதற்காக அவர் இவ்வாறு அவதூறு படுத்தப்படுகிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கு எதிராகவும் – குறித்த ஆசிரியருக்கு ஆதரவாகவும் அனைவரும் நிற்க வேண்டியது அவசியமாகிறது.

குறித்த ஆசிரியர் தொடர்பான அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ள சமூக வலைத்தளங்கள் போலியான அடையாளங்களுடன் கூடியவையாக உள்ளமையும் – அதே நேரம் அவை உறுதிப்படுத்தப்படாத நபர்களால் இயக்கப்படுவதாலும் – குறித்த ஆசிரியர் காடழிப்பு தொடர்பான பிரச்சனையை பகிரங்கப்படுத்தியதன் பின்பாகவே இந்த WhatsApp screen shot பரப்பப்பட்டுள்ளதாலும் / பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாளுமே இது இது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்படுகிறது என்ற செய்திகள் அடிக்கடி நாம் காணும் – கடந்து போகும் செய்திகளாகியுள்ளன. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை எடுத்து குறித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி இருந்தார். இது போல் பல இடங்களில் பல பிரச்சனைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் குற்றவாளிகள் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த நிலையில் எப்பொழுதும் தேசம் இணையதளமானது இதற்கு எதிரானதாகவே இருக்கும். அதே நேரம் ஒரு தவறுமே செய்யாது சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் பாதிக்கப்படும்போது அதனை கண்டு கொள்ளாது செல்லவும் முடியாது.

இந்த காடழிப்பு விவகாரத்திலும் – குறித்த ஆசிரியர் மீதான அவதூறு பரப்பப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் – இதனால் குறித்த ஆசிரியர் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. போலீசில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் போலீசாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என அறிய முடிகிறது. சட்டத்தை பாதுகாத்து –  போலீஸ் நிலையங்கள் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இலங்கை உள்ளதால் போலீசார் இது தொடர்பில் விரைந்து கவனம் எடுத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன் வர வேண்டும். ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்காது விடின் – அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர் !

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.

இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ல் தீா்ப்பு அளித்தது. தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26ம் திகதி (இன்று) நிறைவேற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த தீர்ப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தங்கராஜுசுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையா (46), இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார். போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் – நியாயம் வழங்க கோரி இத்தாலியில் போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க கோரி இத்தாலி நாபோலியில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

Demonstrations demand justice for victims of Easter attacks i

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இலங்கையர்கள் கலந்துக்கொண்டதுடன் இத்தாலிய பிரஜைகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இத்தாலியில் வசிக்கும் அருட் தந்தை டிரோன் மிஹிந்துகுலசூரிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி ஜெப ஆராதனையையும் நடத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஆராதயைில் கலந்துக்கொண்ட நிலையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.

தோண்டத்தோண்ட பிணங்கள் – பாதிரியாரின் ஆலோசனையால் சொர்க்கம் செல்ல உயிரை விட்ட அப்பாவி மக்கள் !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த குழுவினரிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர். அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து உள்ளனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து உள்ளனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார். இதுவரை இதுபோன்று 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி,  ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.