2023

2023

“உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – நந்தலால் வீரசிங்க

உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் உள்ள தனியார் துறையினருக்கு நீண்ட வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்திடத்தில் தமது வணிகத்துறை நிலைத்திருப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

குறிப்பாக, தமது துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றார்கள். இறக்குமதி வரிச்சலுகைகளை வழங்குமாறு கோருகின்றார்கள்.

உண்மையில் உள்நாட்டின் தனியார் துறையினர் நிலைத்திருப்பதாக இருந்தால் அவர்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, உலகளாவிய ரீதியில் உள்ள சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்துவதற்கான ஏதுவான நிலைமைகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுப்பதையே நோக்காக கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உலக சந்தையை அணுகும்போது அதில் காணப்படுகின்ற சவால்களுக்கு முகம்கொடுத்து போட்டித்தன்மையான களத்தின் ஊடாக முன்னேறுவதன் ஊடாகவே தனியார் துறையினர் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்திருக்க முடியும்.

குறிப்பாக, இந்தியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் அவ்விதமான முறைமைகளையே பின்பற்றுகின்றன. ஆகவே, இலங்கையின் தனியார் துறையினரும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தை வாய்ப்புக்களை திட்டமிடல்களுடன் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் வெற்றிகளை அடையாலம் என்றார்.

“இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனாலும் கொலையின் பின்னணியில் இந்தியாவே உள்ளது.” – ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனால் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா நாட்டு பிரஜை. ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் நிலைமை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை – இஸ்ரோ தொடர்ந்தும் முயற்சி!

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

 

எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்ட் 23ஆம் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

 

அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி’, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.

 

தொடர்ந்து, அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஒக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

 

தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத ஆரம்பத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலர் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயற்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

 

ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (22) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது – யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் கட்டளை !

த.வி.பு உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

 

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

 

இதில், தியாகதீபம் திலீபன் நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

அத்துடன், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

 

நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவமெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதற்காக நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், பொலிஸார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி வினவியபோது, பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலை தடுக்க நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமென கோரினர்.

 

இந்த மனு தொடர்பில் இன்று (22) மதியம் 1.30 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து நீதிமன்றம் அறிவித்தது.

மீண்டெழும் தமிழரின் கல்விப் பாரம்பரியம் – இலங்கையில் முன்னிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் !

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆணடுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாகாண மற்றும் மாவட்டங்களுக்கான பல்கலைகழக மாணவர்களின் தெரிவும் – சித்தி வீதத்தையும் அடிப்படையாக கொண்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முதலிரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

கடந்த காலங்களில் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன.

 

இது பற்றிய முழுமையான விடயங்களை தரவுகளுடன் பேசுகிறது தேசம் திரை..;

 

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

இந்தியா – கனடா மோதல் எதிரொலி – இடைநிறுத்தப்பட்ட விசா சேவை !

இந்திய கனடா மோதலையடுத்து கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

 

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், சமீபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கனடா பொது பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், கனேடிய நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே இராஜங்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

“சீனச்சார்பு – இந்தியச்சார்பு ஆகிய எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களே எமக்கு முக்கியம்.” – கடல்சார் நாடுகளுக்கான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 

கார்னகி எண்டோவ்மென்ட் (Carnegie Endowment)மற்றும் சசகாவா மன்றம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தியதோடு, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் இன் கொள்கை ஆராய்ச்சி தொடர்பான சிரேஷ்ட உப தலைவர் டென் பெயரினால் (Dan Baer) இது நெறிப்படுத்தப்பட்டது.

 

பிரதான உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தலையிடுவதற்கு, இந்து சமுத்திர மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் விரும்பவில்லை என்றும், இந்த நாடுகள் தமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உட்பட அவர்களின் முதன்மையான விடயங்களில் கவனம் செலுத்தி, தமது நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பேண முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் தமது நாடுகளின் இறைமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளடக்கிய க்வொட் (Quad) நாடுகள் மற்றும், சீனாவின் இலக்குகளுடன் தொடர்பில்லாத இந்து சமுத்திரத்தின் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் தமது சொந்த முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றைமதிக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கையும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். சீனாவின் எழுச்சியானது APEC மற்றும் ASEAN போன்ற பிராந்திய கட்டமைப்பிற்குள்ளேயே நடந்ததாகவும், அதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 

அண்மைக்காலமாக இந்தக் கட்டமைப்பிற்கு அப்பால் மாபெரும் வல்லரசுப் போட்டி விரிவடைந்து வருவதால் உறுப்பு நாடுகள் மத்தியில் கவலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

 

தெற்கு பசுபிக் சமுத்திரம் மற்றும் இந்துசமுத்திரம் ஆகியவை, பெரும் மூலோபாய மதிப்பைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தெற்கு பசுபிக் பிராந்தியம் அமெரிக்க கடற்படைக்கு இன்றியமையாத கேந்திரமையமாகும் என்றும், இரண்டாம் உலகப் போர்காலத்தின் போது இந்துசமுத்திரம்முக்கிய பங்காற்றியது என்றும் தெரிவித்தார்.

 

பவளக் கடல் (The Coral Sea) மற்றும் மிட்வே போரின் போதும்இரண்டாம் உலகப் போரின் போதும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதும் மற்றும் அட்மிரல் யமமோட்டோவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதும் ஹவாய் உட்பட இந்ததென் பசுபிக் பிராந்தியத்தில் தான் என்பதைஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

 

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை இதன்போது விளக்குவதற்காக, வின்ஸ்டன் சர்ச்சிலின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, “இலங்கையை கைப்பற்றுவது என்பது இந்து சமுத்திரத்தில் அதிகாரத்தை இழப்பதாகும்”என்றும் குறிப்பிட்டார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம், குறிப்பாக சீனாவின்சவால்களால் எடுத்துக்காட்டப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது பிராந்திய இயக்கம் மற்றும் ஒத்துழைப்பை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பிய சக்திகள் மற்றும் நேட்டோவை தொடர்புபடுத்துவதற்காக G7 குழு எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததுடன், பிரான்ஸ் மட்டுமே அதற்கு ஆதரவளித்தது என்றும், இந்த சம்பவம் இந்து சமுத்திர ரிடம் சங்கத்தின் (IORA) விதிகளை மீறுவதாகக் கருதப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்து சமுத்திரத்தின் மேற்பரப்புப் போர் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் வகையில் நீர்மூழ்கிக் கப்பல் போர் அச்சுறுத்தல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்து சமுத்திரரிம் சங்கத்திற்குள் (IORA) தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தீவு நாடுகள் தொடர்பிலான பாதுகாப்பு உரையாடல்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அந்த நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மேலும்சுட்டிக்காட்டினார்.

இலங்கை உட்பட பல தீவு நாடுகள் இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, அமெரிக்கா மாலை தீவில் தூதரகமொன்றைத் திறப்பது போன்ற அண்மைக்கால முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆசியான் அமைப்பின் தலையீடு, ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் BRICS+உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அதிகார சமநிலை உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மாறும் பூகோளநோக்கு, தீவு நாடுகளின் சுதந்திரத்தைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதுடன், மேலும் இந்து சமுத்திரரிம் சங்கம் (IORA), ஆசியான் (ASEAN)மற்றும் BRICS+ ஆகிய அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இங்கு,  ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டை வர்த்தகத் துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைவதாகத் தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்து வருவதாகவும், சர்வதேச அரங்கில் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையேயான தொடர்பை இனங்கண்டு, இரு பிராந்தியங்களின் சிறிய தீவு நாடுகளுக்கிடையில் செயலூக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, ‘இந்து-பசுபிக்’ கருத்தியலுக்கு இந்து சமுத்திரரிம் சங்கம் (IORA), இன் தேவை அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தில் தீவு நாடுகளின் சுதந்திரம்,  அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, அவர்களின் தனிப்பட்ட முன்னுரிமைகளின் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ. 63,912 தேவை.” – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்ய ரூ. 15,978 தேவை என மேற்படி கணக்கெடுப்பு கூறுகிறது.
தேசிய ரீதியில் இந்தத்தொகை ரூ. 16,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2023 இல் மேற் கொண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதச் செலவு ரூ. 63,912 ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இந்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத் தொகை ரூ. 17,352 ஆகும் .

மொனராகலை மாவட்டத்தில் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு பதிவாகியுள்ளதுடன் அதன் பெறுமதி ரூ. 15,278.ஆகும் .

அதிகளவிலான கதிர்வீச்சு – ஐபோன் 12 பாவனைக்கு தடைவிதித்த பிரான்ஸ் !

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய ஃப்ரிக்வென்சி முகமை (AFNR) தெரிவித்துள்ளது. அதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் இதை நிறுத்த முடியும் என்றும். அப்படி அதை செய்ய தவறினால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 போன்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரான்ஸ் ஜூனியர் அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்துள்ளார். இதற்கு 2 வாரம் காலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

 

உலகளாவிய கதிர்வீச்சு தரநிலைக்கு உட்பட்டு ஐபோன் 12-ன் இயக்கம் இருப்பதாக உலக நாடுகளின் முகமைகள் தெரிவித்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. இருப்பினும் தாங்கள் மேற்கொண்டு பரிசோதனை, ஆப்பிள் மேற்கொண்ட சோதனைக்கு முற்றிலும் மாறானது என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.