26
26
கிறிஸ்துமஸ் தினமான சனியன்று மியன்மார் இராணுவத்தினர் கிராம மக்களை சுற்றிவளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இவ்வாறு பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.
சம்பவத்தினால் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான குழுவின் இரு உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் கிழக்கு மோ சோ கிராமத்திலேயே இந்த சம்பவம் நடத்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து சனிக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இரண்டு ஊழியர்கள் சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதையும் அது உறுதிபடுத்தியுள்ளது.
நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு இராணுவம் கவிழ்த்ததில் இருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது. பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறையில் 1,300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பேராயர் எமரிடஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு, நமது தேசத்தின் துக்கத்தின் மற்றொரு அத்தியாயமாகும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.
1931 ஆம் ஆண்டு கிளர்க்ஸ்டோர்ப்பில் பிறந்த அவர், 1984 இல் தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அவரது பங்கிற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1975 ஆம் ஆண்டில் ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரலின் டீனாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின தென்னாப்பிரிக்கர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




