02

02

யாழில் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா !

யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தைச் சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்தது.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இந்த நிலையில் தற்போது இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – இந்தியா உட்பட 29 நாடுகளில் ஊடுருவல்!

இந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன.

குறிப்பாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.