16

16

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது.” – ஜீவன் தொண்டமான்

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்ட நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரபத்தனை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை நிர்வாகம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கொழுந்து பறிப்பதே கடினமாக செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.

துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களைவிட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும். கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை.

மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில்  நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

அமெரிக்காவை அடுத்து சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அவுஸ்ரேலியா !

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர புறக்கணிப்பாக அறிவித்ததில் அமெரிக்காவுடன்  அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

பீஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்புவதில்லை என்ற முடிவை பைடன் நிர்வாகம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சீனாவுடனான உறவு முறிவைக் காரணம் காட்டி, அவர்களது தூதுவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நிகழ்வைப் புறக்கணிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாக  அந்நாட்டு ஒலிபரப்புக் கழகம் (ஏ.பி.சி) தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன் கருதியே இதனை செய்வதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா மீதான பீஜிங்கின் சொந்த இராஜதந்திர முடக்கம், சீனத் தலைவர்களிடம் நேரடியாக மனித உரிமைகள் குறித்த தனது கவலைகளை  தெரிவிக்க முடியாததால், விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் அதிகாரிகளின் முடிவிற்கு ஊட்டமளித்ததாக மோரிசன் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில்  வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். ஆனால் நிர்வாகம், அரசாங்க அதிகாரிகளை விளையாட்டுகளுக்கு அனுப்பாது என்று கூறினார்.

இந்த நடவடிக்கை, ஜின்ஜியாங்கில், குறிப்பாக உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, கட்டாய உழைப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பாக, சீனா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது என சி.என்.என்  செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வொன்றில்,  சீனாவில் மனித உரிமை மீறல்கள் வழக்கம் போல்  இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புவதாக சாகி கூறியுள்ளார்.

இதற்கிடையில், பீஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 இராஜதந்திர புறக்கணிப்பு குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை முழுமையாக மதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சபை (IOC) தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் இருப்பு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் முற்றிலும் அரசியல் முடிவாகும், IOC அதன் அரசியல் நடுநிலைமையை முழுமையாக மதிக்கிறது. அதே நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளும், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என  ஐ.ஓ.சி, தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா !

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு பயணங்களுக்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் அதேவேளை சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்குவதாகவும் சஜிட் ஜாவிட் கூறினார்.