15

15

சிங்கள மொழியில் விசாரணைகளுக்கான அழைப்பாணை – ஏற்க மறுத்த மனோகணேசன் !

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும், தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி மனோ ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பீக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும், குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை.

இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன். அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள், இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும், நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள், இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில், என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும், நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். அப்புறம் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன். ஆனால், அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும்.

“நினைத்ததை விட ஒமிக்ரோன் வேகமாக பரவுகிறது.” – உலகச் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

ஒமிக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

இதுவரை ஒமிக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.

இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விட ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்படாமலேயே பரவியிருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

ஒமிக்ரோன பரப்பும் நோய் மிதமானது என முடிவுக்கு வரவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்

“ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடுகிறார்கள்.” – யாழ்.மாநகர சபை தொடர்பில் கஜேந்திரகுமார் விசனம் !

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.

ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.

அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் இருக்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.

இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனெனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே , மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நெடுங்கேணியில் துப்பாக்கிச்சூடு – சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு !

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய  பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.

விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில் உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதனடிப்படையில்  ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே  உயிரிழந்துள்ளதாகவும் எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இந் நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறை சம்பளம் வழங்கியதா..? – பாதுகாப்பு செயலாளர்

சஹ்ரான் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறையினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

“நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார்.” – இரா.சாணக்கியன்

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து இன்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவரை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யாழ்ப்பாணத்துடன் தொடர்புகளை பேண விரும்புகின்றோம்.” – சீனா தூதுவர்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார். எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்,

இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா..? என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.

யாழ்.மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும்,  ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும்,  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21  உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13  உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விதி, வீதிகளில் விளையாடுகின்றது! – ஒரு மாணவியும் அவளின் கனவுகளும் வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கி ஒரு மாதம்!!!

இன்றைக்கு டிசம்பர் 15 காலை வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஏ9 வீதியில் லிற்றில் எய்ட் அமைப்பினால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டது. லிற்றில் எய்டில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வெளி மாணவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீதிப் போக்குவரத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கி அமைதியான முறையில் இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நவம்பர் 15 காலை 8:15 மணிக்கு கல்லூரிக் கனவுகளோடு மஞ்சள் கடவையில் பாடசாலையை நோக்கி கடந்த மாணவி மதுசாளினி திருவாசகம் (17) பாதசாரிகள் கடக்கின்ற கடவையிலேயே வாகன விபத்தில் கொல்லப்பட்டாள். அப்பதின்ம வயது மாணவியின் நினைவாக விபத்து நடந்த அந்த இடத்தில் லிற்றில் எய்ட் மாணவர்கள் இந்த விழிப்புணவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம் கிராமப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கற்று சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற மூன்று மாணவிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தரம் கற்க அனுமதிபெற வந்த போதே இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. தனது மகளை விறகுவெட்டி விற்ற பணத்தில் படிக்க வைத்த தந்தையின் தலையில் பேரிடி.

இலங்கையின் வீதிகள் மரண வீதிகளாகிக் கொண்டிருக்கின்றது என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வீதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மரணங்கள் வரை சம்பவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2020ம் ஆண்டில் இல்கையின் வீதிகளில் 3590 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்தானவையாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வயதுடையோராகவும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கின்றனர்.

காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

காண்டீபனின் மறைவு அக்குடும்பத்தின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஜயமில்லை. வீபத்துக்களினால் உயிரிழந்த வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் கடன்வாங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர் பாதசாரிகள். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

லண்டன் சரேயில் வசிக்கின்ற முருகையா சங்கரப்பிள்ளை 2014 இல் தாயகத்திற்குச் சென்றிருந்த போது வீதியோரமாக நடந்த சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்தர் மோதியதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுமூன்று இடத்தில் என்பு முறிவு ஏற்ப்பட்டது. அவர் யாழ் நொதேர்ன் மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்து பலத்த கஸடங்களுக்கு மத்தியில் பிரித்தானியா திரும்பினார். டீப் வெயின் துரொம்போசிஸ் என்ற இதய – குருதி அழுத்த நோயுடன் இரத்தம் கசிய கசியவே லண்டன் திரும்பி உடன் லண்டன் கிஹ்ஸ்ரன் மருத்துவமனையிலும் பின் கிஹ் ஜோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டு அடுத்த 12 மாதங்கள் வீட்டில் வைத்து மருத்துவ தாதி ஒருவர் சென்று பார்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் முற்றாக குணமடைய மூன்று ஆண்டுகள் எடுத்தது. இச்சம்பவம் ஊரில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் உயிரிழந்து இருப்பார் என்றார் முருகையா. அதிஸ்ரவசமாக உயிர் தப்பி இருந்தால் உடல் ஊனமடைந்திருக்க வேண்டி வந்திருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.)இ பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள்இ வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தைஇ வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமைஇ பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.