16

16

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 359 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

sri-lanka-railway.jpgபுதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தமை உட்பட பல்வேறு திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தியதையடுத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் கடந்த வருடத்தில் 359 மில்லியன் ரூபாவினை மேலதிக வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இவ்வருடத்தில் 5000 மில்லியன் ரூபா வருமானம் கிட்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

2008ம் ஆண்டில் ரயில்வே திணைக்களம் 3671 மில்லியன் ரூபாவையும் 2009 ஆம் ஆண்டில் 4020 மில்லியன் ரூபாவையும் வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது 359 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டில் மேலதிக வருமானமாகப் பெற முடிந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இவ்வாண்டில் 5000 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் வகையில் ரயில்வே திணைக்களம் புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கிணங்க இதுவரை காலமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்வே காணிகளைக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனைக் கூடங்கள், கடைகள், சிறிய வியாபார நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

பாவனைக்கு உதவாத இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை விற்பனை செய்தல் வர்த்தக விளம்பரப் பலகைகளுக்கான அனுமதி வழங்கல், புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தல் உட்பட பல்வேறு வழிகளிலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

இலங்கைக்கு தெற்கே கடலுக்கடியில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்குக்கும், தென் கிழக்குக்கும் இடையிலான திசையில் கொழும்பிலிருந்து 1155 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலுக்கடியில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பூகற்பவியலாளர் நில்மினி தல்வெல தெரிவித்தார்.

கடலுக்கடியில் சுமார் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று அதிகாலை 2.03 மணியளவில் 6.00 ரிச்டர் அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அவர் கூறினார். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எதுவிதமான பாதிப்புமே ஏற்படவில்லை.

அதனால் சுனாமி அச்சுறுத்தல் குறித்த முன்னெடுச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஜப்பானின் வடபகுதியில் 6.6 ரிச்டர் அலகிலும், கிழக்கு இந்தோனேசியத் தீவான ‘மலு க்கு’வுக்கு அருகில் 7.00 ரிச்டர் அலகிலும் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவான தாகவும் பணியகம் அறிவித்திருந்தது.