(19 -22 தொடக்கம் நவம்பர் 2009ல் தமிழ் தகவல் நடுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு சூரிச்சில் நடந்து முடிந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பங்குபற்றிய மாநாட்டைப் பற்றி ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. இதன் உண்மை நிலையை பலரும் அறிந்து கொள்வதற்காக ‘மீட்சி’யின் சார்பில சில கேள்விகளை தமிழ் தகவல் நடுவத்தின் நிறைவேற்று செயலரான திரு வரதகுமார் அவர்கள் முன் வைத்தோம் அவர் கொடுத்த பதில்களை கீழே காணலாம்.)
1.சமீபத்தில் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பங்கு பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதனை தமிழ் தகவல் நடுவம் ஒழுங்கு செய்திருந்தது என ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது உண்மையானால் இதை கூட்டியதன் நோக்கம் என்ன?
ஏறத்தாழ கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களையுமே பாழடித்து சிதறடித்து விட்டது. அனைத்து மக்களும் பவீனப்படுத்தப்பட்டு தமது உரிமைகளை இழந்து, சலுகைகளை நம்பி வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த கொடூரமான போரினால் எந்த இனமுமே பயனடையவில்லை!. யாருமே வெற்றி பெறவில்லை!. மிஞ்சியது எல்லாம், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியும் உயிர் உடமை இழப்புகளும் அவலங்களும் ஏக்கங்களுமே!
யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தமிழ்பேசும் சிறுபான்மை சமூகங்கள் என்ற ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் இன்னல்கள் அழிவுகள் ஆகியவற்றுக்குள் அகப்பட்டு அவதியுற்று வாழ்கிறார்கள். தமது தனித்துவங்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். பலர் அன்றாட வாழ்விற்கே அல்லாடிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற ஏக்கத்திலும், எதிர்காலத்தில் நம்பிக்கையின்மையிலும் வாழ்கிறார்கள். போர் முடிந்தாலும், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், ஜனநாயகம், மனித உரிமைகள், வன்முறையற்ற வாழ்வு, அடிப்படை அரசியல் அபிலாசைகள் ஆகியவை இன்னமும் தொடர்ந்து எட்டாக் கனிகள் ஆகிவிடுமோ என தமிழ்பேசும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்த்தான் நாம் கட்சி, கொள்கை பேதங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் அரசில் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அனைவரையும் அழைத்திருந்தோம்.
இப்பொழுது சிறீலங்கா ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்து நிற்கிறது சிறுபான்மையினங்கள் அலட்சியப்படுத்தப் பட்டதால் நாட்டை விட்டு ஓடியும், இடம் பெயர்ந்தும், முகாம்களில் அல்லலுற்றும், சிறைச்சாலைகளில் வாடியும் வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டடிருப்பதை நாளாந்தம் நாம் காண்கிறோம். தொடர்ந்தும் பெரும்பான்மை அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது தனது மேலாதிக்கத்தையும் பார பட்சத்தையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் சிறுபான்மைக் கட்சிகளிடையே உள்ள சிறு வேற்றுமைகளைத் தூண்டியும், உபயோகித்தும் அவர்களை பிரித்தும், சிறுபான்மையினரை இரண்டாந்தரப் பிரஜைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. இவற்றிலிருந்து மீள்வதற்கும் மக்களின் விடிவிற்காகவும் சிறுபான்மையினத்தின் வாழ்வாதார விருப்புகள், மொழி, மதம், அரசியல் சம்பந்தமான உரிமைகள் ஆகியவற்றை அடைவதற்கும் ஒரு வன்முறையற்ற புது அணுகுமுறை தேவை என்பதனையும் அதற்கேற்ற சந்தர்ப்பமும் இதுவே எனவும் உணர்ந்தோம்
வடக்கு- கிழக்கு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள், இன்னல்கள் ஆகியவற்றிக்கான நிவர்த்திகள், அவர்களின் உரிமைகள், அபிலாசைகள் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகளை எப்படி ஒரு பொது வேலைத்திட்டத்துடனும், அணுகு முறையுடனும், முன்னெடுக்கலாம் என்பவை பற்றி, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் ஒரு சுயாதீனமானதும், சுமுகமானதுமான சுற்றாடலில் கலந்து உரையாடுவதற்கும், வேறுபாடுகளை விலக்கி சில ஒருமைப்பாடுகளையும் இணக்கங்களையும் எட்டவும், எதிர்காலத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்தையும் அணுகு முறையையும் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் திறந்து ஆராய்வதற்கும், நீண்டகால நோக்கில் இனங்களுக்கிடையான நல்இணக்கத்திற்கும் அரசியல் சமூகம் சம்பந்தமான நம்பிக்கையான கட்டமைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எய்தவும் இந்த மாநாடு வழிசமைக்கும் என்ற நோக்கங்களுடன் தான் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.
மேலும் எதுவித அரசியல் அழுத்தங்களும் இல்லாதிருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தாமாநாடு இலங்கைக்கு வெளியே ஒழுங்கமைக்கப்பட்டது. இங்கு வருகை தந்திருந்த அனைவரும் தத்தம் கருத்துக்களை சுயாதீனமாகவும், பரஸ்பர புரிந்துணர்வோடு தெரிவிக்கவும், பரிமாறவும் இந்நிகழ்வு வாய்ப்பளித்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்துவதற்கு பல ஆய்வுகளை முன்னெடுத்து TICயில் காலத்துக்கு காலம் நடைபெற்று வரும் சமூக ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் வெளிவரும் தகுந்த கருத்துக்களை உள்வாங்கி, எம்முடன் தொடர்பில் உள்ள இலங்கையிலும் வெளியேயும் வாழும் சமூக அரசியல் செயலாளர்களின் (activists) ஆலோசனைகள் பெற்று, இதில் பங்குபற்றுவோரை தொடர்பு கொண்டு இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தி, அவர்களின் அனுமதியை பெற ஒழுங்கமைப்புக்கான வெவ்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, பல மாதங்கள் ஆகிவிட்டன.
முதலில் இதனை லண்டனில்தான் நடாத்துவதாக இருந்தோம். ஆனால் சில நடைமுறைப் பிரச்சனைகளால் சுவிற்சிலாந்துக்கு மாற்றவேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட சுவிஸ் அதிகாரிகளின் உறுதுணையுடன் இதனை ஒழுங்குபடுத்த முடிந்தது.
2.தமிழ் தகவல் நடுவம் தனியாக இதை சாதித்திருக்க முடியாது எனவும், இதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கக் கூடும் எனவும் ஊகங்கள் எழுந்துள்ளன? இதன் உண்மை நிலை என்ன?
கண்டிப்பாக இந்நிகழ்வை தமிழ் தகவல் நடுவம் தனியாக நின்று சாதித்திருக்க முடியாது. இதன் பின்னணியில் நின்ற சக்திகள் வேறு யாரும் இல்லை. நல்நோக்குடனும், நல்ல சிந்தனைகளுடனும், மக்களை மனதார நேசிக்கும் தனிநபர்களே கூடிய பங்காளிகளாவார்கள். தம்மை இனங்காட்டாது நாம் எடுத்த முயற்சியினைத் தரளவிடாது முன்னெடுக்க ஊக்குவித்த சுயநலமற்ற இத்தனிமனிதர்கள் இருக்கும் வரை மேலும் பல காரியங்களை சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இவர்களைவிட International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quietயைச் சேர்ந்த சிறப்பாய்வு அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஆவர்.
இக் கலந்துரையாடல் இலங்கைவாழ் மக்களது, முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஜனநாயக முறையில் வென்றெடுக்க வழியமைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன. மேலதிக TIC பிரதிநிதிகளின் போக்குவரத்து செலவுகள் இல்கையிலிருந்து வருகை தந்த சிலரது தொலைபேசி, உடுப்புச் சலவை செலவுகள் போன்றவற்றிக்கு தனியார் பண உதவிகளை நாடினோம்.
இதைவிட இங்கு வருகை தந்ந சில பிரதிநிதிகள் தம் சொந்தச் செலவிலேயே பயணச் சீட்டுகளை வாங்கி வந்தார்கள் என்பதும் தங்குவதற்கான செலவினையும் தாங்களே பொறுப்பெடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.
மேலும் இக்கலந்துரையாடல் குறிப்பிட்டபடி நல்ல முறையில் சிறப்பாய்வு அறிஞர்களது உதவியுடன் திறமையுடன் நடந்ததால் இம் முயற்சியை மேலெடுத்துச் செல்லத் தாம் தயாராக உள்ளோம் என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
3.இக் கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? அவற்றிலிருந்து எடுக்கப்பட முடிவுகள் அல்லது தீர்மானங்கள் யாவை?
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு கவலையான உணர்வு நிலவியதின் பின்னணியிலேயே இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.
ஒரு திறந்த நோக்கு, பரஸ்பர மரியாதை, ஆக்கபூர்வமான விவாதம் எனும் அடிப்படையிலேயே இக் கூட்டம் நடைபெற்றது. பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால, இடைக்கால, குறுகியகால ஆதங்கங்கள் பற்றிய தமது கவலைகளை பகிர்ந்து கொண்டனர். இதில் எல்லோருக்கும் ஏற்புடையதான யாவரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வினை உருவாக்குதல் பற்றியும் ஆராயப்பட்டது. அத்துடன் தற்போதுள்ள பிரச்சினைகளான இடம் பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், காணாமல் போயுள்ளோர், இராணுவ மயமாக்கல், சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகியவை பற்றியும் கலந்துடையாடப்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் மாண்புடனும், பாதுகாப்பாகவும் தமது வசிப்பிடங்களுக்கு சென்று வாழ ஏதுவாக அவர்களுக்கு தேவையான வீட்டுவசதிகள், வாழ்வாதார உதவிகள் ஆகியவற்றை அவசரமாக செய்து கொடுக்க வேண்டிய அவசியத்தையும் அவை ஒரு சுயாதீனமானதும் அதிகாரம் உள்ளதுமான ஒரு சிவில் அதிகாரத்தின் மேற்பார்வையில் நடைபெறவேண்டிய தேவையையும் ஆராய்ந்தனர்.
மாநாட்டின் முடிவில் பங்கு பற்றிய அரசியல் கட்சிகள் யாவும் கீழ்க்கண்ட இணை அறிக்கையை வெளியிட்டன.
இணை அறிக்கை:
தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் நாம் ஏகோபித்த எமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழிசெய்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தை ஆமோதித்து, சகல தமிழ்மக்களின் பிரதிநிதிகளிடையே ஒரு பொது மேடையை உருவாக்குவதற்கு எமது ஆதரவை உறுதி செய்கிறோம்.
தமிழர், முஸ்லீம்கள், இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஆகிய மூன்று பிரத்தியேகப் பிரிவினரையும் உள்ளடக்கியதே தமிழ்பேசும் மக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
வேறுபட்டதும் வித்தியாசமானதுமான அடையாளங்களும், அக்கறைகளும், நிலைப்பாடுகளும் வெவ்வேறு கட்சிகளுக்கிடையே உண்டு என்பதை மதிக்கிறோம்.
தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் சிலபிரச்சனைகளும் அவற்றை அணுகும் முறைகளிலும் வேறுபாடு உள்ளதை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஒரு நீதியான, நிரந்தரமான, அரசியல் தீர்வுக்காக சமூகத்தின் சகல பகுதியினரையும் உள்ளடக்கிய ஒரு மாண்புள்ள மதிப்புள்ள சமாதானமான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என உறுதி செய்கிறோம்.
ஏற்றுக்கொண்டு எமது கலந்துரையாடலை தொடர்வோம் என் உறுதி செய்யும் பெயர்கள்.
திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி – தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி
திரு பெரியசாமி சந்திரசேகரன் -மலையக மக்கள் முன்னணி
திரு டக்ளஸ் தேவானந்தா- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
திரு அப்துல் றாஃப் ஹக்கீம் -சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
திரு முகமது ஹிஸ்புள்ளா – அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
திரு மனோ கணேசன் – ஜனநாயக மக்கள் முன்னணி
திரு குலசேகரம் மகேந்திரன் – தமிழீழ விடுதலை இயக்கம்
திரு சிவசுப்பிரமணியம் நந்தகுமார் -ஈழப் புரட்சி அமைப்பு
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
திரு சுரேஸ் பிரேமச்சந்திரன்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
திரு R சம்பந்தன் – தமிழர் தேசியக் கூட்டமைப்பு
திரு சிவநேசதரை சந்திர காந்தன் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
திரு மாவை S சேனாதிராசா – இலங்கைத் தமிழரசுக் கட்சி
திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழீழ விடுதலைக் கழகம்
திரு திருநாவுக்கரசு சிறீதரன் – பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
திரு ஆறுமுகம் தொண்டமான் -இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.
4.இக்கூட்டத்தைப்பற்றி முன் கூட்டியே எவ்வித அறிவித்தல் கொடுக்காமலும் கூட்டம் நடைபெறும்போது ஊடகவியலாளர்க்கு அனுமதி மறுத்ததிற்கும் காரணம் என்ன?இதனால் பல சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்த மாநாட்டை நாம் ஒழுங்கு செய்வதில் சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்ப்பட்டன. அதன் காரணமாகவே நாம் ஊடகங்களின் பங்களிப்பை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பங்குபற்றியோரின் பாதுகாப்பு பற்றிய சுவிஸ் அரசாங்கத்தின கணிப்புக்களையும் கவலைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன் இம்மாநாடு ஊடகங்களினால் ஒரு அரசியல் மேடையாக்கப் படுவதையும் நாம் விரும்பவில்லை.
ஆனால் ஊடகங்களை முற்று முழுதாக தடைசெய்வது எமது நோக்கமாக இருக்கவில்லை. நாம் பங்கு பற்றியோரினதும் சுவிஸ் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு பற்றிய கவலையையும் ஊடகங்களின் அனுமதித் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டி இருந்தது.
இருப்பினும் ஒவ்வொரு கூட்ட முடிவிலும் கூட்டத்தில் பங்குபற்றியோர் ஊடகங்களையோ அன்றி சாதாரண மக்களையோ சந்திப்பதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. தினமும் அவர்களை தமிழ் உடகங்கள் உட்பட பலர் வந்து சந்தித்தனர். நண்பர்களும் தமிழ் மற்றும் சிறீலங்காவில் உள்ள ஊடகங்களும் கூட்டத்தில் பங்கு பற்றியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளாந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டுள்னர் என்பதனை நாம் அறிவோம். அரசியல்வாதிகள் தம் ஆதரவாளர்களை சந்தித்து கூட்டத்தின் நோக்கம் பற்றி ஆராய்ந்தும் அங்கே பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். எனவே இம்மாநாடு ரகசியமாக நடாத்தப்பட்டது என்று கூறிவிட முடியாது.
தமிழர் தகவல் நடுவம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காகவே உழைத்துள்ளது. மக்களுக்கு நாம் யார் என்பதும் என்ன செய்கிறோம் என்பதும் தெரியும். இது ஒரு திறந்த அமைப்பு. இங்கே ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை சிறீலங்காவில் வாழும் எல்லா சமூகத்தின் சகல கூறுகளுடனும் நாம் தொடர்பு வைத்துள்ளோம். இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தமையே எமக்குள்ள மதிப்புக்கு சான்றாகும்.
நாம் பல்வேறு போராளிக் குழுக்களுக்கோ அல்லது உளவு நிறுவனங்களுக்கோ துணைபோவதாக அல்லது அவர்களின் முகமூடிகளாக (fronts) செயற்படுவதாக பழிசுமத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எமக்கு ஒன்றும் புதிதன்று. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்தில்லை. நாம் சாதாரண மக்களில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களே எங்களை மதிப்பீடு செய்யும் புத்திசாதுரியம் நிறைந்தவர்கள்.
இந்த நிகழ்வின் பின்னணியில் எதுவித உள் அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை. எந்தவித அரசியல் சக்திகளும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களும் இருக்கவில்லை. உங்களுக்கு எம்மால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்ட, தெளிவாக்கப் பட்டதிற்கு அப்பால் வேறு எந்த நோக்கங்களோ நிகழ்ச்சி நிரல்களோ அமைப்புக்களோ இல்லை. நாம் பங்கு பற்றியோர்களது அரசியல் நிலைப்பாடுகளுக்கு மரியாதை அளித்தும், மிகுந்த பொறுப்புணர்வோடுமேதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்துள்ளோம். இதனை காலம் சொல்லும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு தொடர்ந்தம் மிகுந்த பொறுப்புணர்வோடதான் நாம் நடந்து கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
5.இக்கலந்துரையாடலில் பங்கு பற்றியோர் யாவரும் இலங்கையில் இருந்தே வந்துள்னர். எனவே இக் கலந்துரையாடலை இலங்கையில் நடத்தாது வெளிநாடு ஒன்றில் நடத்த வேண்டியதன் தேவை என்ன?
இம்மாநாட்டை இலங்கைக்கு வெளியே நடத்தியமைக்கு முக்கியகாரணம் இதில் பங்கு கொண்டோர் யாவருக்கும் ஒரு நட்பான சூழலை உண்டாக்குவதேயாகும். அவர்கள் முகம் கொடுக்கும் நாளாந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை அந்நியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ஒரு அமைதியான சூழலில் ஓய்வாக இருந்து மனம் திறந்து அளவளாவி ஒரு ஆரோக்கியமான கலந்தரையாடலில் பங்கு பெறவேண்டும் என விரும்பினோம்.
மாநாட்டில் பங்கு பற்றிய யாவரும் ஒரே இடத்தில் தங்கி, ஒன்றாக பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், வெளியாருடைய குறிக்கீட்டை தவிர்ப்பதற்குமே சூரிச்சை தேர்ந்தெடுத்தோம். இன்றய சூழ்நிலையில் இப்படியானதொரு மாநாட்டை இலங்கையில் நடாத்துவது இயலாததொன்று.
வெளிநாட்டில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது நாம் அழைத்திருந்த விடயவிற்பன்னர்களின் (subject speacialists)உதவியை பெறவதற்கு இலகுவாக இருந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு விசா ஒழுங்கு செய்வதில் தடைகள் வர சாத்தியங்கள் இருந்தது.
6.அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறீர்கள்?
இத்தகைய நிகழ்வு இத்துடன் முடிந்துபோகும் என நான் எண்ணவில்லை. இந்த நிகழ்வினால் எய்தப்படும் பலன்களைப் பொறுத்து இது போன்ற ஆக்க பூர்வமான நிகழ்வுகள் இலங்கைவாழ் மக்களின் நலன்கருதி குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் நலன்கருதி அங்கு மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்புகள் சமூகநிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்கள் எல்லோரது பங்களிப்புடனும் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பு. இதற்கு எல்லோர் உதவியும் எமக்கு தேவை.
கடந்த பல வருடங்களாக வன்முறை மேலோங்கி சமூக அமைப்புகளும் அரசியல் கட்டுமானங்களும் சிதைந்து சீரழிந்து விட்டன. சமூக அமைப்புக்கள் தமது வல்லமைகளை இழந்து அர்த்தமற்றவைகளாகி விட்டன. அவைகள் மக்களின் வாழ்வில் பயனற்றவையாக ஆக்கப்பட்டு விட்டன. ஜனநாயகமும் மனித உரிமைகளும் நசுக்கப்பட்டு விட்டன. தமிழ்பேசும் மக்களை அந்நியப்படுத்தி தான்தோன்றித் தனமாக மேற்கொள்ளப்படும் முறைமையை மாற்றி மக்களை மையப்படுத்தும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் நாம் யாவரும் உள்ளோம்.
எனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின் பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.
ஒரு அரங்கிலேயே தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்கள் நலன்பற்றிக் கலந்துரையாடியதும், பொதுத்திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலித்ததுமான இந்நிகழ்ச்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. தமிழ் பேசும் மக்களது கண்கள் மட்டுமல்ல மற்றய அரசியல் அமைப்புகள் உலக நாடுகள் ஆகியவற்றின் கண்களும் எம்பக்கம் திரும்பி இருக்கின்றன. இப்படியான பொறுப்புணர்வுடனும் சுமுகமாகவும் கண்ணியமாகவும் ஆக்பூர்வமான பேச்சுவார்ததைகளில் ஈடுபட்டு பொது வேலைத் திட்டங்களை அடைவதில் தான் எங்களது பெருமையும் திறமையும் மக்கள் மீதான கரிசனையும் தங்கியிருக்கின்றன.
இந்த நிகழ்வின் பலனாக தமிழ்பேசும் மக்களை மையப்படுத்திய அவர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை எய்துவதற்கான அவர்களின் அவலங்களை தீர்ப்பதற்கான அவர்களின் இன்னல்களை நிவர்த்தி செய்வதற்கான ஜனநாயகம், மனிதாபிமானம், மனித உரிமைகளை உள்ளடக்கிய ஒரு பொது வேலைத்திட்டம் பற்றிய எண்ணங்கள் சுமுகமாகவும், பெருந்தன்மையுடனும், பரஸ்பர பரிந்துணர்வுடனும் உருவாக்கப்பட்டதால், அது அனைத்து தமிழ்பேசும் மக்களாலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பது திண்ணம்.
அதுவே அனைத்து தமிழ்பேசும் மக்களின் இன்றய எதிர்பார்ப்பும் ஆகும். இந்நிகழ்வு பயன் உள்ளதாக அமைவதால் இது இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஆகியவற்றுக்கிடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.
நாம் அவசியமானதும் காத்திரமானதும் நிரந்தரமானதுமான நல்ல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவர விரும்பினோமானால் மக்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கான வழிகளை சமைப்பதுடன், அவர்களையும் சமூகம் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட வைத்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பமும் இடைவெளியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு அவர்களது ஜனநாயக உரிமைகளையும் அவர்களுக்கு வேண்டிய சாதனங்களையும் வழங்கி தங்களது விவகாரங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றிய முடிவுகளில் அவர்கள் பங்கு பற்றவும், தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என உழைப்போரை ஊக்குவிப்பதற்கும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். எம்மினத்தின் தலைவர்கள் என்ற வகையில் இம்மாநாட்டுக்கு வருகை தந்தவர்களால் தான் இதனை செய்ய முடியும். இதனை அடைவதற்கான சாவி அவர்கள் கையில் தான் இருக்கிறது. அச்சாவியை பயன்படுத்துவதற்கான சகல உதவிகளை செய்ய உதவுவதே எமது அடுத்த நடவடிக்கையாக இருக்கும்.
7.கடைசியாக உங்களைப் பற்றியும் TICயைப் பற்றியும் வந்த விமர்சனங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறைகளை சுட்டிக்காட்டும் நண்பர்கள், சமூகப்பிரதிநிதிகள், தரமான ஊடகத்திறனாய்வு ஆகியவை அவசியமே. மாநாடு தொடங்குவதற்கு முன்பதான ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் சில எதிர்மறையான செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் உண்டு. இம்மாநாட்டைப் பற்றித் தமக்கு அறிவித்தல் தந்திருக்க வேண்டும் என அவை நம்பின.
பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எவரும் பிறருடைய கருத்துக்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் வீணாண குற்றச்சாட்டு எது. தவறான தகவல்கள் எவை. வீண்வம்பு எது என பிரித்துணரக்கூடிய ஆற்றல் அவசியம். அத்துடன் ஒரு நிறுவனத்தை கோஸ்டி சேரா நிறுவனமாக நடாத்துவது கடினம். எப்போதும் சந்தேகங்களும் அழுத்தங்களும் இருந்து கொண்டே இருக்கும். இவற்றில் சிலருடைய ஆதங்கம் நியாயமானவையாக இருக்கலாம். மற்றயவை குறும்பு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை. உண்மையான அக்கறை கொண்டோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டியது எமது கடமை. சாதாரண மக்கள் புத்திசாலிகள். எதை எடுப்பது எதை விடுவது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எம் எல்லோரிலும் பார்க்க அவர்கள் அறிவு கூடியவர்கள்.
குற்றச்சாட்டுகளில் அநேகமானவை தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவில்லாத ‘கருத்துருவாக்கி’களினால்(opinion makers) மேற்கொள்ளப்படுபவை. அவர்கள் சொல்வதில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மீதியை புறந்தள்ளலே சிறப்பான செயலாகும். இவை எல்லாம் நாம் நித்தமும் சந்திப்பவை. அத்துடன் இவை எம்மைத் தீங்கிலிருந்து தப்புவதற்கு உசார்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.
மீட்சி: நவம்பர் 2009, தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியீடு – இதழ் 13