September

September

எதிர்க் கட்சிகளின் சிறு கூட்டம் கூட்டமைபப்பா அல்லது முன்னணியா? – தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேள்வி

240909anura_priyadarsana_yapa.jpgஎதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு சிறு கூட்டமாக உள்ளதை கூட்டமைப்பு என்று அழைப்பதா அல்லது முன்னணி என்று அழைப்பதா என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சில எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு சிறு அமைப்பாக உருவாகி உள்ளது.  இதனை கூட்டமைப்பு என்றும் கூற முடியாது அதேநேரம் அதனை முன்னணி என்றும் அழைக்க முடியாது. அந்த அளவுக்கு அதற்கு அரசியல் வலுவான நிலை இல்லை. இணைந்துள்ள ஒவ்வொருவரும் மக்களின் ஆதரவில்லாத தனி நபர்களே. இவர்களின் இந்த ஒன்று கூடலுக்கு கூட்டமைப்பு என்றோ முன்னணி என்றோ கூறாமல் வேறு ஒரு சொல்லையே பெயராக இடவேண்டும்.

வலுவான சொல்லை பெயராக இடும் அளவிற்கு அவர்களின் ஒன்று கூடல் பலம்வாய்ந்த நிலையில் இல்லை.

எந்தக் கூட்டமைப்போ அல்லது முன்னணியோ வந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயங்காது.  எந்த சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய வலுவான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. 80 வீத  வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கம் எந்தக் கூட்டமைப்பு வந்தாலும் தயங்காது முகம் கொடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை சென்ற புலம்பெயர் குழுவினுள்ளே ஒரு குறுகிய பயணம் : எஸ் மனோரஞ்சனின் மெல்லக் கசிந்த மின் அஞ்சல்

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று திரும்பிய 21 பேரைக் கொண்ட குழு பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. 27 – 29 மார்ச் 2009ல் இலங்கை சென்று திரும்பிய பின்னர் தனியாகவும் ஒரு சிலர் இணைந்த குழுவாகவும் இவர்களில் சிலர் அதன் பின்னரும் சென்று திரும்பி உள்ளனர். இவர்களது செயற்பாடுகள் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உள்ளன. தற்போது இக்குழுவின் நடவடிக்கைகள் அரையாண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இக்குழு பற்றியதும் அவர்களது செயற்பாடுகள் பற்றியதுமான மதிப்பீடு ஒன்று அவசியமாகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் குழுவில் சென்று திரும்பிய எஸ் மனோரஞ்சன் தான் இலங்கை சென்று இக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அக்கடிதம் தேசம் வாசகர் ஒருவருக்குச் சென்று தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்கடிதம் இலங்கை சென்ற புலம்பெயர் குழுவின் உள்ளே உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு உதவும் எனக் கருதுவதால் அக்கடிதத்திற்கான இணைப்பை வழங்குகிறோம். Letter_from_SManoranjan_to_Diaspora_Group

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

malaysia.jpgமலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது.  28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா  உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

கலாமுக்கு மீரட் பல்கலையின் கெளரவ டாக்டர் பட்டம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மீரட்டில் உள்ள செளத்ரி சரன்சிங் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கே.காக் கூறுகையில், கூறுகையில், பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழா நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படும் என்றார்.

ஜீ.எஸ்.பி. சலுகை – விசாரணைகளில் இலங்கை பங்குபற்றாது: தூதுவர்களினூடாகவே தகவல் பரிமாற்றம்

240909gl.jpgஇலங்கைக்கு கிடைக்கும் ஜீ.எஸ்.பி.சலு கையை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கான நோக்குடன் விண்ணப்பங்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபி விருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதற்கென எமது நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் தலையிடவும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித் தார். வாய்மொழிமூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றின் போது ஜீ.எஸ்.பி. சலுகை பற்றியும் கேள்வியொன்றை எழுப்பினார்.

ஜீ.எஸ்.பி. சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பாக பிரசல்ஸில் உள்ள எமது தூதுவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுமாறு அவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இராஜ தந்திர மட்டத்தில் இந்தச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை பெறுவது தொடர்பான விசாரணைகளில் இலங்கை பங்குபற்றாது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தேவையான தகவல்களை தூதுவர்களினூடாக அரசாங்கம் வழங்கும் என்று கூறினார்.

ஏ-9 வீதியினூடாக 10 இலட்சம் பாடநூல்கள் தரைவழியாக நேற்று அனுப்பி வைப்பு

240909book.jpgஏ-9  வீதியினூடாக 10 இலட்சம் இலவசப் பாட நூல்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் பத்தர முல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நேற்று நடந்தது.

கடந்த காலங்களில் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இம்முறை ஏ-9 வீதியினூடாக தரைமார்க்கமாக 108 மில்லியன் செலவில் 14 லொறிகளில் 10 இலட்சம் புத்தகங்கள் யாழ்ப்பாணம் மேலதிக கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடல்மார்க்கமாக 3 மில்லியன் செலவிலேயே புத்தக விநியோகம் இடம்பெற்றது. ஆனால், இம்முறை தரைமார்க்கமாக 1.3 மில்லியன் செலவிலேயே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணத்துக்கு மொத்தமாக 12 இலட்சம் புத்தகங்கள் தேவைப்படும் நிலையில் மிகுதி இரண்டு இலட்சம் புத்தகங்கள் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தேவையான 30 மில்லியன் புத்தகங்களில் இதுவரை 12 மில்லியன் புத்தகங்கள் மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 18 மில்லியன் புத்தகங்கள் 30.11.2009 இற்குள் விநியோகிக்கப்படுமென பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு உள்ளிட்ட முழு இலங்கையிலுமுள்ள 42 இலட்சம் மாணவ மாணவிகளுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய இலவச பாடநூல்களை ஒரே நாளில், அதாவது டிசம்பர் 07 ஆம் திகதி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதி அமைச்சர்சச்சி தானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- இவ்வாண்டுக்கான புத்தகங்கள் மீள் பதிப்பு செய்யு முன்னர், பாடநிபுணத்துவ மிக்க ஆசிரியர் குழுவினால் தேவையான திருத்தங்கள் கவனமாக செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்புடனும் திருத்தங்களுடனும் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை மாணவர்களுக்கு தேவையான 306 வகையிலான 30 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இப்புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் 3000 மில்லியன் ஆகும்.

03.09.2009 தொடங்கப்பட்ட விநியோக நடவடிக்கைகள் 3011.2009 வரை ஏறக்குறைய மூன்று மாத காலப் பகுதிக்கு இடம்பெறும். இவ்வாறு அனுப்பப்படும் புத்தகங்கள் நாடு முழுவதிலுமுள்ள மத்திய நிலையங்களூடாக விநியோகிக்கப்படும்.

தேசிய பாடசாலைகள் மற்றும் மாணவர் தொகை இரண்டாயிரத்துக்கு மேல் காணப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாக கல்வி அமைச்சினால் நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்.

230909varalakshmi.jpgபழம் பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு காலமானார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.  சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருகவைப்பது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது  உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். இறுதிச் சடங்கு புதன்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. .

கமத்தொழில் அபி. அமைச்சின் ரூ 68 1/2 கோடி குறைநிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு

190909paddy.jpgவிவசாயிகள் தொடர்பான புதிய வரை விலக்கணத்தை உள்ளடக்கியதும், நெற் செய்கையில் ஈடுபட்டு வரும் குத்தகைக்கார விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான கமநலச் சேவைகள் சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு அறுபத்து எட்டு கோடியே 53 லட்சம் 93, 938 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்புப் பிரேரணை யொன்றை சமர்ப்பித்து பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் சிறப்புரிமைகளை, பாதுகாக்கவும், அவர்களுக்கு உரித்துடையவற்றை பாதுகாக்கவும் புதிய கமநல சேவைகள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டவாக்கம் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலம் விரைவில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும்.

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக எமது அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் தொடர்பாக கொண்டுவரப்படும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். இக்கடமையிலிருந்து விடுபடவும் கூடாது.

வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும். அந்த அளவுக்கு விவசாயத்துறை ஊக்குவிக்கப்பட்டு தன்னிறைவும் காணப்படும். 1976ஆம் ஆண்டிலிருந்து கடந்த காலங்களில் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு தொகை கமநல சேவைகள் அமைச்சுக்கு கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தொலைபேசி இணைப்பு

mobile-phone.jpgஇலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை வழங்கும் திட்டம் ஒன்றை தேசிய விமான சேவையான மிஹின் லங்கா விமான சேவையின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கன் ஹொலிடேஸ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
 
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் அன்றாட தொலைத் தொடர்பு தேவைகளுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே இந்த இலவச இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு டயலொக் தொலைபேசி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

விண்ணில் பாய்ந்தது ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்

230909ossaan.jpgகடல் ஆய்வு, கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி 14 செலுத்து வாகனம் (ராக்கெட்) ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளையும், 6 சிறியரக (நானோ) செயற்கைக்கோள்களையும் தாங்கிக் கொண்டு, சரியாக நேற்று நண்பகல் 11.53 மணிக்கு விண் வட்டப்பாதையை நோக்கி பாய்ந்தது.

ஜூவாலையைக் கக்கிக் கொண்டு விண்ணில் பயணித்த பி.எஸ்.எல்.வி. திட்டமிட்டபடி விண்வட்ட நீள் பாதையில் எட்டியதும் ஒவ்வொரு செயற்கைக் கோள்களாக புவிச் சுழற்சிப் பாதையில் துல்லியமாகச் செலுத்தியது. செயற்கைகோள்கள் அனைத்தும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் டாக்டர் ஜி. மாதவன் நாயர் உட்பட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாட்டுப் பயன்களைத் தொடரவும், புதிய பயன்பாடுகளுக்காகவும் 960 கிலோ எடை கொண்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. 720 கி.மீ. எஸ்.எஸ்.ஓ விண்வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.