29

29

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்ற பங்களாதேஸ்

bangladesh-cricket.jpgமேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.

முதலில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ் கிரிக்கட் அணி. இது பங்களாதேஸ்  அணி, சர்வதேச கிரிக்கட் சுற்றுலாவொன்றில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் சந்தித்தது. முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பங்களாதேஸ்  பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் பந்து வீச்சில் மிரட்டிய பங்களாதேஸ் பின்னர் பேட்டிங்கிலும் திறமையைக் காட்டி மேற்கு இந்தியத் தீவுகளை தேல்வியடையச் செய்தனர்.

அபாரப் பந்து வீச்சு காரணமாக ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் டிராவிஸ் டவ்லீன் சிறப்பாக ஆடி 117 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது.

இந்த ஓட்டத்தை  எட்ட பங்களாதேஸ் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர் பங்களாதேஸ் வீரர்கள்.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகம்மது அஷ்ரபுல் ஆகியோர் அரை சதம் அடித்து பங்களாதேஸத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.கேப்டன் ஷாகிப், 61 பந்துகளைச் சந்தித்து 65 ரன்களைக் குவித்தார். ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே கிடைத்தது. அஷ்ரபுல் 77 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.  ஆட்டம் முடிய கடைசி 6 பந்துகள் இருந்த நிலையில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அப்துர் ரஸ்ஸாக். இதன் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. 2வது வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதான் முதல் தொடர் வெற்றி…

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த 200 ஒரு நாள் போட்டிகளிலும், இன்றைய போட்டிதான் பங்களாதேஸ் அணி பெற்ற கூடுதலான ஓட்டமாகும்.

பங்களாதேஸ் அணி வெளிநாட்டு மண்ணில் வென்றுள்ள முதல் ஒரு நாள் போட்டித் தொடரும் இதுவே.

செயின்ட் கீட்ஸ் தீவில் உள்ள வார்னர் பூங்காவில் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இதையும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் `வணங்கா மண்` நிவாரணப் பொருட்கள்

 ship121212.jpgஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது. தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை `வணங்காமண்` கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் `வணங்கா மண்` கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் `கொலராடோ` என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன. இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் `மெர்ஸி மிஷனி`ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

“நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள `மெர்ஸி மிஷன்` (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆகஸ்ட் 07 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறை!

school-books.jpgஅரசாங்கப் பாடசாலைகள் யாவும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக அரசாங்கப் பாடசாலைகள் யாவும் செப்டம்பர் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்

little_aidலிற்றில் எய்ட் என்கின்ற உதவி அமைப்பு பிரித்தானியாவில் பொதுஅமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு உதவி நிறுவனம். இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாக 5115 கிலோகிராம் மரக்கறிகள் 160 கிலோகிராம் குழந்தைகளுக்கான பால் மா, புதிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்  என நான்கு தடவைகள் பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு 4000 பவுண்களுக்கு சற்று அதிகமான நிதி செலவிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதியை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அன்பளிப்புச் செய்துள்ளனர். இதற்கான முழுமையான கணக்கு விபரத்தை http://littleaid.org.uk/accounts.htm அருகில் உள்ள இணைப்பை அழுத்திக் காண முடியும்.

இவற்றுக்கு மேலாக தேசம்நெற் முன்னெடுத்த வன்னி முகாம்களில் புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ள இருந்த 4872 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்குவதற்கான நூல் திட்டத்திலும் லிற்றில் எய்ட் பங்களிப்புச் செய்திருந்தது. 15000 பவுண் செலவில் மேற்கொள்ளப்பட்ட நூல் திட்டத்திற்கு லிற்றில் எய்ட் 1000 பவுண்களை வழங்கி இருந்தது.

லிற்றில் எய்ட் அமைப்பின் நீண்ட காலத் திட்டம் மிக முக்கியமானது. குறிப்பாக சிறார்களாக படையணிகளில் சேர்க்கப்பட்டு பின்னர் சரணடைந்தவர்களில் ஒரு பகுதியினர் அம்பேபுச என்ற சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். இது புலிகளின் சிறுவர் படையணியில் இருந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமாக இயங்குகின்றது. தெற்கில் உயர்ந்த மலைப்பிரதேசமான வனப்பகுதியான அம்பேபுச மாவட்டத்தில் இப்புனர்வாழ்வு மையம் இயங்குகிறது. தற்போது இம்முகாமில் ஆண்கள் பெண்களாக 300 பேர் வரை உள்ளனர்.

அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் உள்ள முன்னாள் குழுந்தைப் போராளிகளின் வேண்டுகோளுக்கு அமைய அவர்களுக்கு இசைக்கருவிகளை லிற்றில் எய்ட் பெற்றுக் கொடுத்து உள்ளது. அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியை ஒருவரையும் லிற்றில் எய்ட் பொறுப்பெற்று வழங்க உள்ளது. இது பற்றிய விவரணத்தை http://www.youtube.com/watch?v=JiIAZ8wqQwE  அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.

இற்றைவரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் நூற்றுக் கணக்கான பொது அமைப்புகள் உருவாகி செயற்பட்டு இருந்த போதும் அவற்றில் பலவற்றின் மீதும் சர்ச்சைகள் எழக் காரணமாக இருந்தது அவற்றில் வெளிப்படைத் தன்மை காணப்படாமையே. அந்த வகையில் லிற்றில் எய்ட் நூறுவீத வெளிப்படைத் தன்மையுடன் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் இணையத்தில் பிரசுரிக்கின்றது. ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்யும் ஒவ்வொரு சதமும் பிரசுரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சதமும் செலவழிக்கப்படும் போது அவையும் பிரசுரிக்கப்படுகின்றது. செலவுக்கான பற்றுச் சீட்டுக்களும் பிரசுரிக்கப்படுகின்றது.

லிற்றில் எய்ட் பொது அமைப்பாக இவ்வளவு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் பலரும் பல்வேறு உதவிகளை இலைமறைகாயாகச் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் முகாம்களின் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. எவ்வளவு பெரும் உதவியை வழங்கினாலும் அது சிறு உதவியே. அதனாலேயே லிற்றில் எய்ட் என்ற பெயரும் தன்னடக்கத்துடன் சூட்டப்பட்டது.

கிளிநொச்சியில் 3050 குடும்பங்கள் ஆகஸ்ட்15 இல் முதற்கட்ட மீள் குடியேற்றம்

north-governor.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் 3050 குடும்பங்களைச் சேர்ந்த பதினையாயிரம் பேர் (15,000) ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதற்கட்டமாக மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முழங்காவில், நாச்சிகுடா கிராம சேவகர் பிரிவுகளில் 1350 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேரும், கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள ஜெயந்திநகர், புதுமுறிப்பு, கனகபுரம், கிருஷ்ணபுரம், உருத்திரபுரம் கிழக்கு ஆகிய கிராம சேவகர்களில் 2700 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேரும் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கிராமங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவென உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 35 கிராமங் களில் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதற் கட்ட மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய வவுனியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 18 கிராமங்களிலும், வெங்கள செட்டிக்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 12 கிராமங்களிலும் வவுனியா தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 5 கிராமங்களிலும் இம் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வவுனியா கச்சேரி அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இம்மீள்குடியேற்றத்தின் நிமித்தம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

காந்தி தங்கியிருந்த தென்னாப்பிரிக்க வீடு விற்பனைக்கு?

gandhi.jpgதென்னா பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டில் மகாத்மா காந்தி 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீடு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும்,  இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே சிறிதளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு மரங்கள் சுழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். மேற்கூரை வேயப்பட்ட இந்த வீட்டில் 1908-ம் ஆண்டிலிருந்து காந்தி மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் கடந்த 25 ஆண்டுகளாக இதில் வசித்து வந்தார். இவர் தற்போது கேப்டவுனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற இந்த வீட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் அவர் விளம்பரம் கொடுத்து இதை விற்க முடிவு செய்துள்ளார் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீட்டின் விலையை அவர் தெரிவிக்கவில்லை இதனிடையே விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய கல்வி குறித்த பிரிவை உருவாக்கிய ஸ்டீபன் கெல்ஃபின் உதவியை நான்சி பால் நாடியுள்ளார்.

இந்த வீட்டை வாங்கக் கூடிய இந்தியர்களை தேடி வருகிறார் ஸ்டீபன் கெல்ஃப். இந்த வீட்டை வாங்கி இங்கு வரும் பேராசிரியர்கள் தங்கிச் செல்லும் இல்லமாக இதை மாற்றுவது குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் மற்றொரு இடமும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள காந்தி பண்ணையில்தான் தனது ஆதரவாளர்களுடன் சத்யாகிரஹத்தை அவர் போதித்தார்.

தொடக்கத்தில் டர்பனின் வட பகுதியில்தான் மகாத்மா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் குடியேறினர். இங்குதான் சத்யாக்கிரஹத்தை அவர் போதித்தார். பின்னரே அவர் தனது போராட்டத்தை இனவெறிக்கெதிரான போராட்டமாக மாற்றினார். 1800 மற்றும் 1900-ம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவு கூரப்படுகிறது. பல நிறுவனங்களும்,  தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெரும் தொகை கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். தற்போது காந்தி வசித்த வீடு விற்பனைக்கு உள்ளது.

எலிக்காய்ச்சல் தடுப்பு பக்ரீறியாவை வழங்க கியூபா முன்வருகை

இலங்கையில் டெங்கு நோய் தடுப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை வழங்க உடன்பட்டிருப்பது போல், எலிக் காய்ச்சல் தடுப்புக்கான பக்ரீறியா ஒன்றை வழங்கவும் கியூபா முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கையிலுள்ள கியூபா தூதுவர் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே கியூபா இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இதுவரை எலிக் காய்ச்சலினால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் வரை அக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களென இனங் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், டெங்கு ஒழிப்புக்கு இலங்கையில் பி.ரி.ஐ. பக்ரீறியாக்களை பயன்படுத்துவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென அண்மையில் இலங்கை வந்த கியூபா நாட்டு நிபுணர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், நாளை புதன்கிழமை முதல் அவர்கள் கண்டி செல்லவிருப்பதாகவும் வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்ற போதிலும், முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், பரிசோதனைகளின் இறுதியில் கியூப நாட்டு நிபுணர்களால் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரமே இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை பயன்படுத்துவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று கூறிய வன்னிநாயக்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கினால் 208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை – விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :- இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர்.

ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் வெலிஓயாவில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil-raja.jpgவெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் பூர்த்தியடையுமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கிணங்க கல்யாணிபுர, மொரவேவ, கஜபாபுர கிராமங்களிலுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர். இந்தப் பகுதிக்கான வீதிக்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பதவியா பிரதேச சபைக்கு 5 கோடி ரூபா வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இந்தக் கிராமங்களிலுள்ள வீதிகள் கமநெகும திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

வெலிஓயாப் பகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் , நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படும்.  மீள்குடியேற்றம் தொடர்பாக வெலிஓயாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விபரங்களை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு முழுமையான ஆதரவை இராணுவத்தின் பொறியியல் பிரிவு வழங்கியுள்ளது. கனகபுர, கஜபாபுர, அதாவெ துணுவௌ கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது. அதாவெதுணுவௌ? நெடுங்கேணி வீதியை நிர்மாணித்துத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.