மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கிராமங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இருப்பிடங்களை இழந்த குடும்பங்களுக்கு சர்வோதயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகளும் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கித்தூள், றூகம், கோப்பாவெளி ,பெரிய புல்லுமலை,கரடியனாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே சகல வசதிகளையும் உள்ளடக்கிய இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதோடு மேலும் 32 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.
றூகம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வைபவத்தில் சர்வோதயத்தின் நிறைவேற்று இயக்குநர் வின்னி ஆரியரட்ன கலந்து கொண்டு இவ் வீடுகளை கையளித்தார். இந் நிகழ்வில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 250 பாடசாலை மாணவர்களுக்கும் ,15 பால் உற்பத்தியாளர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கித்தூள் கிராமத்தில் ஒன்று கூடல் மண்டபமொன்றும் சர்வோதய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதே வேளை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தொழில் பயிற்சி முடித்துக் கொண்ட 61 பேருக்கு தொழில் உபகரணங்களை வழங்கும் மற்றுமொரு வைபவமும் நேற்று நடைபெற்றது. ஒக்.ஸ. பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்கா வதிவிடப் பிரதிநிதி ஜோன் பார்ம் இதில் கலந்து கொண்டு அலுமினியம் பொருள் உற்பத்தி ,தச்சு மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் போன்ற துறைகளில் தொழில் பயிறிச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார்.