July

July

சிவகீதா உட்பட ஐவர் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைவு

மட்டக் களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட சபையின் 5 உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தேசிய நல்லிணக்க அமைச்சரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். மாநகர முதலவர் சிவகீத்தா பிரபாகரன்,உறுப்பினர்களான கனகசபை பிரேமன்,செல்வராஜா சசிக்குமார், வெலிங்டன் ராஜேந்திரபிரசாத், நமசிவாயம் கருணானந்தம், கந்தையா அருமைலிங்கம் ஆகியோரே குறிப்பிட்ட மாநகர சபை உறுப்பினர்களாவர்.

இவர்களில் கந்தையா அருமைலிங்கம் ஏற்கனவே ஈ.பி.டி.பி.கட்சியில் அங்கத்துவம் பெற்று அக்கட்சி சார்பில் மாநகர சபைக்கு உறுப்பினராகவும்,ஏனையோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு – அமைச்சர் புகார்

hisbullapillaiyan.jpgஇலங் கையில் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தொடர்ந்தும் ஆளுனரின் தலையீடு இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் மாகாண சபை நிர்வாகம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக அம் மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றம் சுமத்துகின்றார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட அதிகாரிகளுக்கு ஆளுனர் தொடர்ந்தும் உத்தரவுகளையும் பிறப்பிப்பதாகவும் கூறும் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மாணங்களைக் கூட அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றார்.

இது தொடர்பாக பல தடவைகள் ஆளுனரிடம் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியபோது ஒரு கட்டத்தில் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் முதலமைச்சரும் அமைச்சர்களும் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய யுத்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவரையுமே சாரும்

“முப்பது வருட போராட்டத்தின் மூலம் படையினர் வட கிழக்கில் பெற்றுக் கொண்ட வெற்றியை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டு அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றது. இன்றைய வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையுமே சாரும்’

இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார். மாத்தளை ஐ.தே.க. அலுவலகத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய ரஞ்சித் அலுவிகார எம்.பி.;

2002 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசு அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட்டு விடுதலைப்புலிகளிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களைப் பலமிழக்கச் செய்தமையாலேயே தற்போதைய அரசால் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது.

இன்றைய பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தமது நிர்வாகத்தில் இருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்து போயுள்ளது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இந்த மாயையை உடைத்தெறியும். அதற்கேற்றவாறு ஐ.தே.க. தேசிய மட்டத்தில் அடி மட்டத்திலிருந்தே மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது.

இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மக்கள் பாவனைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளாந்தம் மலைபோல் உயர்வடைகின்றது. பொருளாதாரப் பிரச்சினையால் செலவு செய்ய முடியாமலிருக்கும் நாட்டு மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். இதனை நாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீடு வீடாகச் சென்று அனைத்துக் குடும்பத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும். குறிப்பாக மாற்றுக் கட்சியினரையும் சந்தித்துப் பேச வேண்டும். பொறுப்புகளை தொண்டர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடக் கூடாது. கட்சியின் தலைமைத்துவத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

சின்னமுத்துவிலிருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளை பாதுகாக்க திட்டம்

வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளை சின்னமுத்து நோயிலிரு ந்து பாதுகாக்கவென அரசாங்கம் விசேட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது.

இதேநேரம் இங்கு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், நெருப்புக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் உறவினர்களுக்கும் நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்தூசி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி இருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளையும், சிறுவர்களையும் சின்னமுத்து நோயிலிருந்து பாதுகாக்கவென விசேட திட்டமொன்றை சுகா தாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு நடைமுறைப்படுத்தி இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபன மருத்துவ நிபுணர் டாக்டர் நவரட்னசிங்கம் ஜனகன் கூறி னார்.

இத்திட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள சின்னமுத்து தடுப்பு மருந்து வழங்கல் அட் டவணைக்கு மேலதிகமாக இக்கிராமங் களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் ஆறு மாதம் முதல் மூன்று வய துக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பு மருந்து வழங்குப்படுகின்றது. இது சின்ன முத்து நோயைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலான முன்னோடி பாதுகாப்பு நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

சின்னமுத்து நோய்க்கு பிறந்து ஒன்பது மாதம் முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே தடுப்பு மருந்து வழங்கப்படுவது வழமை என்று குறிப்பிட்ட அவர், இக்குழந்தைகளுக்கு வழமையான அட்டவ ணைக்கு மேலதிகமாகவே பிறந்து ஆறு மாதம் முதல் வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் வழமையான அட்டவணைப்படி உரிய காலத்தில் அத்தடுப்பு மருந்தை பெறுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் பிரதான அதிகாரியும், வட மாகாண அபிவிருத்திக்கான தகுதிவாய்ந்த அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக நேற்று சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

வட மாகாணத்திற்கான ஆளுநராக பதவிவகித்த டிக்சன் தால மாலைத்தீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட வட மாகாண ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது.

இராணுவத் தளபதியாக ஜகத் ஜயசூரியவும், கடற்படைத் தளபதியாக திசர சமரசிங்கவும் நியமனம் – பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜெனரல் சரத் பொன்சேகா

sarath-pon.jpgபாது காப்புத் துறை உயர் பதவிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய நியமனங்களையும் நேற்று வழங்கினார். பிரதான பாதுகாப்பு அதிகாரி, தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், புதிய இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி ஆகிய பதவிகளுக்கே புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. இதற்கமைய தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும், தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய இராணுவத் தளபதியாக தற்போதைய வன்னி பாதுகாப்புபடைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத்ஜயசூரியவும், கடற் படைத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய கடற்படைத் தளபதியாக கடற்படையின் தற்போதைய பிரதான அதிகாரி பதவி வகிக்கும் ரியர் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நியமனங்களுக்கமைய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய 19வது இராணுவத் தளபதியாகவும், ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க 17வது கடற் படைத் தளபதியாகவும் எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பாதுகாப்பு படை உயர் தளபதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பேராதனை பல்கலைக்கழகம் முன்வருகை

அரசாங்கத்தின் ஊடாக இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ‘வடக்கு வசந்தம்’ என்ற வேலைத் திட்டத்துக்கு கைகொடுக்க பேராதனைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. வட பிரதேச மக்களின் தேவைகள் எனக் கருதப்படும் அம்சங்கள் குறித்து பல்கலைக்கழகம் மதிப்பீடு ஒன்றை முதலில் மேற்கொள்ளும். அதன் பின்னர் குறுகிய, நீண்ட, மத்திய காலங்களை உள்ளடக்கியதாக வேலைத் திட்டங்களை வகுக்கவும் தயாராகியுள்ளது.

வட பிரதேச நவோதய வேலைத் திட்டத்துக்கு பல்கலைக்கழகம் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து அண்மையில் மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது. ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியிர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன உட்பட மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு ‘வடக்கு வசந்தம்’ தொடர்பாக எத்தகைய பங்களிப்பை பல்கலைக்கழகம் வழங்கலாம் என்பது பற்றி ஆராய்ந்தனர்.

இப்பொழுது வவுனியா மெனிக்பாம் முகாமில் இரண்டாவது வலயத்தில் தங்கி இருக்கும் 45,000 மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான சேம நலன்களைக் கவனிக்க அரசாங்கத்தின் ஊடாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவிடமும் மத்திய மாகாண சபையிடமும் இதற்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அரச அதிகாரிகளும் பல்கலைக்கழக ஆசிரியர் பீடமும் இணைந்து திட்டங்களை வகுத்து வருகின்றன.

நிவாரணக் கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு க. பொ. த. சாதாரண, உயர் தர பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான கல்வியூட்டலை வழங்க ஆசிரியர்களையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்குவதற்கான திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் உள ரீதியாக தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இலக்கிய மற்றும் கலை, கலாசார ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தவும் இப்பல்கலைக்கழக பீடம் திட்டமிட்டுள்ளது.

அம்மக்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் பொருட்டு குறைந்த செலவில் அவற்றை உருவாக்கவும், நீர் விநியோகத் திட்டம் ஒன்றின் மூலம் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாய, கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளில் ஆலோசனைகளை வழங்கவும் குழாய் நீர் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழக கட்டிட நிர்மாண மற்றும் அமைப்புகளின் உதவியுடன் கட்டிட பணிகளுக்கு உதவிகளைப் பெறவும் இணக்கம் காணப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் சரத் அபயகோன் மற்றும் கல்விப் பீடங்களின் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 20,000 குடும்பங்களை மீள்குடியேற்ற ஏற்பாடு – பூநகரி, ஏ9, பளை பகுதிகளில் மீள்குடியேற்ற படையினர் அனுமதி

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதினாயிரம் (20,000) குடும்பங்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியுமென கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் தெற்கு பிரதேசங்களிலும், ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்கு பிரதேசங்களிலும் பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களை மீளகுடியமர்த்துவதற்குப் பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார். வன்னிப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தடிப்படையில் வன்னிப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், வீதி, உள்ளுராட்சி, கட்டடத் துறை ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் தொழில் நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் அம்மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேற்று முன்தினம் சென்று திரும்பியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச்சிகுடா, வீரவில், ஜெயபுரம், வலைப்பாடு, அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கே இக் குழுவினர் சென்று திரும்பியுள்ளனர்.

இம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தியதுடன் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேம்படுத்துவது குறித்தும் இக் குழுவினர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க கட்டடங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அவற்றை குறுகிய காலத்தில் புனரமைக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி பிரதேசங்களின் வீதிகள், பாடசாலைக் கட்டடங்கள், ஆஸ்பத்திரிக் கட்டடங்கள், பொதுச் சந்தைக் கட்டடங்கள் என்பன துரிதகதியில் புனரமைக்கப்படவிருக்கின்றன.  இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறினார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சானியா திருமணம் – நிச்சயதார்த்தம் முடிந்ததும் தந்தை தகவல்

saniya222.jpgஐதராபாத் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்து உள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், அவருடன் சிறுவயது முதலே பழகிய அவரது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான சோரப் மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொண்ட பின்னர், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 10 கிலோ கேக்கை வெட்டி மகிழ்ந்தனர். அந்த கேக்கில் சானியா- சோரப் ஜோடியின் பெயர் எழுதப்பட்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருந்தது. அழகுபதுமையாக ஜொலித்த சானியா, டைமண்ட்டுகள் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான ‘காக்ரா சோலி’ என்ற விலை உயர்ந்த ஆடையை அணிந்து இருந்தார். பிரபல டிசைனர் ஷாந்தனு- நிகில் வடிவமைத்திருந்த இந்த ஆடையின் மதிப்பு 20 இலட்சம் இந்திய நாணய ரூபா ஆகும். இதனை நிச்சயதார்த்த பரிசாக மணமகன் சோரப் மிர்சா வழங்கினார்.

நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தாலும், திருமண திகதி பற்றி உடனடியாக எந்த முடிவும் செய்யப்படவில்லை. இது பற்றி சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், ‘சானியாவுக்கு முஸ்லிம் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. அவர் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். அவர் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய விரும்புவதாக என்னிடம் கூறியிருக்கிறார். எனவே அவரது ஆசைப்படி 2 ஆண்டுகள் கழித்தே திருமணம் நடத்த முடிவு செய்து உள்ளோம். அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்க உள்ளார்’ என்றார்.

சோரப் மிர்சா எம்.பி.ஏ. படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரது படிப்பு முடியவும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே 2011ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி 74 ஓட்டங்கள் முன்னிலையில் – 36 ஓவர்களில் பாகிஸ்தான் 10/90

srilanka-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களில் முன்னணியில் உள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதன் இன்னிங்சில் 36 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 90 ஓட்ட ங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. ஐந்து நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்

குஹரம் மன்சூர் 03
பவாட் அலிம் 16
யூனுஸ் கான் 00
மொஹமட் யூசுப் 10
மிஸ்பஹா உல் ஹக் 00
சுஐப் மலிக் (ஆ.இ) 39
கம்ரன் அக்மல் 09
அப்துர் ரவூப் 00
உமர் குர் 01
மொஹமட் அஹமர் 02
சஹீட் அஜ்மல் 00
உதிரிகள் 10
மொத்தம் 90

பந்து வீச்சு:
குலசேகர 9-3-21-4,
துஷார 8-3-23-2,
மென்டிஸ் 10-3-20-3,
மெத்திவ்ஸ் 3-0-15-1,
ஹேரத் 6- 3-5-0

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்

வர்ணபுர 11
பரணவித்தாரன 26
சங்கக்கார (ஆ.இ) 81
ஜயவர்தன 19
சமரவீர (ஆ.இ) 13
உதிரிகள் 14
மொத்தம் 164

பந்துவீச்சு:
உமர்குல் 10-1-28-1,
மொஹமட் அஹமர் 9-2-30-0,
அப்துல் ரவூப் 8-1-31-0,
சஹீட் அஜ்மல் 15-1- 45-2,
யூனூஸ்கான் 06-1-21-0.