July

July

மைக்கேல் ஜாக்சன் மரணத்தை கொலைக் குற்றமாக பதிவு செய்ய காவல்துறை முடிவு

maical-jak.jpgபாப் இசை உலகின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாக அமைந்த ஓவர்-டோஸ் ஊசி மருந்தை அவருக்கு வழங்கிய நபர் மீது கொலைக் குற்றம் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மைக்கேல் ஜாக்சனுக்கு டிப்ரிவன் எனப்படும் ஓவர்-டோஸ் வலிநிவாரணி மருந்தை அளித்தவர்கள், இன்னும் 2 நாளில் கைது செய்யப்படலாம் என நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாக்சனின் குடும்ப நண்பரான டெர்ரி ஹார்வி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டிப்ரிவன் என்ற வலிநிவாரணி ஊசி மருந்து மற்றும் சில மாத்திரைகளால்தான் ஜாக்சன் உயிரிழந்தார் என அவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்த மருந்தை அவருக்கு வழங்கியவர்கள் மீது கிரிமினல் குற்றம்சுமத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குவைத்துக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்ல பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அவசியம்

housemaids.jpgகுவைத்தில் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்கள் இனிமேல் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி அமுலுக்கு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

குவைத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வன்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று புகார்கள் கிடைத்துள்ளன. எனினும் வன்செயல்களில் ஈடுபடுவர்களை இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக புதிய நடை முறை கொண்டு வரப்படுவதாக குவைத் உள்துறை அமைச்சு இலங்கை அரசுக்கு அறிவித்தது. அதனை அடுத்தே பெலிஸ் அனுமதி சான்றிதழ் கோரப்படுவதாக பணியகத் தலைவர் ரணவக்க மேலும் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு

chaminda-vass.jpgஇலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.பாகிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் வாஸ்.

இதுகுறித்து 35 வயதாகும் வாஸ் கூறுகையில், பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறைப்படி ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்.

110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸ், 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் 1994ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்தான் வாஸின் முதல் டெஸ்ட் போட்டி. 12 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2 முறை பத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

100 டெஸ்ட்களுக்கு மேல் ஆடியுள்ள 3வது இலங்கை வீரர் வாஸ். மற்ற இருவர்- முரளிதரன், ஜெயசூர்யா.

கிழக்கு வாகன ‘பாஸ்’ நடைமுறையை நீக்குவது குறித்து பேச்சு

அம்பாறையிலிருந்து கொழும்பு திருமலை செல்லும் வாகனங்கள் மீதான ‘பாஸ்’ நடைமுறையை நீக்குவது குறித்து சிவில் பாதுகாப்புக் குழுவின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான அபிவிருத் தித் திட்ட ஆலோசகர் இஸட் ஏ. எச். ரஹ்மான் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

அம்பாறை விவசாய திணைக்களத்தில் கடந்த வாரம் இச்சந்திப்பு இடம்பெற்று ள்ளது. மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பிர தேச வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆலோச கர் ரஹ்மானை அண்மையில் சந்தித்து ‘பாஸ்’ நடைமுறையால் தாம் எதிர்நோக் கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதனையடுத்தே சிவில் பாதுகாப்பு குழுவின் அபிவிருத்தி திட்ட ஆலோசகர் ரஹ்மான் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை சந்தித்து உரையாடினார்.

இவ்விடயத்தை கவனமாக செவிமடு த்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ஜனா திபதி மற்றும் பாதுகாப்புச் செயலகத்தின் நேரடிக் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டுசென்று விரைவாக இப் பாஸ் நடைமுறையை நீக்க நடவடிக்கை எடுப்ப தாக வாக்குறுதியளித்துள்ளார்.

இது குறித்து இப்பிரதேச வர்த்தக பிர முகர்கள் ஆலோசகர் ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வருகிறது

ஜெனீவாவுக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக தயான் ஜெயதிலக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடகால சேவையைப் பூர்த்தி செய்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் இவரது சேவை முடிவுக்கு வரவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நிரந்தரப் பிரதிநிதி யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதிய கடனுதவிக்கு அமெரிக்கா நிபந்தனை

hillary_clinton.jpgஇலங்கை கோரியிருக்கும் 190 கோடி டொலர்கள் கடனுதவியை சர்வதேச நாணயநிதியம் வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு ஒபாமா நிருவாகம் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக நடத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தாத பட்சத்தில் இலங்கைக்கான உத்தேச 190 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனுதவிக்கு அமெரிக்கா ஆதரவை அமெரிக்க நிதியமைச்சர் அளிக்க முடியாது.

அமெரிக்க செனட் சபையினால் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் முஸ்லிம் பிரிவு அமைக்க நடவடிக்கை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் அப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் தேவை கருதி முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முன்பு இயங்கி வந்த முஸ்லிம் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் முஸ்லிம் கல்விப் பிரிவு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மாகாண கல்விப் பணிமனையில் இயங்க ஆரம்பிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த சுற்றுநிருபம் கொண்டுவரப்பட்டுள்ளது

images-teli.jpgபாடசாலை நேரங்களில் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நட வடிக்கைகளைப் பாதிக்கும். எனவே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பாக ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டுவரவேண்டியுள்ளது. ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடாது. எனவே இது தொடர்பில் சுற்று நிருப மொன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கல்வி நிலை உயர்வடைவது போல் ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சிகாண வேண்டும்.

இன்று பாடசாலைகளில் மாணவனால் அதிபர் தாக்கப்படுகின்றார். இதனால் ஒழுக்கம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மலையக மாணவர்கள் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சித்தியடையும் சதவீதம் அதிகரிக்குமானால் மட்டுமே உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி பல்கலைக்கழகம் நுழையும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இந்திய தூதரகத்தின் உதவியுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வேலைத்திட்டமொன்று மேற் கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏனைய பாடங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இடமாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது.

மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஓர் கூட்டு முயற்சி அவசியமாகும். அதிபர். ஆசிரியர் மற்றும் பெற்றோர் யாவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் அமைச்சு மட்டத்தில் உதவிகளை நல்குவோம் என்றார். இக்கூட்டத்தில் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிக் செயலாளர் சதீஸ். முன்னாள் மாகாண சபைத் தலைவர் துரைமதியுகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து இளம்தாய் தற்கொலை – அநுராதபுரம் பகுதியில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக இளம் தாயொருவர் தனது இரு சிறு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சம்பவமொன்று வியாழக்கிழமை இரவு மதவாச்சி கொக்கடியகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன்மனைவிக்கிடையிலான நீண்டநாள் தகராறையடுத்தே வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பாக உள்ள கிணற்றினுள் தனது இரு சிறு பிள்ளைகளையும் தள்ளிவிட்ட தாயார் பின்னர் தானும் கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக்காலை இந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதுபற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த பொலிஸார் சடலங்கள் மூன்றையும் கிணற்றினுள்ளிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தாயாரான அனுஷா தில்கானி ஜெயரட்ன (29 வயது), ஜெகான் சந்தீப (6 வயது), அஷான் நெத்சர (3 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இறந்த மூவரது சடலங்கள் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதவாச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர கொடித்துவக்கு தலைமையிலான பொலிஸ் குழு நடத்திவருகிறது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரை விடுவிக்க கல்வியமைச்சர் உறுதியளிப்பு

புல்மோட்டை முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி ஆகியோரை அங்கிருந்து விடுவித்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு உறுதியளித்துள்ளார். சங்கத்தின் தூதுக்குழு சங்கத்தின் தலைவர் நா.இராஜநாதன் தலைமையில் அமைச்சரை அவரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது தூதுக்குழு, புல்மோட்டை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு வலயக் கல்வி பணிப்பாளர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

அதன்போதே அமைச்சர் முன்கண்டவாறு உறுதியளித்ததாக, தூதுக்குழுவில் இடம்பெற்றுவரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான த.மகாசிவம் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மாரி காலம் தொடங்குவதற்கு முன்பு, முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது என்ற நோக்குடன் அரசு அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. ஆகவே சகல ஆசிரியர்களும் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமரச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஜூலை 21 ஆம் திகதி வவுனியா முகாமில் கல்வி அமைச்சினால் சகல தளபாடங்களுடன் கூடிய 20 புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் கல்வி அமைச்சர் சந்திப்பின்போது அழைப்பு விடுத்தார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஊனமடைந்த, படுகாயமடைந்த ஆசிரியர்களுக்கு அவர்களின் அடுத்த உரிமையாளருக்கும் பொது நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் அடிப்படையில் 55 வயது வரை சம்பளம், ஓய்வூதியம், நட்டஈடு வழங்க உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று சங்கம் அமைச்சரைக் கேட்டுக் கொண்டது. இது பற்றிய விபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.