June

June

தாய்லாந்து பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் – 11 பேர் பலி; 12 பேர் காயம்

10thai-mos.jpgதாய் லாந்து பள்ளிவாசலில் சென்ற திங்கட்கிழமை இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசல் தொழுகை நடாத்தும் இமாமும் இதில் பலியானார். மாலை நேரத்தொழுகையில் ஈடுபட்ட வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்கள். இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இறை வணக்கத்திலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். பள்ளிவாசலின் முன்புறமாக சிலரும் பின்புறமாக சிலரும் நுழைந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர். இவ்வேளை சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலினுள் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுவாகும். மலேசியாவை அண்மித்துள்ள தாய்லாந்துப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாய்லாந்தில் முகாம்களில் சுய அதிகாரம் கோரிப் போராடுகின்றனர்.

இதுவரை இப்போரில் மூவாயிரத்து எழுநூறு பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற திங்கட்கிழமை வீதியோரக் குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். இதனால் ஆந்திர மடைந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்தது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந் தன. இதன் எதிரொலியாக இப்பள்ளிவாசல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தோகிக்கப்படுகின்றது.

இதுவரை தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாமென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்து. முஸ்லிம்கள் எவ்வாறாயினும் பள்ளிவாசலு க்குள் தாக்குதல் நடாத்தமாட்டார்கள்.

எனவே, இது தாய்லாந்து இராணுவ வீரர்களின் வேலை தான் என நம்பச் செய்யும் வகையில் இப்பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்திருந்தாலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே செய்துள்ளனர் என இராணுவ அதிகாரி கூறினார். தாய் லாந்தில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.
 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டமைச்சர் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்தின் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸெய்யித் அல் நஹியான் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருதை தரும் அல் நஹியான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ள அல் நஹியான், மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

அகாஷி வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசி நேற்று காலை வவுனியா மெனிக் பாமிற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அவர் கேட்டறிந்ததோடு அரச அதிகாரிகளுடனும் பேச்சு நடத்திய தாக வவுனியா மாவட்டச் செயலகம் கூறியது.

அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி. உயர்படை அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ஸ் மற்றும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் ஜப்பானிய தூதுவருடன் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட ஜப்பானிய விசேட தூதுவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் தொடர்பில் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறின. ஜப்பானிய தூதுவர் இன்று (10) வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த இருதரப்பு உறவுகள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், ஜப்பானினூடாக வழங்கப்படவுள்ள உதவிகள் என்பன குறித்து பேச்சு நடத்த உள்ளார்.நாளை (11) அவர் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து யசூசி அகாசி நாடு திரும்பவுள்ளார். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி 18வது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு புதிய எம்.பீக்கள் நேற்று சபையில் சத்தியப்பிரமாணம்

06arliament.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திம வீரக்கொடியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நந்திமித்ர ஏக்கநாயக்கவும் நேற்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட மற்றும் மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலிக் அலுவிஹார ஆகியோரின் மறைவையடுத்து நிலவிய வெற்றிடங்களுக்கே இவ்விருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடிய போதே இவ்விருவரும் எம்.பீக்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்லியன் ஒதுக்கீடு

cey-elc.jpgவட பகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிப்பதற்காக 9550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று கூறியது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க 3650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, சகல கிராமங்களுக்கும் மின்சார வசதியளிக்கவென 5200 மில்லியன் ரூபாவும், மின் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்க 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

வடபகுதிக்கு மின்சார வசதி வழங்குவதற்கான சில திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் அனுமதியுடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதன் கீழ் 30 வருடங்களாக பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட மின்மாற்றிக் கோபுரங்கள் மின் விநியோக உப நிலையங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பலவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது-

ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பு வங்கியின் 1400 மில்லியன் ரூபா கடனுதவியுடன் 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை நிர்மாணிக்கப்பட உள்ளது. இது தவிர 2250 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் இருந்து சுண்ணாகம் வரை 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வடபகுதிக்கான மின் விநியோக திட்டங்களை மேம்படுத்துவதற்காக 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மூன்று வருட திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 5200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு டி. ஜே. செனவிரத்ன கூறினார். துரிதமாக மின்சார வசதி அளிக்கும் வகையில் 400 கிராமங்களில் கிராமிய மின்சார திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினை என்பது, விடுதலைப்புலிகளை விட பெரியதாகும்- இந்தியப் பிரதமர்

10manmohan.jpgஇலங்கை தமிழர் பிரச்சினை என்பது, விடுதலைப்புலிகளை விட பெரியதாகும் என்று கூறியிருக்கின்ற இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், தமிழர்களின் நியாயமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம், புதிய சிந்தனைகள் மற்றும் துணிச்சலுடன் செயற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர், இலங்கை தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்ற மக்களாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

“இலங்கையின் மக்களுடன் எமக்கு பல நூற்றாண்டுகால உறவுகள் இருக்கின்றன. அங்குள்ள தமிழ் மக்களின் நலன் குறித்து எமக்கு ஆழமான மற்றும் பிணைப்புடனான ஆர்வங்கள் இருக்கின்றன. தமிழ் பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளை விட பெரியதாகும். இலங்கை மக்கள் சம உரிமை பெற்ற குடிகளாக, கௌரவத்துடன் வாழ்வதற்கான அவர்களது அபிலாசைகளை தீர்த்துவைக்க புதிய சிந்தனைகளையும், துணிச்சலையும் காண்பிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார் மன் மோகன் சிங்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் செயற்திறன் மிக்க பங்கை ஆற்றியிருப்பதாகவும், இந்த தேவைகளுக்காக இந்தியா ஏற்கனவே 500 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் கூறினார்.

கூட்டமைப்பு எம்.பி கிஷோர் நடுநிலை

06arliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் நேற்று (09) அங்கீகாரம் வழங்கியது.

சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க முன்வைத்த பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்ததும், வாக்கெடுப்புக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா சபாநாயகரிடம் கோரினார்.

எனினும் வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே எதிராக வாக்களித்தனர். கூட்டமைப்பைச் சேர்ந்த சிவநாதன் கிஷோர் எம்.பி. வாக்களிக்காது நடுநிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அவருக்கு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து பாராட்டைத் தெரிவித்தனர்.

டெங்கு அச்சுறுத்தல்: உலமா சபையின் வேண்டுகோள்

dengu_1.gifடெங்கு நாட்டின் பல பாகங்களிலும் பரவிய வண்ணமுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ண முள்ளன. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா பின்வரும் அறிக்கையை விடுக்கிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இன்று வரையிலான ஐந்து மாதக் காலப் பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோய்க்கு ஆளாகியும், நூற்றுக் கணக்கானோர் பலியாகியுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில் மிக வேகமாகப் பரவி வரும் இந்நோயிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் நிமித்தம், நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியமென்பதை நினைவுறுத்த விரும்புகிறது. எனவே, இவ்விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மிக விழிப்புடன் இருக்குமாறும், சுத்தத்தை பேணுமாறும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, சுத்தம் ஈமானின் பாதியென்ற நம்பிக்கையோடுள்ள அனைத்து முஸ்லிம்களும் அதனை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது. இந்நோயினால் அவதியுற்றிருக்கும் சகல மக்களுக்காகவும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுதல், தானதர்மம் செய்தல், பிரார்த்தனையில் ஈடுபடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்வதுடன், உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் குத்பா போன்ற சந்தர்ப்பங்களில் மக்களை விழிப்பூட்டுமாறு உலமா சபை வினயமாக வேண்டிக் கொள்கிறது.

வீதிகளைப் புனரமைக்க கடந்த மூன்று வருடங்களில்; 9400 மில்லியன் செலவு

06arliament.jpgநாட்டின் பல பகுதிகளிலும் வீதிகளைப் புனரமைக்க கடந்த மூன்று வருடங்களில் 9444.5 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியதாக அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலா பிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் ஒன்று இடம்பெற்ற போதும் வீதிப்புனரமைப்பு வேலைகள் நூறு வீதம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டினார். வீதிப் பராமரிப்பு நிதியத்திலிருந்து வீதி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த 2006 இல் 2934 மில்லியன் ரூபாவும்,  2007 இல் 3410 மில்லியன் ரூபாவும்,  2008 இல் 3103.5 மில்லியன் ரூபாவும்,  ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கல்வியை முடிந்த மாணவிகளுக்குத் தொழிற்பயிற்சி

மன்னாரில் பாடசாலைக்கல்வியை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதேசச் செயலாளரின் தலைமையில் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.

பாடசாலைக் கல்வியை தொடராத நிலையில் கடற்கரைப்பகுதியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 20 மாணவர்களுக்கே மேற்படி தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சின் நிதி அனுசரணையில் மேற்படி தொழில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் கடற் தொழிலுடன் சம்பந்தப்பட்ட வெளி இணைப்பு இயந்திரம் திருத்துதல் (அவுட் மோட்டர்) தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சிறப்பு விருந்தினராக ஈ.பி.டி.பி அமைப்பின் மாவட்ட பொருப்பாளர் லிங்கேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி 20 தொழிற்பயிற்சியாளர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 4000/= கொடுப்பணவுகள் வழங்கப்படும் எனவும் 06 மாதங்களைக் கொண்டதாக பயிற்சி அமையும் என்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.