11

11

ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமா?

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்து இறந்து போன பயணிகளில் இருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் ரகசிய போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ரகசியப் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு பயணிகளின் பெயர்களும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பெயர்களைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் சட்டவிரோத கடைகள் உடைப்பு

மட்டக் களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் இன்று (11.06.2009) காலை உடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திருக்கொண்டியாமடு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீட்டர் பாதையை அகலமாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காத்தான் குடி நகரசபை தலைவர் யூ எல் முபின் தெரிவித்துள்ளார்.

இந்த வீதி புனரமைப்பிற்கு ஜப்பான் அரசு 3600 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளது. இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் – தமிழருவி

thamilaruvi.jpgஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். “அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்” என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் ‘தமிழா… உன் கதி இதுதானா?’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :  

“உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ…
சமாதியோ… மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது…”

என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் ‘நாடி ஜோசியம்’ சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், ‘இரவு’ என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

‘என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.

என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!’ என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். ‘பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!’ என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

“பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி… ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.

பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக ‘நூரம்பர்க் விசாரணை’ நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. ‘சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ உருவானது. ‘உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே’ என்று தெளிவுபடுத்துகிறது. ‘சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்’ என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

‘ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

‘சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!’ என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். ‘அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்’ என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

‘பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?’ என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க தெரிவுக்குழு அமைக்கும் யோசனை – அரசு நிராகரிப்பு

parliament-of-sri-lanka.jpgஊடக வியலாளர்கள் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதன்கிழமை சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறானதொரு தெரிவுக்குழுவுக்கு தற்போது எந்த அவசியமும் கிடையாதென அரசாங்கம் மறுத்து விட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசிய எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும், ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவிக்கையில்;

வடக்கிலும் தெற்கிலும் தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாகிவிட்டது. எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது வடக்கில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டாலுமே தெற்கில் பயங்கரவாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கானதொரு சமிக்ஞையைக் காட்டியுள்ளது. அதாவது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் வீசிச் செல்லப்பட்டிருக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக் கேடானதுமான செயலென நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகவியலாளர்களுக்குத் தமது கருத்துகளை எழுத்து மூலமும் சரி, பேச்சு மூலமும் சரி வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் எமது அரசியலமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருக்கும் உரிமையாகும்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான ஆட்சிக் காலத்தில் 11 “ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாம் இந்த சபையில் தகவல்களை வெளியிட்டிருக்கிறோம். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எமக்கு திருப்தியடைய முடியாது. ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேக நபரையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கடத்தி தாக்கப்படும் சம்பவங்களையும் தடுத்துக்கொள்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும். இதனடிப்படையில் சகல விடயங்களையும் ஆராய்ந்து இதுவரை இடம்பெற்றுள்ள படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன், அதற்குரிய அதிகாரத்தின் பிரகாரம் பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் இந்தத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் யோசனை செய்கிறோம்’ என்றார். அமைச்சர் யாப்பா இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா பேசுகையில்;

“இது பயங்கரவாதம் இருந்த நாடு. எனவே, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் உதாரணம் காட்டுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் அரசாங்கம் என்ற வகையில் தேடிப் பார்க்கும் பொறுப்பு எமக்குள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போதும் வெளிநாட்டு தலைவர்கள் இலங்கை வரும்போதும் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் கவலையடைகிறோம். அசோசியேட் நியூஸ் பேப்பர்ஸ் (லேக்ஹவுஸ்) நிறுவனத்திலேயே பணிபுரிகிறார். அவருக்கும் அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அது மட்டுமல்லாது கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் அவர் அரசுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ எதுவும் எழுதினாரா என்று கூட எமக்குத் தெரியாது.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு (போத்தல ஜயந்தவிற்கு) வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. அப்படியான சட்டங்களைக் கொண்டு வரும் எண்ணமும் எமக்குக் கிடையாது.

இதேநேரம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் சிலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளது. சிலவற்றைத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும். எனவே, இதற்கு தெரிவுக்குழுவொன்று அவசியமில்லை. ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதுமே கடமைப்பட்டுள்ளது’

வணங்காமண் கப்பலை திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற செயல்: நெடுமாறன்

vanangaaman-captainali.jpgவணங் காமன் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற கொடிய செயல் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அவற்றை ‘வணங்காமண்’ என்னும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், அக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது மனித நேயமற்ற கொடிய செயல்.

நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை பதவி பிரமாணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே தேர்தல் திணைக்களத்தினால் இவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இக் கட்சி சார்பில் முதலாவது இடத்தைப் பெற்றிருந்த கனகசபை பத்மநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

அவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மரணமடைந்த நிலையிலேயே மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை அந்த இடத்திற்கு நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

லண்டனில் ரயில்கள் வேலை நிறுத்தம்:பல லட்சம் மக்கள் அவதி

tube-train_pa.jpgலண்டன் பாதாள ரயில் ஊழியர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதன் காரணமாக பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தினந்தோரும் பாதாள ரயிலை பயன்படுத்தும் 35 லட்சம் பயணிகளின் தேவைக்காக கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு, வேலையிடங்கள் குறைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைக்க புதிய கட்டிடம் – 15ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

sumeda_jayasena.jpgகிளி நொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 349 இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்ல கட்டிடம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் சுமார் 50 ஆயிரம் சிறுவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த சுமார் 850 சிறுவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அவர்களின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலன்புரி முகாம்களிலுள்ள பெண்களை சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரி பிரேத அறையில்

வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும்.

இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள்.

நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் இவர்கள் இறந்த விபரங்களும் குடும்பத்தவர்களுக்கு தெரியாதுள்ளது.

இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறு நூற்றுக்கணக்கான வயோதிபர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிசுக்கள் யாவும் பிறப்பின்போது மரணித்தவையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆஸ்பத்திரி சவச்சாலையில் இடவசதியின்மை காரணமாக இந்த சடலங்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட பகுதி மக்கள் நலன்பேண மியன்மார் 5.5 மில்லியன் ரூபா அன்பளிப்பு

donation_myanmar.jpgவட பகுதி மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகளுக்கு மியன்மார் அரசு 5.5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்தப் பணத்தை மியன்மார் வெளிநாட்டமைச்சர் நயன்வின் தனது அமைச்சில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் நிவ்டன் குணரத்னவிடம் இன்று கையளித்தார்.

இந்தப் பணம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.