09

09

உலக கிண்ண போட்டிக்கான புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

new-stadium.pngதென்னா பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்  போட்டிக்காக அமைக்கப்பட்ட புதிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கு நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு ஐந்து புதிய கால்பந்தாட்ட விளையாட்டு  அரங்குகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட புதிய கால்பந்து அரங்கு போர்ட் எலிஸபத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. “நெல்ஸன் மண்டெலா பே” என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கு 48,000 ஆசனங்களை கொண்டுள்ளது.

இங்கு 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் காலிறுதி மற்றும் மூன்று, நான்காம் இடங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் உட்பட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் இங்கு முதல் விளையாட்டாக பிரித்தானிய அயர்லாந்து லயன்ஸ் அணிகள் மோதும் ரக்பி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய கொடி எரிப்பு-வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன்

தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை  உயர்நீதிமன்றம்  வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.

இந்த அமைப்புகளின் சார்பில், மே 24ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தமிழரசன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் எட்டு பேருக்கும் உள்ளூர் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை நீதிபதி ரகுபதி  விசாரித்தார். பின்னர் வித்தியாசமான நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்தார். அந்த வித்தியாசமான நிபந்தனை என்னவென்றால், எட்டு பேரும் ஒரு மாதத்திற்கு தங்களது வீடுகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

ஒரு வாரத்திற்கு, தினமும் 3 மணி நேரம் அனாதை இல்லத்திற்கு சென்று பொது சேவை செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு அந்தக் கொடியை ஏற்றி வர வேண்டும் என வித்தியாசமான தண்டனை கொடுத்தது நீதிமன்றத்தில் பலரையும் வியப்படைய வைத்தது.

சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா

07sivageetha.jpgமட்டக் களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மத்திய குழு தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது.

அக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

லெபனான் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி அபார வெற்றி

election_ballot_.jpgலெப னானில் நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் சாத் ஹரிரி தலைமையிலான  கூட்டணி அபார வெற்றியைப்  பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் தமது கூட்டணியான 14 மார்ச் முன்னணி தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்குமென அதன் ஹரிரி தெரிவித்துள்ளார். வேளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஹரிரி தலைமையிலான கூட்டணி 128 மொத்த ஆசனங்களில் 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஹிஸபுல்லா அமைப்பு 57 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன் அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 128 ஆசனங்களில் ஹரிரியின் கூட்டணி 70 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாஹ் முன்னணி 58 ஆசனங்களையும் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும்; வெற்றிபெற்ற அணி எதிர்பார்த்ததைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாக பெற்றுள்ளது.

இங்கு வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் என எவருமில்லை. லெபனானும் ஜனநாயகமுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதெனத் ஹரிரி தெரிவித்துள்ளார். 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த அதேவேளை, 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் அதிகாரப்பகிர்வு அரசியல் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தின் 128 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்: ஆனந்தசங்கரி

007anandasangaree.jpg“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் முதல் எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே” என ஜனநாயக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்குத் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒருநாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர். புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து கொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொள்ள எவ்வித அருகதையும் கிடையாது. அவ்வாறு இணைந்தால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ்க் கூட்டமைப்பைப் போல் விலைபோக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்” என்றார். 

வடமாகாண முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் ரவூப் ஹக்கீம் பின்னால் ஒருபோதும் செல்லமாட்டார்கள்

rizad_baduradeen1.jpgவட மாகாண முஸ்லிம்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ள அவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையும் தன்மானமுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லமாட்டார்களென தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன், எதிர்க் கட்சியில் இருந்து நாம் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் எமது சமூகம் எங்கு சென்றிருக்கும் எனவும் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்படைகளினதும் பொலிஸாரினதும் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு கூறினார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விழா, கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாது என்று வெளிநாட்டு சக்திகளின் தயவை நாடி சில கட்சிகளும் அமைப்புகளும் செயற்பட்ட போது அதற்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்று செயற்பட்டதன் பிரதிபலனை எமது மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.  மூதூரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், கந்தளாய் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். இம் மக்கள் வெளியேறி வந்த போது பட்ட துன்ப, துயரங்களை நான் நேரடியாகக் கண்டவன்.

இம் முஸ்லிம் மக்களின் நிலையை நான் ஜனாதிபதிக்கு நேரடியாக எடுத்துக் கூறியதையடுத்து அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட போது இவர்களைக் குடியமர்த்த வேண்டாம். முதலில் சாம்பூர் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் பேசினார். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை உணர்ந்து கொள்ள முடியாத தலைமைத்துவமான ஸ்ரீ.ல.மு.கா. எப்படி வடமாகாண முஸ்லிம்களினதும் விடிவுக்கு செயற்படப் போகின்றது? தமது பதவியையும் அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கும் சுயநலப் போக்குக் கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் நாம் சென்றிருப்போமெனில் வடமாகாண முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றப்பட்டிருப்பார்கள்.

பிரதேசவாதமும், ஊர்வாதமும், தெளிவற்ற கொள்கையும், பேசி மக்களை ஏமாற்றி, ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலம் சுய நலத்தைத் தக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பைப் பேணி அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது தனிப்பட்ட சுயநலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சமூகத்தின் விடிவுக்காக பாடுபடுவதைப் போன்று முகம் காட்டுபவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும் மதிப்பிடப்படமுடியாதவை அவற்றுக்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாக மாறிவிடாது. எவ்வித அரசியல் அதிகாரமுமின்றி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்துக்கென சாதித்தவை பெற்றுக் கொடுத்தவை, எதுவும் இல்லை.

மறைந்த தலைவர் அஷ்ரப் தமது ஆளுமையினால், இலங்கை அரசியலில் முக்கியமான நிலையில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகள் பல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோரம் போகும் தற்போதைய ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவம் தவறான பாதையில் செல்கின்றது என்பதை அறிந்தும் அதன் பின்னால் செல்வதில் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

வவுனியா இராணுவ முகாம் ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

007vauniya.jpgவவுனி யாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இராணுவத்தின் 211 ஆவது படை தலைமையகத்தின் ஆயுத களஞ்சிய சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தலைமையகம் இராணுவ முகாமிற்கும் விமான படை முகாமிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டமையினால் நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது. நகரத்திற்கு வருகைதந்திருந்தவர்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளை நோக்கி விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது

புகைப்படம்: லங்காதீப

யுத்தம் முடிவடைந்துவிட்டது; ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே அடுத்த இலக்கு – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து இன மக்களுமே தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தத்தினால் நிம்மதி இழந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். யுத்தம் முடிவடைந்துவிட்டது. இனி எமது கடமை ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதேயாகும். அதனை நான் முன்னெடுத்தே தீருவேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கதிர்காமப் பகுதியிலுள்ள கித்துல்பவ்வ சரித்திரப் பிரசித்திபெற்ற பௌத்த விகாரையில் இடம்பெற்ற “பொசன்’ பண்டிகையில் கலந்துகொண்ட பின்னர் அங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தனது உரையில் தொடர்ந்து கூறியதாவது;

எந்தவொரு நாட்டில் ஒழுக்கக்கேடுகள் உள்ளதோ அந்த நாடு சீரழிந்துவிடும். நாங்கள் யுத்தத்தில் வெற்றிகண்டுவிட்டோம் என்று கூறிக்கொண்டு இருந்துவிட முடியாது. அதேபோல், எம்மத்தியில் அதுவும் அரச தலைவன் என்ற ரீதியில் வெற்றிகொள்வதற்காக எத்தனையோ சவால்கள் என்முன்னே இருக்கின்றன. அவைகளுள் ஒன்றுதான் நாட்டின் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.

முதலில் சகல மதகுருமார்களுக்கும் அதேபோல், வயோதிபர்களுக்கும் மரியாதை செய்து அவர்களுடன் மக்கள் அனைவரும் கௌரவத்துடன் செயற்பட்டு இந்த நாட்டை ஒழுக்கமுடைய நாடாக மாற்றி அமைப்பேன். கித்துல்பவ்வ விகாரை அன்று கவன்திஸ்ஸ அரசனின் பரிபாலத்தின் கீழ் இருந்தது. எதிரிகள் அதனை அழிக்க முற்பட்டபோது, பௌத்த குருமார்களே பாதுகாத்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தங்க வேலியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். பகல் 12 மணிவரை இங்கு தங்கியிருந்து பௌத்த மக்களுடன் ஜனாதிபதி பொசன் பண்டிகை சமய வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதேநேரம், சனிக்கிழமை மாலை கதிர்காமம் வந்த ஜனாதிபதி இங்குள்ள முருகன் ஆலயம் மற்றும் கிரிவிகாரை என்றழைக்கப்படும் சூரன் கோட்டைக்கும் சென்று வழிபட்டார்.

முருகன் ஆலயத்தில் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். ஜனாதிபதியுடன் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரும் பூஜைகளில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை இந்திய பிரதமருடன் சந்திப்பு

007tna.jpgஇரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்ட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் சென்றுள்ள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திர பொன்னம்பலம் ஆகியோர் அணமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை நிலவரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, தமிழர் மறு வாழ்வு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.

யசூசி அகாஷியின் வருகையின் நோக்கங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

yasusiakasi.jpgஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி பதினெட்டாவது முறையாக இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் அகாஷி வந்துசென்ற ஒவ்வொரு முறையின் பின்னரும் அவரது வருகை நோக்கங்கள் தொடர்பில் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் விளக்கமின்மை நிலவி வந்துள்ளது என்பதை ஜப்பானிய அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள ஜப்பானிய தூதுவரும் புரிந்துகொள்ளவேண்டும் என மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷியின் வருகை தொடர்பாக மனோ எம்.பி.மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார பங்காளி நாடு ஜப்பானாகும். இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஜப்பானின் இலங்கை தொடர்பிலான நோக்கங்கள் பொருளாதார ஒத்துழைப்பிற்கு அப்பால் இருக்கின்றதா என்பது பற்றி எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

தீராத தேசிய இனப்பிரச்சினை காரணமாகவும் போர்ச் சூழல் காரணமாகவும் இலங்கையிலே வேறு எந்தவொரு பிரிவினரையும் விட அதிக துன்பங்களை அடைந்துள்ளவர்கள் தமிழ் மக்களே என்ற அடிப்படை உண்மையை சமாதானத்திற்கான விசேட தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொண்டுள்ளாரா என்பது பற்றி எமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

வர்த்தக பொருளாதார தூதுவராக அல்லாமல் சமாதானத் தூதுவர் என்ற அடிப்படையில் யசூசி அகாஷியின் பயணங்கள் அடையாளப்படுத்தப்படுவதால் எமக்கு இந்த சந்தேகங்களை எழுப்புவதற்கு உரிமை இருக்கின்றது. ஜப்பான் ஒரு பௌத்த நாடு. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதேவேளையில், இலங்கை நாட்டில் பௌத்தர்களுடன் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் வாழ்வதை ஜப்பான் அறிந்துகொள்ளவேண்டும். எனவே, இலங்கை பற்றிய நோக்கங்கள் முழுநாட்டிலும் வாழும் அனைத்து மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டவையாக அமைவது அவசியமானதாகும்.

வடக்கிலே இன்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொல்லொணா துன்பங்களை நீக்கும் பாரிய மனிதநேய பணியில் பங்களிப்பு செலுத்தும் அதேவேளையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவதில் பிரதான அக்கறையை ஜப்பான் வெளிப்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்விற்கு ஜப்பான் அரசாங்கத்தின் பங்களிப்பு இதுவரை இருந்ததைவிட வெளிப்படையாக அமையவேண்டும்.

இலங்கையிலே போருக்கும் சமாதானத்திற்கும் இடையிலே மதில் சுவராக இருப்பது நேர்மையான அரசியல் அதிகார பகிர்வின்மை என்பதை ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொள்ளவேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.