25

25

புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன – சபையில் விமல் வீரவன்ச

25vimal.jpgபுலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு சகல பிரிவுகளையும் பலப்படுத்த வேண்டும். அரசியல், நிர்வாக ரீதியில் மட்டுமல்லாது பாதுகாப்பு ரீதியிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலமாகவே பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்காது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பதவி, பதவியாக மட்டுமே இருந்தது. ஆனால், இவரே நிர்வாக ரீதியில் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்.

எதிர்கால பாதுகாப்புச் செயலாளர்கள் நிர்வாக ரீதியில் மட்டுப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. புலனாய்வுத் துறைகளை மத்தியஸ்தப்படுத்துவதற்கான நடவடிக்கை இருக்கவில்லை. அதிகாரம் தவறான ஒருவரின் கைக்குச் செல்வதனால் பிழைகள் இடம்பெறலாம். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக்கொள்ள முடியாது. பொது ஒழுங்குப் பத்திரம் இன்றி தனித்தனி தாளத்திற்கு ஆட முயற்சித்தால் உருவாகபோவதைத் தடுக்க முடியாது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் புலியின் ஆவிகள் பேயாக ஆடுகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று இந்தியாவிடம் கோருகின்றது

யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு தளர்வு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருதால் அதற்கு ஏதுவாக இரவு 11 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது. இதுவரை யாழ்.மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து படைத்தரப்பினர் அதற்கு இணங்கி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இதேநேரம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சகல பாதுகாப்பு தடைகளும் நீக்கப்பட்டுள்ளதுடன் இந்த வீதியூடாக சகல வாகனங்களும் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

நாட்டின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த 57 கோடி ரூபா ஒதுக்கீடு

visvawarnapala.jpgநாட்டின் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு 57 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சுவீடன்,  அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

றுஹ{னு,  பேராதெனிய,  மொரட்டுவை மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  இதற்காக 14 கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. இணையத்தள வசதிகளுக்காக 18 கோடி 20 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகம்

he_president.jpgஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகத் திட்டங்களை மெற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு ஆகக்குறைந்த வட்டி வீதமான 1.25 வட்டி வீதத்துக்கு  ஈரான் அரசாங்கம் 88.7 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குகிறது.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தனியாக வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈபிஆர்எல்எப் வரதர் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.எனினும் கடைசிநேரத்தில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக தமிழர் கூட்டணி தனியாக வேட்பு மனு தாக்கல் செய்ததாக அந்தக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் விநாயகமூர்த்தி சகாயதேவன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8இல் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_ballot_.jpgயாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இவ்விரு தேர்தல்களுக்குமான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.

இத்தேர்தல்களில் யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கு ஐ.ம.சு.முன்னணி நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைக் கையளித்தார். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊடகவியலாளர் கடத்தப்பட்டு விசாரணைகளின் பின் விடுதலை

ஊடகவியலாளர் கிருஷ்ணி இப்ஹாம் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று காலை கடத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்னைக் கடத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் கண்டியில் வைத்து விடுவித்து சென்றுள்ளனர் என கிருஷ்ணி இப்ஹாம் தெரிவித்துள்ளார்.தனக்கு இதற்கு முன்னரும் அச்சுறுத்தல் இருந்த நிலையில், இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இடம்பெயர்ந்தோரின் சுகாதார மேம்பாட்டுக்கு உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

world_bank_logo.jpgவடக் கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போரின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்தி அமையத்தின் திட்டத்துக்கு அமைய வழங்கப்படவுள்ள இந்நிதி உதவியின் அரைப் பகுதி அண்மைய மோதல்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள விசேட சுகாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க பயன்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நவோகா இஷி தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வங்கியால் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமாகவே இந்த 24 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீள்குடியேற்றம்,  புனர்நிர்மாணம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவது உடனடித் தேவையாகும்.

ஏதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கின் சுகாதார தேவைகளில் முக்கியமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் நடமாடும் சிகிச்சை நிலையங்களை அமைத்தல், அங்கவீனமுற்றோருக்கு மறுவாழ்வளித்தல்,  அதிர்ச்சியுற்றுள்ள மக்களுக்கான சிகிச்சைகள் மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய உடனடித் தேவைகள் என்பன இதில் அடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐ.ரீ.என். தொலைக்காட்சிச் சேவை வழங்கும் தனித் தமிழ் தொலைக் காட்சி அலைவரிசையான  வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ் பேசும் மக்களுக்காக இந்த தொலைக் காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.40 அளவில் உத்தியோகபூர்வமாக இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சர்களான அதாஉல்லாஹ். அமீர் அலி. விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐ.ரீ.என். தொலைக்காடசிச் சேவையின் தலைவர் அநுர சிறிவர்தன இதற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் எஸ்.குலேந்திரன் இதன் உதவி முகாமையாளராகவும் எம்.சித்தீக் ஹனீபா செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றனர். வசந்தம் ரீ.வி.யின் ஒலி ஒளிபரப்பு வீ.எச்.எப். 9 அலை வரிசை ஊடாக தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடளாவிய ரீதியில் சேவையை இடம்பெறச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை வசந்தம் தொலைக்காட்சிச் சேவை ஊடாக நிகழ்ச்சிகள் ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன. தமிழ் பேசும் இரசிகர்களைக் கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள்  செய்திகள் அரசியல் விவகாரங்கள் சிறுவர் நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஒலி ஒளிபரப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.00 மணி மாலை 6.00 மணி இரவு 8.00 மணி என செய்திகள் இதன் ஊடாக ஒலி ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்கதையாகும் ஊடக வன்முறை – யாழ் பத்திரிகைளுக்கு தீ!!! : த ஜெயபாலன்

uthayan_logoஇன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள்  தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளே தீக்கிரையாக்கபட்டு உள்ளது. யாழ் புறநகர்ப் பகுதிகளான ஆணைப்பந்தி, கன்னாதிட்டி ஆகிய பகுதிகளில் வைத்து இப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

கன்னாதிட்டியில் நடந்த இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்துபேர் வரையானோர் விநியோகத்தரிடம் இருந்து பத்திரிகைகளைப் பறித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்தார். வந்தவர்கள் தீ வைத்துவிட்டுச் செல்ல மக்கள் அத்தீயை அணைத்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஒரே நிறுவனத்தினூடாகவே விநியோகிக்கப்படுவதால் மூன்று பத்திரிகைகளுமே ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சாவகச்சேரி பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் யாழ் நகரில் உதயன் தினக்குரல் ஆகிய இரு பத்திரிகைகளினது விற்பனையையும் தன்னால் காணக் கூடியதாக இருந்ததாகவும் ஆனால் வலம்புரி பத்திரிகையை நகரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் இப்பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலருக்கு எதிரான செய்தியை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அது பிரசுரிக்கப்படாததனால் இப்பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுவதாகவும் தெரிவித்தார்
 
இன்று யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பதிவு செய்யும் இறுதிநாளாகும். தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கட்டியம் கூறும் நிகழ்வாக இத்தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

சென்ற வாரம் இலங்கை ஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு Committe to Protect Journalist – CPJ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக அவ்வமைப்பிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டில் மட்டும் உலகெங்கும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி ஆகிய இருவரும் இலங்கையர்கள். மே 31 வரையான ஓராண்டு காலத்தில் உலகின் பலபாகங்களிலும் இருந்தும் 37 ஊடகவியலாளர்கள் தங்களது நாடுகளை விட்டு அச்சம்காரணமாக வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களில் மூன்றில் ஒருவர் – 11 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் மோசமடைந்துவரும் ஊடக நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக ஊடகவியலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

1992 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான முதல் இருபது நாடுகளில் 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் ஊடகங்களின் நிலை மிகவும் துயர்மிக்கது. சர்வதேச சமூகத்தை எட்டாத யாழ் தமிழ் ஊடகங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.  – Fact-finding report by the International Press Freedom Mission to Sri Lanka : Jaffna’s media in the grip of terror – August 2007. தற்போதைய தீ வைப்புச் சம்பவம் ஊடக சுதந்திரம் இலங்கை ஊடகங்களுக்கு வெகு தொலைவில் உள்ளதையே வெளிக்காட்டுகிறது.