04

04

காத்தான்குடியில் இளம் வர்த்தகர் கடத்தல்

witevehicle.jpgமட்டக் களப்பு காத்தான்குடியில் நேற்று நள்ளிரவு இளம் வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்த வேளை, வெள்ளை வேனில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  கலந்தர் லெப்பை அஜ்மத்(வயது 38) என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளரான வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

நள்ளிரவு உறக்கத்திலிருந்த வேளை கதவைத் தட்டியெழுப்பிய சம்பந்தப்பட்ட நபர்கள் பலவந்தமாக இவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து காத்தான்குடி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதற்கான பின்னணியோ இது வரை வெளியாகவில்லை.

தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் கருத்து குறித்து கவலைப்படவில்லை – ஸ்ரீ காந்தா பா.உ.

srikanthaa.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லையென அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற முடியுமென்று எவராவது நம்பினால் அந்த அரசியல்வாதிகள் இலங்கையின் சாசனத்தைப் படித்து பார்ப்பது நல்லது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் நாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து எமது மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றோம். எமது வெற்றி தொடர்பாக தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை இப்போது முன்வைப்பவர்கள். யாழ். குடாநாட்டில் 1994 மற்றும் 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

அது ஒருபுறம் இருக்க அரசியல்சாசனத்துக்கு விரோதமாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செயற்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்கள் முதலில் சமர்ப்பித்து சட்டரீதியாக சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, கூட்டமைப்பை கூண்டோடு பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றமுடியாது.

எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவிருந்தாலும் கூட அந்த விவகாரம் நீதி மன்றத்திலேயே முடிவு செய்யப்பட வேண்டிய விடயமாகும். எனவேதான் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லை என்றார்.

“இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்தால் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி’

SLMC Gen Sec M T Hasan Aliவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.  தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.

அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.

யசூசி அகாஷி 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம்

yasusiakasi.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம்,  அபிவிருத்தி, புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

வட மாகாண மாதிரிக் கிராம மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

north_.jpgவட மாகாணத்திலுள்ள மாதிரிக் கிராமங்களில் வாழும் மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை முன்னிட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம்,  மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயங்களில் உள்ள அலுவலர்களிடமிருந்தும் இதற்கான ஒத்துழைப்புக்கள் பெறப்படவுள்;ளன.

இதுதவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதோடு வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு அரச அதிபரின் வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வீட்டிற்குள் நேற்று நண்பகல் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் பணம், நகை உட்பட சுமார் 15 லட்சம் பெறுமதியான உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. அரசாங்க அதிபர் தனது கடமையின் நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் இருந்தவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உப்போடையிலுள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தங்களை அடையாளம் காண முடியாதவாறு ஹெல்மெட்டினால் முகத்தை மறைத்திருந்ததாகவும், கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆயுததாரிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி,மற்றும் விருந்தினராக வந்திருந்த உறவினர்கள் உட்பட அங்கிருந்தவர்களை மிரட்டி அறையொன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வைத்திருந்த ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கை கிரிக்கெட் அணியின் வரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

muralitharan-sri-lankas.jpgஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாளை  5ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. இதன்போது நேற்று புதன்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் அணி உலக நாடுகளுடன் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளை பிரித்தானியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  போட்டிகள் நடைபெறும் தினங்களில் மைதானங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமைச்சர் தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று அரச மரியாதையுடன்

dodangoda.jpgகாலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் காலி, சமனல மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அமைச்சரின் பூதவுடல் காலி,  கராப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வாகன பவனியுடன் ரிச்மன் சந்திவரை எடுத்து வரப்பட்டு அங்கிருந்து கால்நடையாக சமனல மைதானத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அண்மைக் காலமாக சுகயீனமுற்றிருந்த அமைச்சர் தொடங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு காலமானார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,  அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொழில் ரீதியாக சட்டத்தரனியாக இருந்த அமைச்சர் தொடங்கொட, 1983ஆம் ஆண்டு வத்தேகம ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு முதற்தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1993ஆம் ஆண்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்த அமைச்சர் தொடங்கொட தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இவர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் உள்ளுராட்சி, உள்நாட்டு, கூட்டுறவு,  தொழிற்பயிற்சி மற்றும் சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார். பின்னர் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அரும்பணியாற்றிய அமைச்சர் கட்சியின் உபதலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

40 மில்லியன் ரூபாவில் 22 வீதிகள் யாழ். மாவட்டத்தில் புனரமைப்பு

sri-lankan-road.jpgயாழ்.  மாவட்டத்தில் சேதமடைந்த இருபத்திரெண்டு வீதிகள் நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
கடல்கோளால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட எரிந்த அம்மன் கோயில் வீதி, மேலைப்புலோலி பாடசாலை வீதி, வலிக்கண்டி உள்ளக வீதி மற்றும் கல்லூரி வீதி, சுப்பர் மடம் வீதி, மணல் ஒழுங்கை வீதி ஆகியவை புனரமைக்கப்படவுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபைப் பகுதியில் காத்தவராயன் வீதி, சமத்தணை வீதி, நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதி, மயிலியதனை வீதி, தொண்டமனாறு எல்லை வீதி, முருகையன் கோயில் வீதி, தொண்டமனாறு கெருடாவில் வீதி, புற்றளை பிள்ளையார் கோயில் உபய கதிர்காமம் வீதி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, நெடுந்தீவு துங்காலை கிராம வீதியும் பருத்தித்துறை புனித சேவியர் கடற்கரை வீதியும் புனரமைக்கப்படவுள்ளன. வீதிப்புனரமைப்பு வேலைகளை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க கேள்விகள் கோரப்பட்டுள்ளன. வேலைகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும்.

வடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

fishing_peoples.jpgவடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த 180 மற்றும் 200 நாட்கள் கொண்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். 

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ்  மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்தின் கீழேயே இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பவுள்ளது. வட மாகாணத்தில் 219 மீனவக் கிராமங்களில் இருந்து 15000 மெற்றிக் தொண்னையும் விடக் கூடுதலான மீன்கள் பெறப்பட்டுள்ளது.

‘வடக்கின் வசந்தம்’  திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.