அரசிய லமைப்புக்கமையவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும் அத்துடன் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பில் மாற்றம் செய்யப் போவதாகப் பலரும் அஞ்சுகின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது. அரசியலமைப்புக் குட்பட்டதாகவே சகல செயற்பாடுகளும் அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனி பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டியுள்ளது. அத்துடன் போதையற்ற இலங்கையை உருவாக்கும் நடவடிக்கை தொடருமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தெற்கில் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஹந்துகல தேயிலைத் தொழிற்சாலையை உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தேச நிர்மாண அமைச்சின் கீழ் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையினால் 45 மில்லியன் ரூபா செலவில் மேற்படி தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் அமை ச்சர்கள் டி. எம். ஜயரட்ன, சமல் ராஜ பக்ஷ, குணரட்ன வீரக்கோன், மஹிந்த அமர வீர உட்பட அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: முப்பது வருடங்களின் பின் நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்த யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் பின்னர் இன்று நான் எனது ஊரில் முதல் தடவையாக உரையாற்றுகின்றேன்.
நாட்டை ஆண்ட தலைவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் தம்மைப்பற்றியே சிந்தித்தனர். இதில் நாட்டை எழுதிக் கொடுத்தவர்களும் உள்ளனர். இன்று அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு, தெற்கு என சகலதும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சகல இனமத மக்களும் சமத்துவமாகவும் அச்ச மின்றியும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்கு, பலம், புள்ளடி என நாம் இனி சிந்திக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக நாடு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. யுத்தசங்காரத்தை முடித்த நாம் நாட்டைக்கட்டியெழுப்பும் சங்காரத்தையும் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.
எமது காலத்தில் நாம் யுத்தத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தவில்லை. நாட்டின் எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாம் நிறுத்தவில்லை. சகலதையும் செயற்படுத்தினோம். கிராமங்கள் தோறும் அபிவிருத்தி யையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு செல்ல எம்மால் முடிந்துள்ளது.
நான் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலும் நாட்டின் சகல பிள்ளைகளின தும் தந்தை என்ற ரீதியிலும் இளைய சமு தாயத்தை, ஒழுக்கமுள்ள பண்பாடு, கலா சாரம் உள்ளிட்ட உயர் மதிப்பீடுகளை மதிக்கின்ற சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தைக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. போதையற்ற கெளரவமான சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும்போது சகல பெற்றோர்களும் இதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனியும் நாம் காலத்தை வீணடிக்க முடி யாது. அபிவிருத்தியிலும் நல் ஒழுக்கத்திலும் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். அரசியல் தலைவர்கள் குறிப்பாக பிரதேச அரசியல் வாதிகள் தம்மைப் பற்றி சிந்திப்பதை விடுத்து நாட்டைப் பற்றியும், பிரதேச அபிவிருத்தி பற்றியும் சிந்தித்துச் செயற்படுவது அவசியம், ஊழல் மோசடியில் லாத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இன்று நாட்டில் நீலக்கொடியல்ல சிங் கக்கொடியே எங்கும் பறக்கிறது. இன, மத, குல, பிரதேச பேதமற்ற நாட்டின் மக்களாக சகலரும் வாழும் சூழ்நிலையை உருவாக் குவதே எமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்