ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க தெரிவுக்குழு அமைக்கும் யோசனை – அரசு நிராகரிப்பு

parliament-of-sri-lanka.jpgஊடக வியலாளர்கள் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதன்கிழமை சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறானதொரு தெரிவுக்குழுவுக்கு தற்போது எந்த அவசியமும் கிடையாதென அரசாங்கம் மறுத்து விட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசிய எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும், ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவிக்கையில்;

வடக்கிலும் தெற்கிலும் தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாகிவிட்டது. எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது வடக்கில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டாலுமே தெற்கில் பயங்கரவாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கானதொரு சமிக்ஞையைக் காட்டியுள்ளது. அதாவது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் வீசிச் செல்லப்பட்டிருக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக் கேடானதுமான செயலென நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகவியலாளர்களுக்குத் தமது கருத்துகளை எழுத்து மூலமும் சரி, பேச்சு மூலமும் சரி வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் எமது அரசியலமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருக்கும் உரிமையாகும்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான ஆட்சிக் காலத்தில் 11 “ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாம் இந்த சபையில் தகவல்களை வெளியிட்டிருக்கிறோம். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எமக்கு திருப்தியடைய முடியாது. ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேக நபரையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கடத்தி தாக்கப்படும் சம்பவங்களையும் தடுத்துக்கொள்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும். இதனடிப்படையில் சகல விடயங்களையும் ஆராய்ந்து இதுவரை இடம்பெற்றுள்ள படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன், அதற்குரிய அதிகாரத்தின் பிரகாரம் பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் இந்தத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் யோசனை செய்கிறோம்’ என்றார். அமைச்சர் யாப்பா இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா பேசுகையில்;

“இது பயங்கரவாதம் இருந்த நாடு. எனவே, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் உதாரணம் காட்டுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் அரசாங்கம் என்ற வகையில் தேடிப் பார்க்கும் பொறுப்பு எமக்குள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போதும் வெளிநாட்டு தலைவர்கள் இலங்கை வரும்போதும் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் கவலையடைகிறோம். அசோசியேட் நியூஸ் பேப்பர்ஸ் (லேக்ஹவுஸ்) நிறுவனத்திலேயே பணிபுரிகிறார். அவருக்கும் அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அது மட்டுமல்லாது கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் அவர் அரசுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ எதுவும் எழுதினாரா என்று கூட எமக்குத் தெரியாது.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு (போத்தல ஜயந்தவிற்கு) வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. அப்படியான சட்டங்களைக் கொண்டு வரும் எண்ணமும் எமக்குக் கிடையாது.

இதேநேரம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் சிலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளது. சிலவற்றைத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும். எனவே, இதற்கு தெரிவுக்குழுவொன்று அவசியமில்லை. ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதுமே கடமைப்பட்டுள்ளது’

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *