._._._._._.
‘மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல் – டக்ளசின் கலந்துரையாடல் : சபா நாவலன்’ என்ற தலைப்பில் சபா நாவலன் சபா நாவலன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பற்றிய அரசியல் விமர்சனம் ஒன்றை ‘இனியொரு’ வில் எழுதி இருந்தார். அது தொடர்பான தனது கருத்துக்களை ஆனந்த பிரசாத் இங்கு பதிவு செய்கிறார். அவர் இவ்விடயம் தொடர்பான ஒரு திறந்த விவாதத்தையும் எதிர்பார்க்கிறார். ஆனந்த பிரசாத் என்ற பெயரிலேயே தேசம்நெற் அவரை அறிகிறது. அவர் தேசம்நெற்க்கு அறிமுகமானவரல்ல.
._._._._._.
நண்பர் சபா நாவலனுடன் அரசியல் சர்ச்சையில் இறங்குவது எனது நோக்கமல்ல அவர் முன் வைத்துள்ள கணிதச்சமன்பாட்டு பார்வை குறித்த, அதன் அரசியல் குறித்த எனது கருத்தைச் சொல்வதே எனது நோக்கம்.
தமிழ் ஆயுதப்போராட்டத்தின் பின் தமிழ் அரசியல் போக்குப்பற்றிய பார்வை இந்த இடத்தில் நமக்கு அவசியமானது. அதற்கு தமிழ் அரசியல் இயக்கப் போக்கில் எழுந்த ஒற்றைத் தலைமை, ஏக பிரதிநிதித்துவம் ஏனைய தமிழ் இயக்க அரசியல் தலைமைகளைக் கொண்டு சென்று நிறுத்திய இடமும் அவர்களின் தவிர்க்க முடியாத அரசியல் நிலைப்பாட்டு நிர்ப்பந்தச் சூழலும் மிக முக்கியமாக இந்த விவாதங்களிலும் இப்படியான விமர்சனங்களிலும் நமக்கு அவசியமானது. இதனை வெறும் கணிதச் சமன்பாடாக பார்க்க முடியாது.
அரசு சமன் புலிகள், புலிகள் சமன் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் ஈற்றில் எல்லாம் ஒன்றுதான் என நிறுவ முற்படுவது அரசியல் பார்வைக் கோளாறாகவே முடிவதுடன் வரலாற்றுச் சூழலின் விளைவை வெறுமனே புரிந்து கொள்ள மறுப்பதுமாகவே அமையும்.
யாரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதற்கு ஜனநாயக விளக்கம் கொடுக்கப்படலாம். ஆனால் அந்த விமர்சன முன் வைப்புகளில் நமக்குள் நடந்த அரசியலின் போக்கு வடிவம் பற்றிய பிரஞ்ஞையும் அரசியல் தெளிவும் வரலாறும் ஏற்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
இங்கு அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் நாங்கள் அரசையும் விமர்சிக்கிறோம், புலிகளையும் விமர்சிக்கிறோம். ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளையும் விமர்சிக்கிறோம் என்று போக்குக்காட்டிக் கொண்டு “வெறுமனே விமர்சனங்களாக” காலத்தைக் கழித்து விடமுடியாது.
இலங்கை அரசு தலைமையை, புலித் தலைமையை, ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் போது அந்தந்த அர்த்தங்களில் அவை செய்யப்பட வேண்டும். ஒன்றின் மாற்றாக மற்றொன்றைக் காட்டுவதும் அதற்கு இது சமன் என நிறுவ முற்படுவதும் அரசியல் முட்டாள்தனம் என்பதுடன் இவ் விமர்சனங்களின் அர்த்தப்பாட்டுக்கும் காயடித்து விடுகிறது.
தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு சிங்கள அரசு மட்டுமே காரணம் இல்லை என்பதை அரசியல் ரீதியாக தற்போது பலர் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். தமிழர் அவலம் தொடரவும், அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீடிக்கவும், 1984க்குப் பின் விடுதலைப் புலிகள் கொண்ட அரசியல் நிலைப்பாடுகள், இராணுவ நிலைப்பாடுகள் பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. இதனை விளக்கத் தேவையில்லை.
தமிழ் மக்களுக்குள் இருந்து வெளிக்கிட்ட ஏனைய அனைத்து இயக்கங்களையும் அரசின் பக்கம் கொழும்பை மையப்படுத்தி தள்ளியதே புலிகளின் அரசியல்தான். .ஈ.பி.ஆர்.எல்.எப். ஆக இருந்தால் என்ன புளொட், ரெலோ ஆக இருந்தால் என்ன? ஈபி.டி.பி. ஆக இருந்தால் என்ன? ஒன்றும் இதற்கு விதிவிலக்கானவை இல்லைதான். புலிகளின் ஏக தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பிரதிநிதியாகவிருந்த தமிழர் கூட்டணித் தலைவர் திரு.ஆனந்தசங்கரியைக் கூட புலிகளின் அரசியல் கொழும்பை நோக்கியே தள்ளியது.
ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ போன்ற அமைப்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் வரை கொழும்பையே மையப்படுத்தி இருந்தது. புலிகள் பாராளுமன்றப் பதவியை வழங்க முன்வந்த போது, இந்த அமைப்புக்களின் ஒரு பிரிவினர் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, கூட்டணி போன்ற அமைப்புகளுக்குள் கொழும்பு, கிளிநொச்சி ஆதரவு கொண்ட இருதலைமைகள் உருவாகின.
அரசு சமன் புலிகள் ஆகவே அரசுக்கு ஆதரவு வழங்கும் அல்லது கொழும்புடன் நிற்கும் (புலிகளுடன் இல்லாது ) இருக்கும் அமைப்புக்கள், கட்சிகள் அரசின் முகத்தை அதன் பாத்திரத்தை பிரதிபலிப்பவர்கள் ஆகவே அவர்களும் புலிகளும் சமன்தான் என நிறுவலாம் என்பதே நாவலனின் வாதமாகும். அதற்கு அவர் உதாரணமாகக் காட்டுவது ஈ.பி.டி.பி தலைமையை.
மகிந்த சமன் டக்ளஸ் சமன் பிரபாகரன். இதுதான் சபா நாவலனின் கணிதச் சமன்பாடு சூத்திரவியல். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களின்அரசியலை புலித் தலைமையுடனும் அதனது அரசியலுடனும் ஒப்பிடுவது பெரும் வரலாற்றுத் தவறு என்பதுடன் அரசியல் மோசடியுமாகும்.
என்னைப் பொறுத்த வரை மாற்று அரசியல் தலைமைகள் மீதும் (ஆனந்த சங்கரி உட்பட) எனக்கு அரசியல் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர்களின் நிலைப்பாட்டின் தவிர்க்கவியலாத நிலைமையும் தமிழர்அரசியலின் வரலாற்று நிகழ்வும், போக்கும் வழியும் நாவலன் சொல்வது போல் என்னால் அவர்கள் மீது சேற்றை அள்ளி வீச முடியாது. அவர்கள் மீதான நட்பு ரீதியான, அவர்களின் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான விமர்சனங்களையே என்னால் முன் வைக்க முடியும். ஏனெனில் நானும் 1982ம் ஆண்டிலிருந்து தமிழர் போராட்டத்திற்கு புறப்பட்டு அதன் காயங்களுடனும் துயரங்களுடனுமே இருப்பவன். 1987க்குமுன் என்னால் கொழும்புடன் இருப்பதை நினைத்துப் பார்ப்பதைக்கூட முடியாமலிருந்தேன். இப்படித்தான் எல்லோருக்கும் நிகழ்ந்தது.
மகிந்தவையோ, பிரபாகரனையோ விமர்சிப்பதற்கு சமாந்தரமாக ஒரே அளவுகோலைக் கொண்டு மாற்றுத்தமிழ் கட்சிகளை, அமைப்புக்களை விமர்சிக்க முடியாது. இவர்களை அணுகுவதற்கு நமக்கு வேறுதளம் இருக்கிறது. மாற்று விமர்சன வழிமுறை இருக்கிறது.
டக்ளஸ் தேவானந்தா மகிந்தவுடன் மட்டும் நிற்கவில்லை. 1990 க்குப் பின் கொழும்பு அரசியலின் ஊடாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கால்பதித்த பின் பிரேமதாஸ, சந்திரிக்கா போன்ற அரசியல் தலைமைகளுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றார்.அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடக்கம் அன்றாடப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவது வரை தன்னால் முடிந்த பணியை செய்து வருகிறார். 1994ம் ஆண்டு சந்திரிகாவின் அமைச்சரவையில் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவிருந்து முடியுமானவரை வடபகுதி மக்களுக்கு சேவை செய்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அன்றைய அப்பணி பெரிதும் ஆறுதலாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்யப்பட்டதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதும் இக்காலகட்டத்திலேயாகும்.
இப்பணியின் ஊடாக அரசின் உதவியளிப்புகள் அபிவிருத்தி திட்டங்கள் மக்களை சென்றடையும் அரசியல் பொறிமுறையை வடபகுதி தமிழ் மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தார். நான் நினைக்கின்றேன் 1978க்குப் பின் அரசு அபிவிருத்தி உதவியளிப்புகளை புறக்கணித்து, அல்லது அவற்றை கிடைக்க விடாமல் செய்த அரசியலின் போக்கு முதன் முதலாக வடபகுதி மக்களிடையே மாறத் தொடங்கியது. டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டின் மூலம் வடபகுதியில் உதவிபெற்ற மக்கள் ஏராளம். சமூக சேவை, சமூக நலத்துறை அமைச்சராகிய பின்னும் அவர் இன்றுவரை வட பகுதி மக்களுக்கு ஆற்றிவருகின்ற பணிகள் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் இன்று மக்களிடையே உள்ளது.
புலிகளின் அரசியல் இராணுவ வழி முறை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை என்பதை மக்களிடம் தினமும் கண்டு நேரடியாக புரிய வைத்த மாற்று அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாதான். 1980க்குப் பின் ஆயுத அரசியலின் தோற்றத்தின் பின் மக்களை அதிகளவில் சந்தித்து அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்க பணிசெய்த தமிழ் அரசியல் தலைவர் என்றால் அது டக்ளஸ் தேவானந்தாதான். ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வின் அடிப்படையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகின்றார். போரின் மூலம் அல்ல பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அவரின் நிலைப்பாடாகும்.
யாழ்ப்பாணத்தில் அவர் தங்கி நிற்கின்றபோது அவரைச் சந்திப்பதற்கு வருகின்ற அரச ஊழியர் கள், பொதுநிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்களின் மன உணர்வுகளையும் அவர்களது அபிப்பிராயங்களும் இந்த விவாதங்களிலும் விமர்சனங்களிலும் நமக்கு முக்கியமானது. ஏனெனில் நாம்தான் நமது மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோமே அப்படியானால் சபா நாவலன் போன்றவர்கள் யாழ் மக்களிடம் போய், போகமுடியாவிட்டால் தொலைபேசி வாயிலாவது மகிந்தவும் டக்ளசும் ஒன்றா? பிரபாகரனும் டக்ளசும் ஒன்றா எனக்கேட்டு கருத்தறிந்து எழுத முயற்சிக்கலாம்.
இறுதியாக நான்சொல்ல வருவது. அரசுடன் இந்த மாற்றுத்தமிழ் அரசியல்கட்சிகள் நிற்பது புலித்தலைமையின் அரசியலின் விளைவே அன்றி அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. புலிகளின் இராணுவத் தோல்வியின் முடிவு, வடக்கு கிழக்கில் புதிய அரசியலுக்கான சூழலை உதயமாக்கும்போது அரசு, இந்த மாற்றுக் கட்சிகள் அமைப்புக்களின் அரசியல் உறவுகள் வேறு வடிவம் எடுக்கும். இது தவிர்க்க முடியாதது. அச்சந்தர்ப்பத்தில்தான் இக்கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பான முழுவதுமான அரசியல் விவாதத்துக்கும் விமர்சனத்திற்குமான அரசியல் சூழல் எழும்.
நமது பிரதான பிரச்சனை என்ன? உபபிரச்சனைகள் என்ன? எந்த விடயத்திற்கு நாம் இன்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பது அரசியலில் இன்று முக்கியமானது. நமது மக்கள் நலனில் நின்றும்…