05

05

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

cennai.jpgதமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில்  பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.

தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பந்த் குறித்து  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:

பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் உருவில் இன்னுமொருவர்

praba.jpgகடந்த வாரம் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்குக் குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத் தரப்பினர் அறிவித்திருந்தமை தெரிந்ததே. அப்பதுங்குழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்த இன்னுமொருவருடன் பிரபாகரன் எடுத்துள்ள புகைப்படமொன்றினையும் படைத் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படத்திலுள்ளவர் பிரபாகரனை ஒத்த உருவம் கொண்டவர். இவருக்கு பிரபாகரனுக்குக் காணப்படுவதைப் போல மேல் மீசை காணப்படுவதில்லை என்றும், இவர் பிரபாகரனைவிட சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ளவராக இருப்பாரென்றும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  

praba.jpg

மும்பைத் தாக்குதல் சம்பவம்: -120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் முடிவு

mumbai.jpgமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி 120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 120 பேரில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ள முக்கிய தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆல் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பது இதுவே முதல் முறை. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானில் இருந்து செல்போன், ஈ-மெயில் மூலம் தொடர்புகொண்டு பேசியவர்கள் மீது சைபர் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்தது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. ஆதாரங்கள் எதையும் இந்தியா கொடுக்கவில்லை.

வெறும் தகவல்களைத் தான் கொடுத்தது என்று முதலில் பிடிவாதம் செய்த பாகிஸ்தான், வேறு வழியுமில்லாமல் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது 120 பேர் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-யுத்-தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

வன்னியிலிருந்து நோயாளிகளைக் கொண்டுவரும் முகமாக சில மணிநேரம் போர் நிறுத்தம்

injured.jpgஇலங்கையின் வடக்கே நடைபெறும் மோதல்களில் காயமடைந்துள்ளவர்களையும், நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவர வழிசெய்யும் வகையில் நாளை (இன்று) சுமார் ஆறு மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசியிடம் தகவல் வெளியிட்ட,  இலங்கை அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜித் மெண்டிஸ், இந்த போர் நிறுத்தமானது ஆறு மணி நேரத்துக்கு இருக்கும் என்று சுகாதார சேவைகள் துறையின் செயலர் தம்மிடம் தெரிவித்ததாக பிபிசி செய்திச்சேவையிடம் கூறியுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளிகளும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் டாக்டர் அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.  இவ்வாறு வன்னியிலிருந்து சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவரப்படும் நோயாளிகளை கவனிப்பதற்கென்று, வவுனியா மருத்துவமனையில் தனிப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்கு அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர்கள், இரத்தம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது என்றும், இந்தத் தகவல் இராணுவத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அஜித் மெண்டிஸ் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை: இலங்கை அரசு

cluster.gifஇலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் தாம் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று இலங்கை அரசு கூறும் உறுதியை தாம் ஏற்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது என பி.பி.ஸி. செய்திச்சேவை அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 18 மணிநேர எறிகணைத் தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்ற கடைசி முக்கிய மருத்துவமனையும் கொத்தணிக்குண்டுகளால் தாக்கப்பட்டதாக ஐ. நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த கொத்தணிக்குண்டுகளை யார் ஏவினார்கள் என்று தெரியவில்லை என்றும், அந்த மருத்துவமனை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. மேலும் 80 பேர் அதில் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இன்னும் சில நாட்களில் விடுதலைப்புலிகள் வெற்றிகொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தற்கொலை பயிற்சி முகாம் முல்லை காட்டுப் பகுதியில் கண்டுபிடிப்பு – உதய நாணயக்கார

_army.jpgபுலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய பாரிய பயிற்சி முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு அடர்ந்த காட்டுப் பகுதியில் புலிகளால் மிகவும் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாரிய முகாமை இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் இந்த முகாமை பயன்படுத்தியிருக்கலாம் என்று படையினர் நம்புவதாக தெரிவித்த பிரிகேடியர், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்த உடற் பயிற்சி நிலையம், விரிவுரை மண்டபம், நிலக்கீழ் முகாம் மற்றும் பெருமளவிலான உணவு களஞ்சியத் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படையினரின் கடுமையான தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் பின்வாங்கிச் சென்ற புலிகள் விட்டுச்சென்ற ஜீப் ரக வண்டியொன்றையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஜீப்பை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோ அல்லது அவருக்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவரோ கள நிலைமைகளை ஆராய்வதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் படைத் தரப்பினர் சந்தேகிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து சென்றிருக்கலாமென படையினர் நம்புவதாக தெரிவித்த அவர், புலிகளை தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுடன் பிரபாகரன் இறுதி இராப் போசனங்களை இங்கிருந்தே எடுத்துள்ளமைக்கான அறிகுறிகளும், அடையாளங்களும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள பல்வேறு அறைகளில் ஒரு அறையில் தற்கொலை தாக்குதலை நடத்தி உயிரிழந்த புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவு உறுப்பினர்களின் படங்களும் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னி இறுதிக் கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் சாலை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் மோதல்களுக்குப் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஐந்து சடலங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

ரி – 56 ரக துப்பாக்கிகள் –  தற்கொலை அங்கிகள், தொலைத் தொடர்பு கருவிகள் – மோட்டார் சைக்கிள் –  40 மி. மீ. ரக குண்டுகள், மிதிவெடிகள் – பிஸ்டல்கள், 120 மி. மீ. ரக மோட்டார் குண்டு –  12.7 மி. மீ. ரக விமான எதிர்ப்பு பீரங்கி –  பெருந்தொகையாக வெடிக்க வைக்கும் கருவிகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கிற்கு சுபீட்சத்தை வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – ஜனாதிபதி

4-2-2009.jpg
பயங்கரவாதத்தின் பிடியில் பல்லாண்டு காலமாக அகப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் சகல மக்களும் அம் மக்களுக்கான சுபீட்சத்தையும் அன்பையும் நட்பையும் வழங்க முன்வருவதுடன் சொல்லாலும் செயலாலும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது தாய்நாடு ஒரே கொடியின் கீழ் வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், தாய்நாட்டுக்குத் தம் கடமைகளை நிறைவேற்ற சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை; யுத்தத்தின் காரணமாக சொந்த நாட்டை விட்டுச் சென்று வெளிநாடுகளில் வசிக்கும் சகல இலங்கைப் பிரஜைகளையும் மீண்டும் தாய்நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றையும் விடுத்தார்.

இலங்கையின் 61வது சுதந்திர தின பிரதான நிகழ்வு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு உள்நாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

முழு நாட்டையும் பல தசாப்த காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்த பயங்கரவாதத்தை இரண்டரை ஆண்டுகால குறுகிய காலகட்டமொன்றில் முழுமையாகத் தோல்வியுறச் செய்ய எம்மால் முடிந்துள்ளது.விடுதலைப் புலி பயங்கரவாதம் வெகுவிரைவில் முற்றாக ஒழிக்கப்படும். எமக்கு முன்னால் தலைதூக்கியிருந்த பலம்வாய்ந்த எதிரியை தோற்கடிக்க முடிந்தமை பெருமையளிக்கின்றது. பல வருட காலங்களுக்குப் பின்னர் பிரிவினை வாத பயங்கரவாதத்தின் கரு நிழலை இல்லாதொழித்து நாட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்குப் படையினர் எமக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.

அண்மைக் காலமாக உலக நாடுகளில் பல பயங்கரவாத அமைப்புக்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் பயங்கர வாதத்தைத் தோற்கடித்து தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பல அரசாங்கங்கள் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்று கூறிய போதிலும் தற்போதைய அரசாங்கம் இரண்டரை வருட காலத்திற்குள் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முப்படையினரும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். படையினரின் அர்ப்பணிப்பே தேசியக் கொடி நாடெங்கும் பறப்பதற்கு வழிவகுத்துள்ளது.

உலகில் எத்தனை நாடுகள் இருந்தபோதும் தமது தாய்நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது. அதனால் கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தச் சூழலினால் நாட்டை விட்டுச்சென்று வேற்று நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பும் காலம் உருவாகியுள்ளது. இதற்கிணங்க, சொந்த நாட்டை விட்டுச் சென்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், உள்ளிட்ட சகல இலங்கையர்களும் மீண்டும் தாய்நாட்டுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

தேசியக் கொடி தற்போது புத்தெழில் பெற்றுள்ளது. தேசிய கீதத்துக்குப் புதிய பலம் கிடைத்துள்ளது. தாயகம் ஐக்கியப்பட்டுள்ள இவ்வேளையில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவது அவசியம். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதோடு சகல சவால்களும் முடிவடைந்துவிடப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்குப் பொருத்தமான கல்வியை வழங்க வேண்டியுள்ளது.

வறுமை தலை தூக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. சிந்தனை மாற்றம் கொண்ட அரச சேவையை உருவாக்குவதும் எமது முக்கிய சவாலாகும். ஊழலுக்கும் வீண் விரயத்திற்கும் இடமளிக்காது சிறந்த அரச சேவைக்காகச் சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்கள் பூர்த்தியாகிய போது எமது நாட்டைப் பிரித்து கூறு போடுவதற்கு முயற்சித்த பிரிவினைவாதமொன்று தலைதூக்கியது. கடந்த ஆண்டுகளில் நாம் சுதந்திரத்தினை நினைவு கூர்ந்த போதும் சட்டவிரோத பிரிவினைவாத பயங்கரவாதத்துடன் நாம் வாழ்ந்ததால் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவு கூர முடியவில்லை. கடந்த காலங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளிலும் இருந்த நன்மை தீமைகளை ஆராய்ந்து புதிய வழிமுறை யொன்றை மேற்கொள்ள நாம் உத்தேசித்துள்ளோம்.

அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்போது பிளவுபடாத நாடு, பெரும்பான்மை கருத் தொருமைப்பாடு, கெளரவமான சமாதானம் ஆகியன இயல்பாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து வருவோரின் நலன்பேண ரூ. 300 மில். ஒதுக்கீடு – அமைச்சர் ரிஷாட்

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து அரசகட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகின்றவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் அடிப்படைத் தொகையாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை 1,180 குடும்பங்களைச் சேர்ந்த 2,913 பேர் வவுனியா பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 940 குடும்பங்களைச் சேர்ந்த 2,131 பேர் நெலுக்குளம் நலன்புரி நிலையத்திலும் 240 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் மனிக்பாம் நலன்புரி நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைக் குடியமர்த்துவதற்காக 350 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான வீடுகள் வழங்கப்படுவதுடன் உணவுப் பொருட்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.  இதேபோன்று சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு வருகின்ற அனைவருக்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயரும் அனைவருக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 900 ஏக்கர் நிலப்பரப்பில் 24 ஆயிரம் வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இடம்பெயரும் அனைவருக்கும் ஏனைய பகுதிகளில் வசிக்கின்றவர்களைப் போன்று வாழ உடனடியாக சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டார்.