February

February

நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோரை உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதி

red-cr.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை முகாமுக்கு வெளியே உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதிப்பதென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முகாமுக்கு வெளியே தமது உறவினர்களுடன் சுதந்திரமாக வசிப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்க முடியுமென்று வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எப் சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 31,504 பேர் உள்ளனர். இடம் பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தமது உறவினர்களின் உதவியின்றி தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு அவர்களது உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு அனுமதித்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுவித்துள்ளோம். இனங்காணப்பட்ட மேலும் 73 பேர் ஒரு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோரை தவறவிட்ட 4 சிறுவர்கள் மீண்டும் தமது உறவினரை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் தமது பெற்றோருடன் இணைந்துள்ளனர்.

இன்னும் சில சிறுவர்களின் பெற்றோரை தேடிவருகிறோம். இவ்வாறு உறவுகளை தவறவிட்டவர்களுக்கும் உதவும் வகையில் தேவையான தகவல்களை வழங்கவென நேரடித் தகவல் தொடர்பாடல் வசதியொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணிய தேவையில்லை – பிரதமர்

pm-srianka.jpgஇலங்கை இறைமையும் சுயாதிபத்தியமும் கொண்ட தனித்துவமான நாடு. எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் தலையிட இடமளிக்க முடியாதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.  சர்வதேச நாடுகள் சில யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் கொடுத்து வருகின்றன. இலங்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெற்று நீண்டகாலங்களாயிற்று.  தற்போது இந்நாடு ஜனநாயகம், கெளரவமிக்க சுதந்திரமான நாடு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசொன்றைக் கொண்ட நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை யெனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஹொரணை மக்கள் இராணுவத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் முக்கிய நிகழ்வொன்று நேற்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் நாம் ஏணியின் இறுதிப்படியில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது.  யுத்த நிறுத்தம் பற்றி பேசப்படுகிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அதுபற்றி யோசிக்க முடியும். ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்த நிறுத்தம் என்பது முடியாதது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் உறங்க முடியாது. இதனை நான் பிரதமராகப் பதவியேற்று முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன். இன்றைய அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்கத்துக்கும் இது பொருந்தும். பால் பொங்கி வரும்போது அதில் சாணத்தை இடுவது போன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் இறுதித் தருணத்தில் சிலர் யுத்த நிறுத்தம் பற்றி அழுத்தம் கொடுக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவாமல் அதற்கு ஆசீர்வாதம் வழங்க முற்படுபவர்கள் தேசத் துரோகிகாளவர்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதில் பெருமளவு புலிகள் பலியாவதைப் போன்றே இராணுவத்தினரும் பலியாகின்றனர். அதனை எவரும் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்குக்கான அர்ப்பணிப்பே இது. இந்த வகையில் நாம் படையினருக்கு தற்போது செய்வது போதாது. அவர்களுக்கு முழுமையாக உதவவும் ஆதரவு வழங்கவும் நாம் தயாராக வேண்டும். அவர்களைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமக்குள்ளது இலங்கை மட்டுமே. எமக்கு வேறு நாடு கிடையாது. நாம் வேறு எந்த நாட்டுக்குப் போவது? அதனால் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதனைப் படையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும்போது படையினரை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காக எம்மை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.  அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதுடன் ஒழுக்கம், பண்பாடு, தொழில்வாய்ப்புகள் நிறைந்த நாடாகவும் இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவப் பதவி நிலை உயரதிகாரி மேஜர் ஜெனரல் என். விஜேசிங்க உட்பட உயரதிகாரிகள் பலரும், ஹொரணை இங்கிரிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர். காயப்படுத்துகின்றனர்.’ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு : த ஜெயபாலன்

Frances HarrisonCharu Lata Hogg‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka – a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பிபிசி சிங்கள சேவைப் பணிப்பாளர் பிரியத் லியனகே இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவ்வுரையாடலில் இலங்கையில் பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய பிரான்ஸஸ் ஹரிசன், தமிழ் ஊடகவியலாளர் பேர்ள் தேவநாயகம், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடம்கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது உரையில் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை விளக்கியதுடன் இலங்கை அரசு மனித உரிமைகளையும் ஊடகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதைச் சுட்டிக்காட்டினர்.

ரிச்சட்டி சொய்சாவின் படுகொலை முதல் இதுவரை 37 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பேர்ள் தேவநாயகம், அண்மைய காலங்களில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரளவு பயமற்ற சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். இன்றைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடைப் பிடிக்கும் போக்கு இலங்கையர்கள் மனிதர்களுக்கு குறைவானவர்கள் என்ற எண்ணத்தில் இயங்குவது போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் தான் கலந்துகொண்டதன் ஊடகப்பின்னணியைக் கூறி ஆர் ஜெயதேவன் தன்னுரையை ஆரம்பித்தார். எல்ரிரியும் இலங்கை அரசும் மனித உரிமைகளை மீறுகின்றன என்றும் ஆனால் இலங்கை அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயறபடுவது அவசியம் என ஆர் ஜெயதேவன் தெரிவித்தார். இலங்கை அரசு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை வைத்து பொறுப்புடன் செயற்படாத வரை புலிகளும் இருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆர் ஜெயதேவன் இலங்கை விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.

நிர்மலராஜனின் படுகொலையைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸஸ் ஹரிசன் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனது அனுபவத்தினூடாகப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் எண்ணை வளம் இல்லை, அணுகுண்டுகள் இல்லை, இலங்கைக்கு பிராந்திய முக்கியத்துவமும் இல்லாததால் இலங்கைப் பிரச்சினை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் பிரான்ஸஸ் ஹரிசன் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகவியலாளராக ஆசியாவில் கடமையாற்றிய சாரு லட்டா ஹொக் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அரசுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கும் பொறுப்புடையவராக இருந்தவர். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளராக உள்ளார். இவருடைய உரையின் அடிப்படையே கேள்வி நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களை வன்னிக்குள் அனுமதிக்காதது, அங்கு நிலவும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட சாரு ஹொக், அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரச கட்டப்பாட்டுப் பகுதிக்குள் வருவோரைத் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த யுத்தத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 2000 பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பிய அர்சுனன் எதிர்வீரசிங்கம் பொஸ்னியா, சூடான் ஆகியவற்றின் உதாரணங்களைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ‘ஏன்? இனப்படுகொலை என்று குறிப்பிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வு ஏற்பாடானது முதலே புரொன்ட் லைன் கழகம், பிபிசி, மனித உரிமைகள் கண்காணிகப்பு அமைப்பு ஆகியன இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூற மறுப்பதாக எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. அதன் தொடர்ச்சி புரொன்ட்லை ஏற்பாடு செய்த நிகழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

அர்ச்சுனன் எதிர்விரசிங்கத்துக்குப் பதிலளித்த சாரு ஹொக் ”நான் 2000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டது இலங்கை இராணுவத்தினால் மட்டும் ஏற்பட்டது அல்ல. எல்ரிரிஈ யும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். காயப்படுத்தி உள்ளனர். இந்நிலைக்கு இரு தரப்புமே காரணம். ஆகையால் இதனை ஒரு இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது” எனத் தெரிவித்தார். சாரு ஹொக்கின் இந்தப் பதில் அங்கு வந்திருந்த எல்ரிரிஈ ஆதரவு அமைப்பினருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாரு ஹொக், ”100 000 பேர் வந்து சொன்னால் எதுவும் உண்மையாகிவிடாது. அதற்கு ஆதாரங்கள் வேண்டும். சர்வதேச விதிமுறைகள் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பு யுத்தத்தில் காயப்பட்டு வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அந்த அறிக்கையைப் (War on the Displaced – Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni : http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0209web_0.pdf ) படியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ, பிரிஎப், ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட், ரிவைஓ, தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது. அந்நிகழ்வின் ஓரிடத்தில் பிரான்ஸஸ் ஹரிசன் தனக்கு வந்த மிரட்டல்கள் அவமதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். தன்னை றோ ஏஜென்ட் என்றவர்கள் பலதையும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இடையிடையே இந்நிகழ்வை மீண்டும் பொது விவாதத்திற்கு பிரியத் லியனகே கொண்டு வந்த பொழுது ஏனைய சில கேள்விகளும் எழுப்பப்பட்டது. ‘இந்த யுத்தம் எல்ரிரிஈ இன் முடிவா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸஸ் ஹரிசன், ‘எல்ரிரிஈ நிலங்களை இழந்துள்ளார்கள். மிகக் குறுகிய நிலப்பரப்பிலேயே உள்ளனர். ஆனால் ஒரு உறுதியான இராணுவமாகச் செயற்பட்ட அவர்களுடைய கனரக ஆயுதங்கள் எதனையும் இலங்கை இராணுவம் கைப்பற்றவில்லை. அவர்களிடம் அதி விசேட கடற்படைக் கலங்களும் இருந்தது. அவையும் கைப்பற்றப்படவில்லை. புலிகளை அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது அவர்கள் வேறு வடிவத்தில் வெளிப்படுவார்கள்’ என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்டார்.

இதே கருத்தை வெளியிட்ட பிரியத் லியனகே அரசாங்கம் ஓடு பாதைகளைக் கைப்பற்றியதாகக் கூறிய பின்னரும் வான் புலிகள் கொழும்பிற்கு வந்துள்ளனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனுடன் பேசிய போது அவர்கள் வழமைபோல் முழுமையான மறுப்பையே வழங்குவதாகக் கூறி உண்மை நிலையைக் கணிப்பது கடினமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவற்றைவிடவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இரு மணி நேரம்வரை நிகழ்வு நீடித்தது.

ஆசிய-பசுபிக் உயர் கல்வி மாநாடு இன்று இந்தியாவில் ஆரம்பம்!

vishva-warnapala.jpgஉயர் கல்வி தொடர்பான ஆசிய-பசுபிக் உப பிராந்திய மாநாடு இன்று இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய அரசாங்கமும் யுனெஸ்கோவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு புதுடில்லி விக்யான் பவானில் நடைபெறவிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளின் உயர் கல்வி அமைச்சர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.

இதேவேளை, இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையிலான குழு பங்குபற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள்

karunanithy.jpgமுதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தாங்க முடியாத முதுகு வலியுடன் உள்நோயாளியாக சேர்ந்த முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகளை நடத்திப் பார்த்து, அவரது முதுகுத் தண்டில் எல்.2 – எல்.3 இவற்றுக்கிடையே தசைப் பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் சரியான வழி என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் அவர்களையும் வரவழைத்து கலைஞரைப் பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களை தலைமையில் 14 மருத்துவர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அனைவரும் இணைந்து எடுத்த முடிவின்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தபோது, முதல்வர் கருணாநிதி அவர்களின் இந்த வயதில் இவ்வளவு அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது பற்றி அய்யப்பாடுகள் தோன்றிய போதிலும், வேறு வழியில்லாத நிலையில் அறுவை சிகிச்சையை கடந்த 11ஆம் தேதி மேற்கொண்டோம்.

சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று அனைவரும் மகிழத் தக்க வண்ணம் முதல்வர் கலைஞரின் முதுகு வலி நீங்கியது. இதுபற்றி அன்றையதினமே செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம்.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட ஐந்து தையல்களில் (23.02.09) இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும். (25.02.09) டெல்லியில் இருந்து டாக்டர் ஜெயஸ்வால் அவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.

அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதல்வர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வர் கருணாநிதியை, மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சினைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப்பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும, திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.

எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உடல்நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால், இதில் அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும். எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு கண்டுபிடிப்பு

ltte-ship.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப்பெரிய படகு மற்றும் சித்திரவதை முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  ராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே உள்ள தேவபுரம் பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப் பெரியபடகையும், புதுக்குடியிருப்புக்கு மேற்கு பகுதியிலிருந்து சித்திரவதை முகாமையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரால் இதுவரை கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகளில் இதுவே மிகப்பெரியதாகும். இந்தப் படகின் இயந்திரமும், ஏனைய உபகரணங்களும் அகற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 60 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த படகை புலிகள் இழுத்துச் செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளிக்காத நிலையில் படையினரின் பிரவேசத்தை அடுத்து கைவிட்ட நிலையில் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்புக்கு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சித்திரவதை முகாம் ஒன்றையும் இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பல சித்திரவதை கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தலைமையிலான படையினர் இந்த முகாமைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒஸ்கார் விருதுகள் ஒரே பார்வையில்…சிறந்த திரைப்படம்:ஸ்லம்டொக் மில்லியனர்

ar-ragman.jpgசிறந்த நடிகர்: சீன் பென் (மில்க்)
சிறந்த நடிகை: கேத் வின்ஸ்லெட் (தி ரீடர்)

சிறந்த இயக்குநர்: டோனி போயல் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த பிறமொழிப்படம்: டிபார்ச்சர்ஸ் (இயக்கியவர் யோகிரோ டகிடா ஜப்பான்)
சிறந்த பாடல்: ஜெய் ஹோ ஸ்லம்டொக் மில்லியனர்( இசை:ஏ.ஆர். ரஹ்மான்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்( ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த படத்தொகுப்பு: க்ரிஸ் டிக்கென்ஸ் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒலிக்கலவை: (ரெசுல் பூக்குட்டி, இயான் தாப், ரிச்சர்ட் ரைகி (ஸ்லம்டொக் மில்லியனர்)

சிறந்த ஒலித்தொகுப்பு: ரிச்சர்ட் கிங் (தி டார்க் நைட்)

சிறந்த காட்சித்தொகுப்பு: எரிக் பார்பா, ஸ்டீவ் ப்ரீக்ல் பர்ட் டால்டன், க்ரெய்க் பார்ரன்(தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த ஆவணப்படம்: மேகன் மைலன் (ஸ்மைல் பின்கி)
சிறந்த ஆவணப்படம்:ஜேம்ஸ் மார்ஷ் சைமன் சின் (மென்ஒன்வயர்)
சிறந்த துணைநடிகர்: ஹீத் லெட்ஜர் (தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பெனால்ஃப் க்ரூஸ் (விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா)
சிறந்த குறும்படம்: ஜோசென் அலெக்சாண்டர் (டாய்லேண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: அன்ரனி மென்டில் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒப்பனை: கிரெக் கேன்னடம்( தி க்யூரியஸ்கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு: மைக்கேல் ஓக்கானர் (தி டச்சஸ்)
சிறந்த கலை வடிவமைப்பு: டொனால்ட் க்ரஹாம் விக்டோர் ஜே. சோல்ஃபோ (தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த அனிமேட்டட் குறும்படம்: குனியோ கடோ(லா மேய்ஸன் என் பெடிட்ஸ் க்யூப்ஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஆண்ட்ரூ ஸ்டான்டன் (வால் ஈ)
சிறந்த உண்மை திரைக்கதை: டஸ்டின் லான்ஸ் ப்ளாக்(மில்க்)
சிறந்த திரைக்கதை (தழுவல்): சைமன் பஃபாய் (ஸ்லம்டொக் மில்லியனர்)

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமெரிக்கா 50 மில்லியன் டொலர் உதவி

medicine.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களின் வைத்திய சேவைகளை முன்னெடுக்கவென, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இந்த மருந்துகள் ஏற்கனவே, முல்லைத்தீவில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் உட்பட வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார், 10 ஆயிரம் மக்களுக்கு 3 மாதகாலத்துக்குத் தேவையான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வவுனியா மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென 12 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தேவையான வைத்தியர்கள், தாதியர், மருத்துவ ஊழியர்கள், தொழில்நுட்பவியலாளர்களை ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள இந்திய வம்சாவளி மக்களை மலையகத்தில் மீண்டும் குடியேற்ற வேண்டும்

up-cun.jpgவன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் அதிகளவான இந்திய வம்சாவளி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியேற்ற அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி.சென்னன் இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலையமொன்றை அமைக்குமாறு கோரியுள்ளார். பதுளையிலுள்ள கட்சி பணிமனையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பிரித்தானிய விசேட தூதுவரை இலங்கை அரசு நிராகரித்திருப்பது முறையற்ற செயலாகும். இந் நாட்டில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கை நாட்டில் குடியேற்றியது பிரித்தானிய அரசுதான். அந்நிலையில், இலங்கையின் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கவே செய்கின்றது. ஆகையினால், தமிழ் மக்களின் துயரினைப் போக்கும் வகையில் பிரித்தானிய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பின்னிற்கக் கூடாது. பிரித்தானிய விசேட தூதுவரை இந்நாட்டிற்குள் பிரவேசிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும்.

நாட்டின் வட பகுதியில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அம்மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். நடைபெற்று வரும் யுத்தத்தினால் இம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் விடயத்தில் அரசுகருணை காட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இனம் கண்டு, அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலைய மொன்றினை அமைத்து வடபகுதி இந்திய வம்சாவளி தமிழ் மக்களை அந்நிலையத்தில் குடியமர்த்த வேண்டும். அதனையடுத்து அம்மக்களின் ஜீவனோபாயத்திற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.

நாட்டின் தென்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களையடுத்தே, தென்பகுதி தமிழ் மக்கள் வட, கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். அங்கும் யுத்த சூழலினால் வாழ முடியாத அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், அம்மக்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசு இம்மக்கள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி செயல்படவேண்டும். அத்துடன் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசும் புலிகளும் கைவிடவும் வேண்டும்’ என்று கூறினார்.

குடாநாட்டில் இடம்பெயர்ந்தோரின் விபரங்கள் பிரதேச செயலக ரீதியாக மீண்டும் திரட்டப்படுகிறது

united-people.jpgஅகதிக ளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயமும் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இதனை மேற்கொள்கின்றன. பிரதேச செயலகங்களின் வழிகாட்டல்களின் கீழ் கிராம சேவையாளர்கள் இவ் விபரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக வினாக்கொத்து வழங்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வினாக் கொத்தில் குடும்பத்தினர் தொடர்பான வழமையான விபரங்களுடன் இடம்பெயர்ந்து வாழுமிடம் தொடர்பான தகவல்கள், சொந்த இடம் தொடர்பான தகவல்கள், நீடித்த தீர்வுக்கான விருப்பங்கள், நீடித்த தீர்வுக்குத் தேவைப்படும் உதவிகள், விரும்பிய நீடித்த தீர்வுக்கான முக்கிய தடைகள், நீடித்த மாற்றுத் தீர்வு,மாற்றுத் தீர்வுக்குத் தேவைப்படும் உதவிகள், மாற்றுத் தீர்வுக்கான முக்கிய தடைகள் போன்றன உட்பட பல கேள்விகளுக்கும் விடையளிக்குமாறு குடும்பத்தினர் கேட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவல்களை உள்ளடக்கிய கேள்விக் கொத்தில் பல உப வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பூரணப்படுத்திய பின்னர் “இவ் விபரங்களை அரசாங்கமும் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயமும் ஏனைய நிறுவனங்களும் நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக உபயோகிப்பதற்கு இணங்குகிறேன்’ என்ற வாசகத்தின் கீழ் குடும்பப் பிரதிநிதியின் ஒப்பமும் பெறப்படுகின்றது. இதேவேளை, தமது சொந்த இடங்களில் தங்களை மீளக் குடியமர அனுமதி வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட மக்கள் சார்பாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும் நீதிமன்றம் அதற்குச் சாதகமான முறையில் தீர்ப்பு வழங்கியதோடு பகுதி பகுதியாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி வினாக்கொத்து வழங்கப்பட்ட விபரங்கள் சேகரிக்கின்ற செயற்பாடானது மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் விடயத்தில் அரசியல்வாதிகள் உட்பட எவருமே அக்கறை காட்டாதது குறித்து விசனமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள், அடிக்கடி இவ்வாறான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றதேயன்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமையால் தாங்கள் நம்பிக்கை இழந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர