23

23

கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில் வடக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களுக்கென ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்.

மனிதாபிமான அடிப்படையில் எமது கட்சி பல்வேறு சமூக உதவிகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உறவுகள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவையாக உள்ள உதவிகளை நாம் வழங்குவதற்கு எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர் வாரியம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் கிழக்கில் இருக்கின்ற யாராக இருந்தாலும் தங்களது உதவிகளை வடபகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேசசபை செயலாளர்களிடம் ஒப்படைத்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந் நிகழ்வில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் (ஜெயம்) மற்றும் பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படாமைக்கு ஜனாதிபதி காரணமல்ல – அமைச்சர் டியூ குணசேகர

dew.jpgஅரசிய லமைப்புச் சபை ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை ஜனாதிபதியின் தவறு அல்ல. இது பாராளுமன்றத்தின் இயலாமையே என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் குணசேகர இதனைத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின்படி முதலில் 2002 மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாவது சபை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 2005 மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய சபை நியமிக்கப்பட வேண்டியிருந்தும், அது நடைபெறவில்லை. இது ஜனாதிபதியின் தவறு அல்ல. பாராளுமன்றத்தின் பலவீனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பர் 19 ஆம் திகதிதான் பதவியேற்றார். அரசியலமைப்புச் சபை நெருக்கடி அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது.

அப்போது சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய 10 வது உறுப்பினரைத் தெரிவு செய்வதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளால் முடியவில்லை. இரண்டு வருடம் இழுபறிபட்டார்கள். இதற்கிடையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் காலம் நிறைவடைந்து பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றுக்குத் தலைவர்களை ஜனாதிபதி நியமித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? என்ற அமைச்சர் குணசேகர, “அரசியலமைப்புக்கு முரணான ஆணைக் குழுக்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.

இப்போதும் இந்தச் சபையின் அங்கீகாரத்தின்படி ஆணைக்குக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது!” என்று மேலும் தெரிவித்தார்.

திருமலை மட்டக்களப்புக்கு இடையே “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் ஆரம்பம்

lanka-map-02.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளையடுத்து இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14 பஸ்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றை ரயில் தண்டவாளப் பாதை மீது ஓடக் கூடியதாக அவற்றின் ரயர்களை மாற்றி இரும்புச் சக்கரங்களையும் மற்றும் ரயில் பெட்டிகளுக்குரிய உபகரணங்களையும் பொருத்தும் வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பஸ்களை ரயில் பெட்டிகளாக மாற்றியமைக்கும் செலவு அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. 14 பஸ்களும் ஏழு ரயில் பஸ் யூனிட்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டும் இரண்டு பஸ்கள், என்ஜின்கள் முன்,பின்புறம் வரக்கூடியதாக அமைக்கப்படுகின்றன. ஒரு யூனிட்டும்80 பயணிகள் இருந்தும் 100 பயணிகள் நின்றும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணிக்கென்று மூன்று சேவைகளில் மூன்று ரயில் பஸ் யூனிட்கள் ஈடுபடும். இவை நண்பகலுக்குப் பின்னர் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும். இதேபோன்று மூன்று “ரயில் பஸ்’ யூனிட்கள் திருகோணமலையிலிருந்து காலை 6, காலை 8, காலை 10 மணி ஆகிய நேரங்களில் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும். பிற்பகலில் இவை மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வெவ்வேறு நேரங்களில் திரும்பும். மூன்று யூனிட் ‘ரயில் பஸ்கள்’ மட்டக்களப்பில் தரித்து நிற்கும். இதேபோன்று மூன்று ரயில் பஸ் யூனிட்கள் திருமலையில் தரித்து நிற்கும் ஒரு “ரயில் பஸ்’ யூனிட் ரிசர்வாக இருக்கும். மட்டக்களப்பு திருகோணமலைக்கு இடையேயான 200 கிலோ மீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக ரயில் பஸ் சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பஸ்களை ரயில் பஸ்களாக மாற்ற 75 மில்லியன் ரூபா செலவாகும். இந்த பஸ்களுக்கு இறக்குமதித் தீர்வை அறவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.