2009

2009

யசூசி அகாசி திருகோணமலைக்கு விஜயம்

yasusi.jpgஇலங் கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பிலிருந்து விசேட விமானமொன்றில் திருகோணமலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கும் யசூசி அகாசி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பைபாஸ் ஆபரேஷன் வெற்றி – நலமாக இருக்கிறார் இந்திய பிரதமர்

pm-india.jpgஇதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.

உலகில் எங்குமில்லாத சர்வாதிகார ஆட்சி இலங்கையில் – பாராளுமன்றத்தில் என் ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஉலக நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சியை விடவும் பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி தற்போது இலங்கையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகவும் விசனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகாரசபை தொடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறியதாவது;

வன்னியில் மிகப் பாரியளவில் இடம்பெற்று வரும் விமானக்குண்டுவீச்சு , ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. வன்னியில் பொதுமக்களுக்கு அரச படைகளால் ஏற்படுத்தப்படும் உயிரழிவுகள் தொடர்பில் எம்மிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 3 தினங்களில் மட்டும் வன்னியில் இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் 55 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 230 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 மாதக் குழந்தையும் சிறுவர்களும் கூட இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதுவொரு பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினை. போரில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படுவது இலங்கை அரசைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணதொரு நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலைகள், மக்களின் அவலங்கள் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஊடக சுதந்திரம் பற்றிப் பெரிதாக பேசிக்கொள்ளும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வன்னி மக்களின் உயிரழிவுகளை, அவர்களின் அவலங்களைத் திட்டமிட்டு இருட்டடிப்பிச் செய்கின்றன. தம்மைப் பெரிய ஊடகவியலாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட இந்த அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமான அவலங்களை வெளிக்கொண்டுவர விருப்பமின்றியுள்ளனர். இதுதான் தென்னிலங்கை ஆங்கில,சிங்கள ஊடகங்களின் நிலை.

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல்களை இந்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்னியில் அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டு கொன்றொழிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை 115 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 410 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.தமிழின அழிப்பை இந்த அரசு பகிரங்கமாகச் செய்து வருகின்றது.

இலங்கையில் இடம்பெறும் தமிழினப் படுகொலை தொடர்பாக தமிழகத்திலுள்ள 7 கோடித் தமிழ் மக்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். அங்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் போராட்டங்கள் உத்வேகம் பெற்று வருகின்றன. வன்னியில் மக்கள் வேட்டையாடப்படுவதை இனியும் தமிழினம் சலித்துக் கொள்ளாது. இலங்கைத் தமிழர் தொடர்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதில் அது ஆர்வம் காட்டவில்லை. தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.

இந்திய மத்திய அரசின் இந்த இரட்டைவேடப் போக்கை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழின விரோதப் போக்கு குறித்து விசனமடைகின்றோம். தமிழினப் படுகொலையை வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விரக்தியும் விசனமும் அடைந்துள்ளனர். இப்போது கூட போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இந்திய மத்திய அரசுக்கு உள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாகவும் ஜெனீவா உடன்படிக்கைக்கு விரோதமாகவும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு இலங்கை அரசு படைகள் வேட்டு வைப்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது சர்வதேச நாடுகள் தமது கண்களைத் திறந்து பார்த்து அழிவடைந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக் கோருகின்றோம். இலங்கை அரசிடமும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கேட்கின்றோம். போரில் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இலங்கையை தற்போது மனித உரிமைகள் தொடர்பாக கிஞ்சித்தும் கவலைப்படாத கொலை வெறிபிடித்த அரசாங்கமே ஆட்சிபுரிகின்றது. இதுவொரு கொலைகார அரசாங்கம். உலகில் நாம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கின்றோம். ஹிட்லர், பொக்காசோ போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை விடவும் மிகவும் மோசமான கொடுங்கோல் ஆட்சியே தற்போது இலங்கையில் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அநியாயங்கள் , அட்டூழியங்கள் , இனப்படுகொலையைப் போல் நாம் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் இந்த அரசின் முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள்.

அரசியல் தீர்வு என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. பேச்சுக்குமுன் யுத்த நிறுத்தம் அவசியம். அதன் பின் நிபந்தனையற்ற பேச்சு என்பதிலும் நாங்கள் உறுதியான நிலையில் உள்ளோம். இதனை பல தடவைகள் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. இலங்கை அரசுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், எமக்குள்ள ஒரே நிகழ்ச்சி நிரல் போர் நிறுத்தம் ஒன்று மட்டுமே.

விடுதலைப் புலிகளிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்று அரசு கூறி வருகின்றது. இது வெறும் பகல் கனவு. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டதாக கூறிய அரசுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியும். கிளிநொச்சியை பிடித்து விட்டோம். புலிகளை காட்டுக்குள் விரட்டி விட்டோம். விரைவில் அவர்களை கடலுக்குள் தள்ளி விடுவோம் என அரசு கூறி வருகின்றது. இப்படிக் கூறுபவர்கள் அறிவிலிகளாகவே இருப்பார்கள். விடுதலைப் புலிகளை எந்த சக்தியாலும் தோற்கடித்து விட முடியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக 25 வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் அமைப்பொன்றை அவ்வளவு எளிதில் எவராலும் அழிக்கவோ வெற்றி பெறவோ முடியாது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கின்ற அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்திய அரசால் ஏமாற்ற முடியாது. இவர்கள் மட்டுமென்ன வேறு எந்த அரசினால் கூட ஏமாற்ற முடியாது. இதனை இந்திய அரசு புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் 75 வீதமானோர் இந்துக்கள். நாம் மதத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பிரசாரத்தில் இறங்கினோம் என்றால் அங்கு நிலைமை எவ்வாறு மாற்றமடையும் என்பதை இந்திய அரசு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தமிழினப் படுகொலை இடம்பெற்று வருகையில் வன்னியில் தினமும் மக்கள் செத்து மடிகையில் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அக்கறைப்படாத இடமாகக் காணப்படும் இந்த சபையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா?. நாம் இச் சபையில் தொடர்ந்தும் இருப்பது நியாயமாவென எம்மை எமது மனச்சாட்சி கேட்கத் தொடங்கி விட்டது. எனவே, நாம் மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் தமிழினப் படுகொலைகளை நிறுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி பேச்சு மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என கேட்கின்றோம்.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

flag_uk.jpg
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் மாவட்ட மறைமாவட்ட ஆயர், மாவட்ட அரச அதிபர் உட்பட உயரதிகாரிகளையும் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் 4ஆம் மாடியில் நேற்று தீவிர விசாரணை

லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முறைப்பாடொன்றையடுத்தே இவர் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலுள்ள சி.ஐ.டி.யினரின் தலைமையகமான நான்காவது மாடிக்கு வரவழைக்கப்பட்டே ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நேற்று தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே இவரிடம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துக்கு வந்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரிய முகாம்கள் கண்டுபிடிப்பு

_army.jpgமுல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.

அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றம்

saudi-0301.jpg
கொழும்பிலுள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் 43 ஹோட்டன் பிளேஸ் கொழும்பு – 07 எனும் முகவரியில் செயற்படும் என்று தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ. எல். எம். மாஹிர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் கொழும்பு தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், தூதரகத்தின் அனைத்து அலுவல்களும் வழமைபோல் இடம்பெறுவதுடன் பழைய தொலைபேசி இலக்கங்கள் தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள புலிகளின் 3 இலக்குகள் மீது தாக்குதல்

jet-1301.jpgமுல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

BTF Banner._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய வெளிவிககார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையையும் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் அறிக்கையையும் கீழே காணலாம்.
._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை :
._._._._._.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதனைக் குறிப்பிட்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் ஜனவரி 21 எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவ்வறிக்கையின் தொகுப்பு இங்கு தமிழில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பு: நேரடி மொழிபெயர்ப்பல்ல.

Sri Lanka Written Ministerial Statement (21/01/2009) Written Ministerial Statement by the Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.
http://www.fco.gov.uk/en/newsroom/latest-news/?view=PressS&id=12533815

._._._._._.

கடந்த 26 ஆண்டுகளில் 70,000 உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம் சமாதானத்தை முன்னெடுப்பதில் கரிசனையாக இருந்து வருகிறது. நாங்கள் தற்போது ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனவரி 2008ல் முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசு எல்ரிரிஈ யை இராணுவ ரீதியில் வெற்றிகொள்வதை கொள்கையாகக் கொண்டு உள்ளது. அண்மைக் காலத்தில் எல்ரிரிஈ யின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சியைக் கைப்பற்றியது மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எல்ரிரிஈயின் சில பகுதிகளைக் கைப்பற்றியது உட்பட இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்று உள்ளது. இந்த வெற்றிகள் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எல்ரிரிஈ ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. அதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயகப் பொறுப்பு இல்லை. கடந்த மூன்று சகாப்தங்களாக அனைத்து சமூகங்களைச் சார்ந்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை மேற்கொண்டதற்கு எல்ரிரிஈயே பொறுப்பு.

2006ல் மீண்டும் யுத்த முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்கிறோம். அதேசமயம் தனது மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் அவர்களுடைய அரசியல் நியாயங்களை சரியான வகையில் வெளிப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. நிரந்தரமான சமாதானம், இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினதும் – சிங்களம் தமிழ் முஸ்லீம் என அனைவரையும் உள்ளகப்படுத்தும் அரசியல் செயற்பாடு அவசியம். அதுவே எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. நாங்கள் இந்த மோதல் முற்றுப் பெறுவதைப் பார்க்க வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாங்கள் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சகல சமூகங்களுடனும் தொடர்புகளை வைத்திருப்போம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலச் சூழல் – அதிகரித்துவரும் உள் இடப்பெயர்கள் பற்றி நாங்கள் மிகவும் கரிசனையாக உள்ளோம். இதுபற்றி கடந்த செப்ரம்பரில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திருந்த போது என்னுடைய நண்பர் மதிப்பிற்குரிய பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் பேசியிருந்தார். உள்ளக இடப்பெயர்வு தொடர்பாக உயர்மட்டத்தில் எங்கள் கரிசனையை வெளிப்படுத்தி இருக்கிறோம். மோதல் இடம்பெறுகின்ற பகுதிகளில் 200 000 – 300 000 வரையான உள்ளிடம் பெயர்ந்தவர்கள் சிக்குண்டு உள்ளதாக ஐநா மதிப்பிட்டு உள்ளது. மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்ட போதும் அவை போதக் கூடியவை அல்ல என நம்பகரமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் உள்ளிடம் பெயர்ந்தவர்களை மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்திற்கள் தள்ளுகின்றது. இந்த நிலை இன்னும் மோசமானால் மனித வலமும் மோசமடையும்.

கடந்த செப்ரம்பரில் Department for International Development (DFID)  எடுத்த தீர்மானங்களின் தொடர்ச்சியாக DFID மனிதாபிமான பணி நிபுணர்கள் குழு இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பிட உள்ளது. மேலும் அவர்கள் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் பவுண்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரமான நடமாட்டம், மனிதாபிமான உதவிகளைப் பெறுவது விடயங்களில் களத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டு அங்குள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான விதிகைளக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் இடம்பெறும் இடங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பான வழியை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான மனிதாபிமான வலயம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களுடைய மனிதாபிமான தேவைகள் பற்றிய சுயாதீன மதிப்பீடு ஒன்று அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான ஒரு மதிப்பீடு தான் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு செய்யக் கூடிய அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது என்பதனை வெளிப்படுத்தும். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுப்போம்.

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் மீது அதன் உயர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் இடம்பெற்று உள்ளதைக் காண்கிறோம். நாங்கள் இவ்வாறான தாக்குதல்களை கண்டிக்கிறோம். குறிப்பாக ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக முழுமையான சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உண்டு. அதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படுவதில் ஏற்படும் அசிரத்தை உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

ஆட்கடத்தல், காணாமல் போதல், வன்முறை, அவமதித்தல் என்பன இலங்கையில் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுயாதீன மனித உரிமைகள் அறிக்கைகளுக்கான உறுதியான பொறிமுறையின்றி இப்பிரச்சினையை மதிப்பிடுவது கடினமானது. மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட மனித உரிமை மீறல்களை கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்தும் கோருகிறோம். இந்த முரண்பாட்டை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கையில் உள்ள சமூகங்கள் அனைத்தும் அச்சம் இல்லாமல் வாழ்வதற்கான சூழல் ஏற்டுத்தப்பட வேண்டும். எங்களுடைய அழுத்தங்களைத் தொடர்ந்து அயுதக் குழுக்களால் சிறுவர் படையணயில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இவை இன்னும் தொடர வேண்டும்.

என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பிரதமர் கோர்டன் பிரவுண் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை எழுதி உள்ளார்.

(The Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.)

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை :

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான வெளிவிவகார அலுவலகத்தின் நிலைப்பாடு:

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009 ஆம் திகதியிட்டு வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. வெளிவிகார அலுவலகத்தின் இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாக உள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோசியுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்” எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது. வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “ அவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்…. பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘ஸ்ரீலங்காவில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்’ என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடி மறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்க இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் பதவியேற்ற சிலநாட்களில் வெளியாகியிருப்பது தவறான வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட ஒன்றென கருத தோன்றுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் உள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைஅமைப்பு என்ற வகையில் வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை தொடர்பாக எமது அமைப்பு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. வெளிவிவகார அமைச்சின் இந்த நடவடிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. 2004ஆம் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரு வெற்றியீடடியிருந்ததை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு பிரித்தானிய தமிழர்கள் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். அத்துடன் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தை (தமிழீம) மீள உருவாக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அடக்குமுறை அரசுகளுக்கு உதவும் வகையிலான அணுகுமுறையை தவிர்ததுக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர்களான நாம் இந்த அரசிடம் வேண்டிக் கொள்கின்றோம். ஸ்ரீலங்கா அரச படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய இடங்களில் 66 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்று பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 5 அப்பாவிப் பொது நோயாளர்களைக் கொன்றிருப்பதோடு 15 நோயாளர்களை காயப்படுத்தியுமுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மிக முக்கியமான உயிர்காப்புச் சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவையானது கோருகின்றது. அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தவறான ஆலோசனைகளின் அடிப்படையில் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

யூலை முற்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் :

”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

rathika-kumarasamy.jpgவன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.