2009

2009

வன்னி மக்களின் துயர்துடைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பெரும் அவலத்திற்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களின் துயர்துடைக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னி நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கெதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தம் காரணமாக பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதம் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும்.

இதேவேளை, பயங்கரவாத அழிப்பு என்னும் பெயரில் கொழும்பில் ஊடகத்துறை திட்டமிட்டு அளிக்கப்படுவதும், மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்படுவதும், குண்டுவைத்து அப்பாவி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்னி நிலப்பரப்பில் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் இடம்பெயர்வு, தங்குமிடமின்றிப் பரிதவித்தல் , பட்டினிச்சாவு, குழந்தை தொடக்கம் முதியோர் வரை ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணிப்பதும் அங்கவீனமாக்கப்படுவதும் , கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருளாதாரம் அளிக்கப்படுவதும் , கல்வி முற்றாகப்பாதிப்படைந்து மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதும், ஒட்டுமொத்தமாக தமிழின அழிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் , பயங்கரவாதச் செயலெனக் கூறுவார்கள். இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் எமது அரசும் பயங்கரவாதச் செயலில் இறங்கியுள்ளதா? தமிழினச் சுத்திகரிப்பில் இறங்கியுள்ளதா? எனும் சந்தேகம் சகல சக்திகளுக்கும் தோன்றி உள்ளது.

வன்னியில் உலருணவு கொண்டு சென்ற ஐ.நா.வின் பிரதிநிதிகளையும் வாகனங்களையும் புலிகள் தடுத்தி நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இத்தோடு இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.

புலிகள் தங்களது பயங்கரவாதச் செயலைக் கைவிட்டு ஜனநாயக சூழலுக்கு வருவதற்கு இன்னும் காலம் போகவில்லை. உயிரழிவுகளைத் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசினூடாகவோ அல்லது ஏனைய சக்திகளினூடாகவோ, ஜனநாயக வழிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை இறைமை உள்ள அரசு என்ற அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு அவசியமாகும்.இத் தீர்வை முன்வைப்பது அரசின் தலையாய கடமையாகும். இது சர்வதேச அவதானிப்புடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.

வன்னியிலுள்ள மக்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். வேலியே பயிரை மேயக் கூடாது. இல்லாத பட்சத்தில் சர்வதேசம் தலையிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பயங்கரவாதத்தை அழிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் சக சக்திகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.

மாலைதீவுக்கு ரணில் விஜயம்

images-01.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை அதிகாலை மாலைதீவுக்குப் பயணமானார்.

இது அவரது தனிப்பட்ட விஜயமென்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அவர் நாளை திங்கட்கிழமை இரவு நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
 

முல்லைத்தீவின் கிழக்கு பகுதியையும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டும் -அரச அதிபர் ஐ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை

mulli-ga.gifமுல் லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் 50 வீதமான இடம்பெயர்ந்தவர்கள் உள்ளதனால் அப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் அங்குள்ளவர்களை பாதுகாக்க முடியுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் உப தலைவியான வலேரியா பெட்டியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு அரச அதிபர் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா செஞ்சிலுவைச் சங்கப் பிராந்திய அலுவலகத்தில் வைத்து அவரை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான அம்பவன்பொக்கன், முள்ளிவாய்க்கால், மாத்தளன் மற்றும் வளையார்மடம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதமானவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் இங்கு இடம்பெயர்ந்து தங்கியிருப்போரை பாதுகாக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நெருக்கமாகவுள்ளதாலும் வெள்ளப்பாதிப்பு காரணமாகவும் முக்கியமாக குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததுடன் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் புதுக்குடியிருப்பு உணவு களஞ்சியசாலையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இதனை பாதுகாப்பு வலயப்பகுதியில் நிறுவுதல் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும் உணவுத் தொடரணி செல்லும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் இருசாராரும் மோதலில் ஈடுபடுவதால் இருதரப்பின் உத்தரவாதத்துடன் உணவு தொடரணி எடுத்துச் செல்வது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்
 

ஜப்பானின் விஷேட தூதுவர் அகாசியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

yasusi.jpgஇலங் கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ரி.கனகசபை, எஸ். பத்மநாதன், ரி.பத்மினி, எஸ். அரியநேத்திரன் ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வன்னியில் அரச படைகளால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அவல நிலைமைகள் தொடர்பாகவும் அங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனை விட அரசியல் தீர்வொன்றின் மூலம் உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் பொஸ்பரஸ் குண்டு பற்றி விசாரணைக்கு உத்தரவு

gaa-sa.jpgயுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து  தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.  நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.

பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது.  சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

சரியானதை பகிரங்கமாக கூறும் வல்லமை ரஞ்சன் விஜேரட்ணவுக்குப் பின் கோதாபயவுக்கே -பாராட்டுகிறார் ஊடக அமைச்சர்

laksman-yaappa.jpgதனக்குச் சரியெனப்பட்டதை எந்தவித தயக்கமுமின்றி பகிரங்கமாகக் கூறும் வல்லமை முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அடுத்தபடியாக இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு மட்டுமே உண்டு எனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன படையினர் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைக்கு மாசுகற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தனது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் அரசியல்வாதியல்ல. ஒரு அதிகாரியாவார். அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் அவரது கருத்துகளில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர  அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில ஊடகங்கள் உள்ளூரிலும், சர்வதேசத்திலும் தவறான தகவல்களை தெரிவித்துவருகின்றன. அதனைக் கண்டிப்பது தவறாக முடியுமா? எனக் கேட்கவிரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுபவராவார். அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் ஜே.வி.பி.யை சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ரஞ்சன் விஜேரட்ணவிடம் ஜே.வி.பி. இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுதானே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அதற்கு சட்டெனப்பதிலளித்த ரஞ்சன் விஜேரட்ண ஆமாம் அரசுதான் பொறுப்பேற்கின்றது.அதிலென்ன தவறு. வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தாலாட்டவா சொல்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோன்றுதான் இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் செயற்படுகிறார். யுத்தத்தை விமர்சித்து அதற்கு மாசு கற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறார். இதில் எந்தத் தவறுமில்லையே. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கே யுத்தம் நடத்தப்படுகிறது. எந்தவொரு இனத்துக்கும் எதிராக நாம் போர் தொடுக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார

வடக்கு மக்களின் பாதுகாப்புக் குறித்து பிரிட்டிஷ் தூதுவர் ஹய்ஸ் கவலை

போர் நடைபெறும் வட பகுதில் உள்ள மக்களின் பாதுகாப்புக் குறித்து இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் பீட்டர் ஹெய்ஸ் கவலை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அரசியல்வாதிகள், சமய, சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

யுத்த நிலைமை விலகிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டால், அனைத்து விடயமும் பலனற்றதாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடல் எல்லை தொடர்பாக சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை – பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ்

denees.jpgஇந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சார்க் மாநாட்டில் வடக்கு கடல் எல்லை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே கடற்றொழில் நீரக வளங்கள் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

இலங்கையின் வடக்கு கடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டிற்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும் திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் தொடர்பிலான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எல்லை தாண்டியதாலேயே இவை கைப்பற்றப்பட்டன.  இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே, இலங்கையின் கடல் எல்லையின் தூரம் நீங்கள் கூறியதை விடவும் அதிகமாக இருந்ததென்பதை ஏற்றுக்கொள்வீர்களா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக கடல் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படும் எனினும்,வடக்கு கடல் எல்லை தொடர்பில் சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார

ஐ.சி.ஆர்.சி.யின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வலயத்திற்கு வன்னி மக்களை அனுப்புவதற்கு நடவடிக்கை

red_cross.jpgவன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களை அரசு புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் அனுப்பி வைப்பதற்குரிய ஒத்துழைப்பை பெற்று கொள்வது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பிரதிநிதியுடன் வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பேச்சுகள் நடத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா அலுவலகத் தலைமையதிகாரி வலரி பெட்டிட்டியருக்கும் வன்னி இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திந்திப்பின்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துவது, விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முல்லைதீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைத் தருமாறு வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வன்னிப் பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து உலக உணவுத்திட்ட அதிகாரியுடனும், வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து வவுனியாவில் உள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியுடன் பேச்சுகள் நடத்தியதுடன் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து வருவது குறித்தும், வன்னிப்பிராந்திய இராணுவத்தளபதி பேச்சுகள் நடத்தியுள்ளார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் ஆதரவா? கஜேந்திரன் எம்.பி. கேள்வி

வன்னியில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்காதிருப்பது, படுகொலைகளுக்கு ஆதரவழிப்பதாகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நடத்திய ஷெல் தாக்குதலில் முல்லைத்தீவு வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் இயங்கிவந்த பொது வைத்தியசாலை இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள மக்கள் செறிந்து வாழும் பகுதியான வள்ளிபுனத்தில் உள்ள பாடசாலையில் இயங்கிவந்தது. வைத்தியசாலை இடம் பெயர்ந்து இயங்கும் இடத்தின் அமைவிடம் பற்றிய விபரம் அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இலங்கை அரசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.20 மணியளவில்  இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலையை இலக்கு வைத்து மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள் காரணமாக அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தினுள்ளும் அதி தீவிரசிகிச்சைக் கூடத்தினுள்ளும் மற்றும் வைத்தியசாலை விடுதி என்பவற்றினுள்ளும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலைவளாகத்தினுள் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் அச்சம் காரணமாக வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் அனைவரும் சிதறி ஓடி பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேட வேண்டிய அவல நிலைக்குள் தள்ளப்பட்டனர். தாக்குதல் காரணமாக வைத்தியசாலை பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி வரதராஜா தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் மட்டும் நூறுவரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். 400 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

தமிழ் மக்களை முற்றாக அழிக்கும் வகையிலேயே வைத்தியசாலையை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவற்றை சர்வதேச சமூகம் கண்டிக்காது மௌனமாக இருப்பது படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமைகின்றது. சில தினங்களுக்கு முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு ஊக்கம் வழங்குவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மேற்படி தாக்குதல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.