2009

2009

புலிகளுக்கு ஆயுதம் கடத்தல்: சிங்கப்பூர்வாசி அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கையில் புலிகளுக்கு ஆயுதங்களை நடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் வர்த்தகரான பால்தேவ் நாயுடு ராகவன் (47) விசாரணைகளுக்காக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கு உதவியது மாத்திரமன்றி கடல் கடந்த பல்வேறு நாடுகளுடன் சட்டவிரோச் செயற்பாடுகளில் பால் தேவ் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிபதி ரோய் நெய்பர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு சிங்கப்பூர்வாசியான ஹனீபா ஓஸ்மான் என்பவருடன் இணைந்தே பால்தேவ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஹனீபா (57)வுக்கு பல்டிமோட் நீதிமன்றத்தினால் 37 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் பால்தேவ் நாயுடு 2006ம் ஆண்டு பெப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் தான் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்குமிடையில் இடைத் தரகராக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு இத்தோனிசியார்கள் சிலர் தனக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் : 17 வயது யுவதி கைது

கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பாதும்பை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

17 வயதான இந்த யுவதி 2 வாரங்களுக்கு முன்பு உடப்புஸ்ஸலாவை பகுதியில் இருந்து பாதும்பை பகுதியிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்டதாகப் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பாதும்பை பொலிஸார், காசல் மகப்பேற்று மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டு, இவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தீராத தலைவலி – நஜிமிலாஹி

221009eastern-provincial.jpgகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச  நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதனால் கிழக்கு மாகாணக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மாகாணசபை கவலையும் ஐயமும் அடைந்துள்ளது.

ஏனெனில்,  கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே கிழக்கில் காணிப்பிரச்சினை சூடாக விவாதிக்கப்பட்டு வந்ததை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்தவகையிலே இன்று வரையும் கிழக்கு மாகாண சபையில் நீட்சி கொண்டு செல்லும் பிரச்சினையாகவே காணிப்பிரச்சினை காணப்படுகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் காணிப்பகிர்வும்  முக்கியமான அதிகாரப் பகிர்வாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு அல்லது செயற்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் மாகாண சபைகளின் உருவாக்கம் பரீட்சிக்கப்பட வேண்டிய இடங்களுக்கு கடந்த காலங்களில் இந்த மாகாண சபை செயற்படுத்தவில்லை.

கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பிற்பாடுதான 13வது திருத்தச் சட்டத்தின் கேள்விகள் எழத் தொடங்கின. ஏனெனில் காயப்பட்ட இடத்துக்கு தற்போதுதான் மருந்துகொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாண சபை காயப்பட்டுள்ளது. அதற்கு மருந்து போடும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினரால் வடக்கு,  கிழக்கு மாகாண நோய்கள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பலமாக தென்படுகிறது. ஏனெனில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் கூடுதலான,  மேலதிகமான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி திடமாக தெரிவித்துள்ளார். எனவேதான் வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

ஆனால் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு இனவாத அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடுகளும் இல்லாமலில்லை. ஏனெனில் இனவாதக் கருத்துக்களை தாராளமாக வெளியிட்டு வருபவர்கள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றார்கள். இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்அரசியல் நகர்வுகளின் மூலம் இவர்களின் செல்வாக்கு பலமானதாக இருக்கமுடியாது என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக பலதுறைகளிலும் சிறந்து விளங்கிய LTTE இயக்கத்தினரின் இருப்பை இல்லாதொழித்தமையானது ஒரு சுலபமான காரியமாக பார்க்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் துறையினருக்கு விற்கப்படுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் சூடாக விவாதிக்கப்பட்டது. இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிப்பதாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கிழக்கு மாகாண சபை எல்லைக்குட்பட்ட மத்திய அரசாங்கத்தின் காணியை மாகாண சபைக்குத் தெரியாமல் பெறமுடியாது என்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டார். அதேபோன்று மத்திய அரசாங்கமானது மத்திய அரசாங்கத்துக்குரிய காணியை பெறுவதாயின் அது எந்த மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் சரி இந்த மாகாண சபையுடன் பேசித்தான் அதில் ஒரு பொதுவான உடன்பாட்டுக்க வரவேண்டும். இதில் குறிப்பாக திருகோணமலையிலும்,  அம்பாறையிலும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், மத்திய அரசாங்கத்துக்கு காணி தேவை எனும்போது DS. மூலமாகவோ,  GA மூலமாகவோ தங்களுடைய அதிகாரத்தைப் பாவித்து காணி சுவீகரிப்புத் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. “தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டம்” என்ற தலையங்கங்களுடன் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று கிழக்கு மாகாண சபையின் எதர்க்கட்சித் தலைவரான பஷீர் சேகுதாவூத் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற மொத்த தரிசு நிலங்கள் எத்தனை ஹெக்ரேயர் என்றும் அதில் இச்சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் எந்தெந்த காணிகள் எந்தெந்த இடத்தில் எக்கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக,  அதே விடயத்திலே இந்த காணி வழங்குவதற்குரிய ஒரு ஆலோசனையாவது காணியை வழங்கியவர்கள் இச்சபையிடம் கேட்டார்களா? அந்த விடயம் கிழக்கு மாகாண சபைக்குத் தெரியுமா?  அல்லது கிழக்கு மாகாண காணியமைச்சுக்கு தெரியுமா? சட்டத்திலே மாகாண காணி சம்பந்தமான விடயங்களை மத்திய அரசும், மாகாண அரசும் கலந்தாலோசித்து  செய்ய வேண்டும் என இருக்கிறது.  ஆனால் அந்தக் காணிக்குரிய தேசிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்றிருந்தும்கூட கடந்த 21 ஆண்டுகளாக “தேசிய ஆணைக்குழு” ஒன்று நியமிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலையிலே எங்களுக்கு இருக்கின்ற பிரதானமான பிரச்சினை காணிப்பிரச்சினை என்ற அடிப்படையிலே பலவிதமான சந்தேகங்கள் எம்மத்தியில் நிலவுகிறது. இச்சூழ்நிலையிலே யாருக்கும் தெரியாமல் கிழக்கு
மாகாணத்திலே இருக்கின்ற காணிகள் களவாடப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் கிழக்கு மாகாண மககளுக்கு ஏற்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டார்.

எனவே,  கிழக்கு மாகாண காணிகள் தனியார் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது சுவீகரிக்கப்பட்டுள்ளதா? போன்ற ஐயபாடுகளுக்கு முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் பதிலளிக்கும்போது கிழக்கு மாகாணத்தில் இருந்த காணிகள் ஒரு தனிநபருக்கு அல்லது கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்படுகின்றபோது அது சம்பந்தமாக அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் அமைச்சரவை மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட பின்னர்தான் அது அனுமதி அளிக்கப்படும். ஆனால் அந்த விடயங்கள் எங்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது  என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

இதேபோன்று சுற்றுலாத்துறையினதும் பிரச்சினை வந்திருக்கிறது. உதாரணமாக பாசிக்குடாவில் இருக்கின்ற 280 ஏக்கர் காணியிலும் அதில் கார் பாக்கிங் தவிர ஏனைய காணிகள் அனைத்துமே தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமாக இருந்த காணிகள் கூட அடையாளம் தெரியாமல் போயிருக்கிறது. இதை நாம் பாரதூரமான பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் என்ற வகையில் காணி சம்பந்தமான அமைச்சர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரும்போது  அந்தப் பதிலை வைத்துக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

அதேபோன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கு 15 000 ஏக்கர் காணியை மாகாண சபைக்கு தெரியாமலே அங்கீகாரம் கொடுக்கின்றவர்கள். இன்று அகதிகளாக மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களுக்கு 20 பேர்ச் காணியைக் கொடுப்பதற்குக் கூட அதிகாரமளிப்பதற்கு மறுக்கின்றார்கள். காலங்காலமாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களது இடங்கள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய காணிகளை 20 பேர்ச்சுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலைமை. கிழக்கு மாகாண சபை ஏன் உருவாக்கப்பட்டது? எந்த மக்களை திருப்திப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கும்போது அதில் பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதேபோன்று ஏனைய மாகாண சபைகளில் இருக்கின்ற உரிமை கூட எங்கள் மாகாணத்தில் இல்லாதது மிகவும் வேதனையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றரை வருடம் தாண்டியும் எங்களது அதிகாரப் பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்புக்களை செய்துகொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேற்படி முதலமைச்சரின் கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைக்கு சுதந்திரமில்லை என்பதையே  காட்டுகிறது. எனவே தமது மாகாணத்திற்குரிய அதிகாரங்களைப் போராடிப் பெறவேண்டிய தேவை இன்று கிழக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி

031109unf.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் ஜனாதிபதியாக மீண்டும் கர்ஸாய் வெற்றி

031109karzai.pngஆப்கானிஸ் தானின் ஜனாதிபதியாக இரண்டாம் முறையாக ஹமீது கர்ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர் திங்கள்கிழமை முறைப்படி அறிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஹமீது கர்ஸாய் பெரும்பான்மை வாக்குகள் பெற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவானதாகவும் தேர்தலில் தில்லு முல்லு செய்தே கர்ஸாய் வெற்றி பெற்றதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் அப்துல்லா அப்துல்லா குற்றஞ்சாட்டினார்;.

இதையடுத்து,  ஐநா தலையிட்டு அந்த தேர்தலை ரத்து செய்து அடுத்த கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. அதில் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவர் மட்டுமே போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் தில்லு முல்லு நடக்கும், வாக்குப்பதிவு நேர்மையாக நடக்காது என்று குற்றம்சாட்டி போட்டியிலிருந்து விலகினார் அப்துல்லா.

கர்ஸாய் மட்டுமே களத்தில் இருந்தார். இதனால், இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ஸாயை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, அதிபர் தேர்தலில் கர்ஸாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்; அஜிஸல்லா லூதின் அறிவிப்பு வெளியிட்டார்

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Oceanic_Viking_Refugeesஅவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 01) இரவு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் உள்ள கோகோஸ் தீவுக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த போது 39 பேர் படகில் இருந்துள்ளனர். அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிக் கொண்டிருக்கையில் திரவ வாயுவை ஏற்றி வந்த ‘எல்என்ஜி பைனியர்’ரும் யப்பானிய மீன்பிடிப் படகில் வந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து 27 பேரைக் காப்பாற்றி உள்ளனர். ஏனையவர்கள் பற்றிய அச்சம் கவலையளிப்பதாக இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே 39 பேர் பயணித்த படகிற்கு பின்னால் 59 பேருடன் சென்ற மற்றுமொரு படகு கோகோஸ் தீவுகளுக்கு அண்மையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். 2000 பேர்வரை தஞ்சம் கோரி உள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு தங்கள் கதவுகளை அடைக்கின்ற போக்கு ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக்கப்பட்டு வருகின்றது. தஞ்சம் கோருபவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருவதால் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தக் கதவடைப்பானது தமிழ் மக்களுக்கு மட்டுமான நடவடிக்கையாக இல்லாது போனாலும் இதனால் தமிழ் மக்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2002ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் கரிசனைக்குரிய மக்களாக கணிக்கப்படுகின்றனர். இவர்களில் 12 மில்லியன் பேர் அகதிகள். ஒரு மில்லியன் வரையானவர்கள் தஞ்சம் கோருபவர்கள் என்ற கணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. உதாரணத்திற்கு 2002ல் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கினி 3 மில்லின் சியரலியோன் அகதிகளுக்கும் 150 000 லைபீரியன் அகதிகளுக்கும் இடமளித்தது. பாகிஸ்தானிலும் தன்சானியாவிலும் மாதாந்தம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஐரோப்பாவின் முழு ஆண்டுக்கும் வரும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்பிடக் கூடியது.

பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். 1000 மக்கள் தொகைக்கு பிரித்தானியா இருவரினதும், நோர்வே, சுவீடன் நால்வரினதும் சுவிஸ்லாந்து, அயர்லாந்து மூவரினதும் தஞ்ச விண்ணப்பங்களை ஏற்கின்றன. இத்தரவுகள் 2001 ம் ஆண்டுக்கு உரியவை. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது. தரவுகள் இவ்வாறு அமைய இந்நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியில் உலகின் 25 வீதமான அகதிகள் தங்கள் நாடுகளுக்கே வருவதாகக் கருதுகின்றனர். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இவ்வாறான தவறான கருத்துக்களை பரப்பி அகதிகள் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வழிகோலினர்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அவுஸ்திரேலியாவில் விபத்துக்கு உள்ளான கப்பல் அகதிகளின் நிலையையும் இந்தோனேசியாவின் கடலில் தத்தளிக்கும் 260 அகதிகளையும் மற்றுமொரு முனையில் இந்தோனேசியாவில் தத்தளிக்கும் 76 அகதிகளையும் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 அகதிகளின் நிலையையும் பார்க்க வேண்டும்.

2ம் உலகமகா யுத்தத்திற்குப் பின் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பனிப்போர் அரசியல் காரணங்களுக்காகவும் பின்னைய சூழலில், தங்கள் சனத்தொகை வீழச்சி அடைவதையும் தங்கள் வயதடையும் சனத்தொகையை சமப்படுத்தவும் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்ட மேற்கு நாடுகள் பனிப்போர் முடிவுக்குப் பின் தங்கள் ஐரோப்பிய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டன. தொண்ணூறுக்களின் பின் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் எல்லைகளை இறுக்கி வந்துள்ள மேற்கு நாடுகள் மெலனியத்தற்குப் பின் தங்கள் எல்லைகளை இறுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கின. தங்கள் எல்லைகளை இறுக்குவதற்காக தங்களுடன் இணைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

இக்கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி உயிரைப் பணயம் வைத்து மாண்டவர்கள் பலநூறு. அவ்வாறு மாண்ட தமிழர்களும் பலநூறு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பனிக் காடுகளுக்குள் பனிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் பல. மேற்கு ஐரோப்பா நோக்கி வந்த ஐவர் பராகுவேயில் கைவிடப்பட்டு பனிக்குளிரில் சில தினங்கள் விடப்பட்டதால் அவர்களுடைய கால்கள் அழுகி அவை நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. கொன்கிறீட் கலக்கும் வாகனத்தில் ஒழிந்து வந்தவர்கள் சிலர் எல்லைக் காவலாளி இயத்திரத்தை இயக்கிய போது மரணமடைந்தனர். பிரித்தானியாவின் வாயிலில் 58 சீனர்கள் மூச்சுத் தினறி இறந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பிரயாணத்தை மேற்கொண்ட பல தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரிழந்துள்ளனர்.

தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இத்தாலிக் கடலில் இடம்பெற்ற விபத்து தமிழ் அகதிகளின் புலம்பெயர்வில் ஏற்பட்ட பெரும் விபத்து. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களில் இலங்கையர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இத்தாலிக் கடலில் நின்ற கப்பலில் இருந்து படகுக்கு இறங்கும் பொழுது ஏற்பட்ட இவ்விபத்தில் படகு கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது. கனடா கடல் பகுதியில் படகில் இறக்கப்பட்டவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததும் அதில் உயிரழந்தவருடன் படகு அகதிகள் காப்பாற்றப்பட்டதும் ‘வெல்கம் ரு கனடா’ என்று ஆவணமானது. எரித்திரியாவின் கடலில் வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஏழு பேர் இலங்கைத் தமிழ் அகதிகள். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு அவலம் நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சில சம்பவங்களை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செய்தியாகாத பல சம்பவங்கள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நீண்ட யுத்தம் காரணமாக இலங்கையின் தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றிலொருவர் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புறப்பட்டு தங்கள் இலக்குகளை அடையாமல் இன்னமும் உலகின் பல்வேறு பாகங்களில் சிக்குண்டு இருண்ட எதிர்காலத்துடன் உள்ளனர். தங்கள் இலக்குகளான மேற்குலகை வந்தடைந்தவர்கள் மட்டும் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர் எனக் கொள்ள முடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் உள்ளனர். இவ்வாறு தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் யார் எங்கு உள்ளனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்த கொள்ளவும் முயற்சிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அகதி அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கூட எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அதனைக் கைவிட்டு அரச உதவிகள் எதற்குக் கிட்டுமோ அந்த நடவடிக்கைகளை மட்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகள் நடவடிக்கைக்குழு தற்போது நீரிழி நோயைத் தடுப்பது பற்றியும் யோகாசனம் பற்றியும் தான் சொல்லிக் கொடுக்கின்றது. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் கைவிட்பட்ட இவர்கள் பற்றிய எவ்வித கவனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தோனேசியக் கடலில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பில் தமிழ் ஒருங்கிணைப்பு மட்டுமே அவுஸ்திரேலிய தூதரலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழக்கக் கோரியது. அவுஸ்திரேலியா தமிழ் கொங்கிரஸ்ம் அதற்காக குரல் எழுப்பி வருகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மனித அழிவையும் அவலத்தையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத மேற்குலகம் தற்பொழுது இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாக அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அதே இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்ட அகதிகள் 260 பேர் இந்தோனேசியக் கடலில் தவிக்கின்றனர். அந்த அகதிகளுக்கு எந்தவொரு மேற்கு நாடும் தஞ்சம் அளிக்க முன்வரவில்லை. கடந்த நான்கு வாரங்களாக நடுக்கடலில் தவிக்கும் இவர்களுக்கு தஞ்சம் வழங்கும்படி இந்த நாடுகள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தவும் இல்லை. மறுமுனையில் கனடாவில் தஞ்சம் கோரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மேற்குலகின் மனித உரிமைக் கோசங்கள் அவர்களின் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதற்கு ஆய்வுகள் அவசியமற்றது.

அவுஸ்திரேலியாவின் எல்லையில் மூன்று அவலங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

ஒன்று: அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் நவம்பர் 1ல் கப்பல் மூழ்கி பயணித்தவர்கள் மரணமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் – அம்சா வுக்கு ஞாயிறு காலை அவல அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்பது மணிநேரத்திற்குப்பின்னரே ஜப்பானிய மீன்டிபிடிப் படகு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. அதற்குப் பின் பல மணி நேரங்களுக்குப் பின் திரவ வாயுவை ஏற்றும் எல்என்ஜி பைனியர் அவ்விடத்தை அடைந்தது. ஆனால் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்என்ஜி பைனியர் மூழ்கிக் கொண்டிருந்த படகைக் காணும் தூரத்திலேயே நின்றதாக செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு: ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று: அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட 260 பேர் கொண்ட கப்பல் இந்தோனேசியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு மேர்க் துறைமுகத்தில் ஒக்ரோபர் 10 முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு அவுஸ்திரேலியாவை கோரி வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர்.

ஆனால் அவுஸ்திரேலிய அரசியல் களம் தஞ்சம் தொடர்பில் யார் கடும்போக்கானவர்கள் என்ற போட்டியில் இறங்கி உள்ளது. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் முன் வரிசை உறுப்பினர் ரொனி அபோர்ட் குடிவரவு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட் மேற்கொண்ட மென் போக்கே இவற்றுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

ரொனி அபோட் மேலும் தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளை இந்தோனேசியா ஏற்காத பட்சத்தில் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு வழமையான குடிவரவு விதிகளுக்கு அமைய நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குடிவரவு கொள்ளையை இறக்கமாக்குவதற்குப் பதில் தளர்த்தியதால் அவுஸ்திரேலியா நோக்கி படகு அகதிகள் கவரப்படுவதாகவும் அவர் தன் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் குற்றச்சாட்டை அத்துடன் நிறுத்தவில்லை அவ்வகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்க கொண்டுவரப்பட்டால் அது அகதிகளை நாடுகடத்தலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் வெற்றியாகும் என்றும் அது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட்டின் கொள்கைகளுக்கு கிடைக்கும் தோல்வி என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று சம்பவங்களும் இந்தோனேசிய – அவுஸ்திரேலிய அரசுகளின் தஞ்சம் தொடர்பான கடும்போக்குகளை அம்பலப்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலிய அரசு தஞ்சம் கோருபவர்களை தனது கரைகளில் இறங்கவிடாது இந்தோனேசிய கடற்படையினரைக் கொண்டு தடுத்து வைக்கின்றது. இவற்றைவிட இவ்வாண்டு இவ்வாறான 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலிய இந்தோனேசிய அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் படி தஞ்சம் கோருவோரை இந்தோனேசியாவில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தனது கையைக் கழுவிக்கொள்கின்றது அவுஸ்திரேலியா. இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பரில் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் இன்னும் சில தினங்களில் நவம்பர் 8ல் சிங்கப்பூரில் இடம்பெவுள்ள ஏபெக் மாநாட்டிலும் அதன் பின் அவுஸ்திரேலியாவில் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்பிலும் இவ்வகதிகள் விடயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் ‘இந்தோனேசியத் தீர்வு’ எவ்வளவுதூரம் தீர்வாக அமையும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே கிளம்பி உள்ளது.

தமிழக முகாம்களில் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்ய வேண்டும்! : மறவன்புலவு க சச்சிதானந்தன்

Refugee_Camp_Mandapam1.0 கள நிலை

1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)

1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.

1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)

1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).

1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 

1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.

1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.

2.0 வாழ் தகுதி

2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்க வேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.

2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.

2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்க வேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.

3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)

3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமைய வேண்டும்.

3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.

3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்க வேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.

3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப் போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

4.0 தொழில்

4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.

4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.

4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.

4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.

5.0 கல்வி

5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.

5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.

5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடுஇ 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.

5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.

5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி. அரசு நிதி ஒதுக்கியும். புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும்.

5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்து நோக்க வேண்டும்.

6.0 மருத்துவம்

6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுக்க எந்தவொரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

290909mahinda.jpgஇலங் கையின் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்கு உலகின் எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதித் துறையானது ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணித்திருந்த யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டுக்கெதிரான அழுத்தங்களின் போது இன, மத, குல பேதமின்றி இணைந்து முகங்கொடுக்க சகலரும் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்க அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத்திற்கருகாமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. மேற்படி கட்டிடத்திற்கான பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

முப்பது வருட கால பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டில் நீதித்துறையின் அதிகாரத்தை உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இதனை, தேசிய ரீதியில் நாட்டை முன்னேற்றுவதற்கு சிறந்த யுகமாகக் கொள்ள முடியும். கடந்த 30 வருட காலம் இலங்கையின் நீதித்துறை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தது.

மக்களுக்கான நீதித்துறை என்ற நிலைமைக்கு மாறாக நாட்டில் ஒரு பகுதியில் சட்டம் நடைமுறை யற்றதாகியிருந்தது. சில காலகட்டங்களில் வவுனியாவிற்கு அப்பால் சட்டம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கிய போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத காலம் அது. பயங்கரவாதக் குழுவை பிடிப்பதற்கான தேவை இந்தியாவிற்கும் இருந்தது. எனினும், பிடியாணை உட்பட நீதிமன்ற செயற்பாடுகள் அப்போது கேலிக்குரியதாகின.

சட்டம் ஆயுத பலத்துக்கு அடி பணிந்திருந்த யுகத்துக்கு நாம் முடிவு கட்டினோம். இன்று சட்டத்திற்கெதிரான அச்சுறுத்தல்களை மேற்கொள்ள எவருக்கும் இடமில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தற்போது செயற்படுவதுடன் சட்டம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயற்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களும் கண்டுள்ளோம். வடக்கு, கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் தெற்கில் பாதாள உலகம் என இவ்வச்சுறுத்தல் தொடர்ந்தன.  நீதிபதி சரத் அம்பேபிடிய போன்றவர்கள் பாதாள உலக குழுவினால் கொல்லப் பட்டார்கள். இது போன்ற நாட்டில் சட்டத்தை நிலைநாட்ட முயன்று துப்பாக்கிக்குப் பலியான பல சம்பங்களுண்டு. நாட்டில் பல நீதிமன்றங்கள் மூடப்பட்ட காலம் அது.

எல்லைக் கிராமம் என்பதை இலங்கையின் வரை படத்திலிருந்தே அகற்றி சட்டம் முழு நாட்டிற்குரியது என்பதை நாம் நடைமுறையில் கொண்டு வந்துள்ளோம். சட்டம் சகலருக்கும் பொதுவானதாக வேண்டும். நாம் தொழில்நுட்ப அறிவை கிராமிய மட்டத்திலும் கொண்டு சென்றுள்ளோம்.

இதனால் எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணிகள் அறிவு பூர்வமான மக்களுக்கே சேவை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மக்களுக்கான உரிமை தொடர்பில் அவர்களை அறிவுறுத்த வேண்டியதும் சட்டத்தரணிகளின் கடமையாகிறது.

சிலர் நிறுவனச் சட்டங்களைக் கையிலெடுக்க முயல்கின்றனர். அதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. அரசாங்கம் நீதித்துறை போன்றே நீதித்துறை சார்ந்தவர்களின் கெளரவத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் தலையிடவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது.

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து ஊடகங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து நீதிமன்றத் தீர்ப்பினை மாற்ற கடந்த காலங்களில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி வேறு நாடுகளை தலையிடச் செய்து நம் நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றியமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்தால் நாட்டின் சட்டம் என்னாவது? சட்டத்தின் முன் சலரும் சமம் என்ற கூற்றுக்கு என்ன அர்த்தம்? அப்படி நிகழ்ந்தால் சட்டத்தின் சமத்துவம் கேள்விக்குரியதாகிவிடும்.

எமது நாட்டில் சிறந்த நீதித்துறை உள்ளது. எந்தவொரு பாரதூரமான பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக்கூடியதான பலத்தை அது கொண்டுள்ளது. இதனால் இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேறு நாடுகளில் நீதிமன்றங்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாத்தால் மட்டுமே சட்டம் ஒழுக்கம் நிறைந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது நாட்டிற்கெதிரான அழுத்தங்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் இனம், மதம், குலம், கட்சி என்ற பேதங்கள் இருக்கக் கூடாது. எமது தாய் நாட்டிற்கு அழுத்தங்கள் வருமானால் நாம் அனைவரும் இணைந்து அதனை எதிர்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் எவ்வித தொற்றுநோயுமில்லை – வவுனியா அரச அதிபர்

101009displacedidps.gifஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய்த்தடுப்புக்கான சகலவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் தாம் நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தனர்.

அவ்வாறானவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தொற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு தொற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் இதற்கு முன்னுதாரணமாக தொற்று நோய்களற்றதாக எமது நலன்புரி நிலையங்கள் திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்களிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நிர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக் கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

031109sarathfonseka.jpgஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

 இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.