2009

2009

நவநீதம்பிள்ளைக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒருபோதும் நம்பவில்லை – வெளிவிவகார செயலாளர் கோஹண

Dr Kohonaமனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் ஒருபோதும் நம்பவில்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண புலிகளுக்கு ஆதரவான சக்திகள் அவரைத் தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவா தலைமையகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கையானது,ஒரு தலைப்பட்சமானதாகவே நோக்கப்படவேண்டியதாகும். ஒரு தரப்பினரின் தகவலை மையமாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் அவர் இலங்கை அரசுடனோ, அல்லது ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியிடமோ கலந்துரையாடியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யாமல் பக்கச்சார்பான விதத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனை வைத்துக்கொண்டு நாம் அவரை புலிகளுக்குச் சார்பானவரென்றோ, புலிகளுடன் தொடர்புள்ளவரென்றோ கூறமுட்படமாட்டோம். புலிகளுடன் தொடர்புடையவர்களும் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் நவநீதம் பிள்ளையை தவறாக வழிநடத்தியிருப்பதாகவே நோக்குகின்றோம்.

இதன் மூலம் தனது பதவிக்கும், ஐ.நா. மனித உரிமைகள் செலயகத்துக்கும் அபகீர்த்தியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.

437 வன்னி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர்.

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காலநிலை மாற்றம் மழை தொடரும்

flod-wanni.jpgபருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைநேரங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுமென்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எல்.ஆர்.ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று முன்தினம் பெய்த மழையை அடுத்து குருபகனே மந்தபுர பகுதியில் கடும் காற்று வீசியதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த காற்றினால் குருநாகல் மெதிபுர பிரதேச செயலகப் பிரிவில் பண்டுகஸ்துவ, மங்குலாகம, ஷெனிகெதர ஆகிய பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

trnco.jpgகடத்தப் பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட 6 வயது மாணவி வர்ஷா யூட் ரெஜியின் இறுதிக்கிரியைகள் எப்போது நடத்தப்படும் என்பது நேற்று சனிக்கிழமை மாலைவரை தீர்மானிக்கப்படவில்லை. சிறுமியின் தந்தை ரெஜி, கட்டாரில் தொழில் செய்கிறார். அவர் நாடுதிரும்புவதைப் பொறுத்து இறுதிக்கிரியை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சிறுமி படித்துவந்த திருகோணமலை சென். மேரிஸ் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணி தலைமையில், சிறுமியின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பாலையூற்றுபூம்புகார் இல்லத்திற்குச் சென்று நேற்று சனிக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையில், இக் கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக திருகோணமலைப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்: எங்களுக்கு தொடர்பேயில்லை- புலிகள்

yohi.jpgஇந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் தந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் ‘புலிகளின் குரல்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு யோகரத்னம் யோகி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் கூறுகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்தான் ஏறி மித்தார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் அவர்களால் (இந்தியா-இலங்கை அரசுகளால்) செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு இங்கே வந்த அவர்கள், நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் புலேந்தி அம்மான் போன்றவர்களை இலங்கை அரசு கைது செய்தபோது அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால், இந்திய அரசு ஒப்பந்தத்தை காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு எங்கள் மீது போர் தொடுத்தது. ஆறாயிரம் மக்களை கொன்று குவித்தது என்பதை ப.சிதம்பரம் மறந்து விட்டார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு-கிழக்கு கௌரவமாக இணைக்கப்பட்டது என்பது ராஜீவ் காந்தியால் கூறப்பட்ட ஒன்று. அதை உறுதியாக பேணியிருக்க வேண்டியதும் இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் காலால் ஏறி மிதித்தனர் எனக் கூறுவதை பலர் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதை நாங்கள் காண்கிறோம். இங்கே, நான் என்ன கூற வர விரும்புகின்றேன் என்றால் இந்த போலி வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்; மயங்காதீர்கள். எங்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய அழிவுக்குள்ளும் மிகப் பெரிய பேரழிவுக்குள்ளும் நின்று போராடுகிறோம். உறுதியாக போராடுகிறோம்.

இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பின்னால் உலகத் தமிழினமே ஒன்றுபட்டு நில்லுங்கள். நிச்சயமாக எங்களுக்கான ஒரு நாட்டை நாங்கள் விரைவில் அமைப்போம் என்று யோகரத்தினம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பெண் மந்திரி ஷெர்ரி “திடீர்” ராஜினாமா

sherry_rehman.jpgபாகிஸ்தான் மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருந்தவர் ஷெர்ரி ரகுமான் தகவல் தொடர்பு இலாகாவை கவனித்து வந்தார். இவருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ரகுமான் திடீரென்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை உடனடியாக பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அரசின் தகவல் ஒலிபரப்பு கொள்கை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. நவாஸ்செரீப் நடத்திய வக்கீல்கள் பேரணியை அரசு அடக்க நினைத்தது. ஆனால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் பின் வாங்கியது.

இது தொடர்பாக அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரது சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒளிபரப்புவது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எதிர்க்கட்சிகள் போராட்டம், வக்கீல்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவதால் அதிபர் சர்தாரி அதிருப்தி அடைந்தார்.இதையடுத்து ரகுமான் ராஜினாமா செய்தார்.

பத்திரிகையாளரான ரகுமான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்க சர்வதேசம் இலங்கைக்கு உதவ வேண்டும் – பொக்ஸ்

liam_fo_.jpgவன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதிப்புகளின்றி மீட்பதற்கு சர்வதேச நாடுகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யும் பாதுகாப்பு நிழல் அமைச்சருமான லியாம் பொக்ஸ் தெரிவித்தார். இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே இதனைத் தெரிவித்தார்.

வன்னியில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் பல, பல்வேறு அறிக்கைகளை விடுத்தும் குரலெழுப்பியும் வருகின்றன. எனினும் சர்வதேசம் இவ்விடயத்தினை முழுமையான கவனத்திற்குக் கொண்டு வந்து அம்மக்களை மிகக் குறைந்த பாதிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம். சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் நாட்டின் பொருளாதாரம் கல்வி மற்றும் அபிவிருத்திகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை புலிகளின் பிடியில் அகப்பட்டுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கும் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தாம் இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் இவர்களிடம் இவ்விடயம் பற்றி வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மேற்படி செய்தியாளர் மாநாட்டில் வியாம் பொக்ஸ் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நிதியமொன்று ஏற்படுத்த வேண்டும். அந்நிதியத்தினூடாக வடக்கு, கிழக்கு மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நிதியமொன்று தொடர்பாக நான் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அவரது கவனத்தை கொண்டு வந்துள்ளேன்.

இதனை ஆரம்பிப்பதில் நான் முன்னின்று செயற்படுவேன் என அவரிடம் நான் தெரிவித்துள்ளேன். இந்நிதியத்திற்கு சர்வதேச நாடுகளின் முழுமையான பங்களிப்பு பெறப்படுவதுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களினதும் உதவிகளைப் பெறமுடியும். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்நிதியம் முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் தொடர்பான ஸ்திரத்துவம் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. யுத்தத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவனத்திற் கொள்வதுடன் இத்தகைய இழப்புக்கள், பாதிப்புக்கள் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமே சமாதானத்தை வென்றெடுக்க உதவக் கூடும்.

வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு விரைவான அரசியல் தீர்வு முக்கியம். அங்கு தேர்தலொன்றை நடத்துவதானது இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கான சிறந்த ஆரம்பமாக அமையும். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கேற்பானது அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கலாநிலையம்: தெற்கு கலைஞர்கள் பங்களிப்பு

jaffna1.jpgவடக்கு தெற்குக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கலா நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சகல கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ்நகரில் இக்கலா நிலையம் அமையவுள்ளது.

இக்கலா நிலையம் திரையரங்கு, சன சமூக நிலையம், கலையரங்கு ஒத்திகை மேடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் யாழ்ப்பாணத்துக் கட்டிடக் கலை சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கலா நிலையத்தை அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் விசேட நிகழ்வும் பத்திரிகையாளர் மாநாடும் கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாலினி பொன்சேகா, ரவீந்ர ரந்தெனிய உட்பட தெற்கின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இத் தேசியப் பணிக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதுடன் சகல கலைஞர்களும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன் நாடளாவிய சகல சினிமாத் திரையரங்குகளினதும் ஒரு நாள் வருமானம் (மார்ச் 22 ஆம் திகதி) இதற்காக பெறப்பட வுள்ளதுடன் சகல திரையரங்குகளின் உரிமையாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலாநிலையத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் தெற்கில் கலை நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி நிதி சேகரிக்கவும் கலைஞர்கள் முன்வந்துள்ளனர். கலா நிலையம் அமைப்பதற்கான காணியை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளதுடன் மினி திரையரங்கை அமைப்பதற்கான நிதியை திரைப்படக் கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

வடக்கு தெற்கிற்கான உறவின் கலைப்பாலமாக அமையும், இந் நடவடிக்கையில் எந்தவொரு அரசியலும் கலக்கப்படமாட்டாது. 30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென நடிகை மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு தமிழ்க் கலைஞர்கள் வழங்கிய பாரிய பங்களிப்பும் இந் நிகழ்வில் நினைவு கூரப்பட்டதுடன் மேற்படி பணிக்கு தமிழ் கலைஞர்களின் பங்களிப்புக்களும் பெறப்படுமென அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவர் குழுவின் வருகைக்கு அரச மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பு

india-doctors.jpgஇந்திய மருத்துவர் குழு இலங்கைக்கு வருகைதந்திருப்பது குறித்து கடும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , இந்த மருத்துவ அணியின் வருகையானது இலங்கை மருத்துவ ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் எச்சரித்திருக்கிறது.

அது மட்டுமல்லாது, இவ் விடயத்தில் தங்களது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு செவி சாய்க்கவில்லையெனில் சுகாதார சேவை தொழிற்சங்கங்களை மட்டுமல்லாது, எனைய துறை சார்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்திருக்கும் இந்திய மருத்துவ அணியினர் புல்மோட்டையில் வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான டாக்டர் கிஷாந்த தஸநாயக்க தெரிவிக்கையில்;

“இந்திய வைத்தியர்களுடன் கூடிய மருத்துவ அணியினர் இலங்கை வந்து வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் எதிர்க்கிறோம். ஏனெனில், இலங்கையின் சட்டவிதிகளுக்கு அமைய வைத்தியரோ அல்லது மருத்துவ நிலையங்களோ இலங்கை மருத்துவ சபையினால் பதிவு செய்யப்படவேண்டும்.

ஆனால், இந்திய வைத்தியர்களோ, அவர்களது வைத்தியசாலையோ அவ்வாறு எந்தப் பதிவுகளுக்கும் உட்படுத்தப்படவில்லை. எனவே, இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் போது ஏதேனும் தவறுகள் ஏற்படின் அதற்கான பொறுப்பை எடுத்து மருத்துவ சபை விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்யாது. அதற்கான அதிகாரமும் அதற்குக் கிடையாது. இலங்கையிலுள்ள சட்டங்களுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இங்கு சிக்கலாகும்.

இந்தியாவோ அல்லது வேறு எவருமோ வைத்தியசாலையொன்றை அன்பளிப்பு செய்வதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், புதியதொரு வைத்தியசாலை ஏற்படுத்தப்படும் போது அதில் பணிபுரிய போதுமானளவு வைத்தியர்களும் சுகாதார பணியாளர்களும் இலங்கையில் இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்னவென்பதே எமது கேள்வியாகும்.

இலங்கைக்கென சிகிச்சை முறை உடன்படிக்கை இருக்கிறது. இலங்கை சூழலுக்கு ஏற்ற மாதிரியே இது இருக்கிறது. உதாரணமாக, இலங்கை வைத்திய சாலைகளை பொறுத்தவரையில சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலை மாற்றப்பட்டாலும் அவர் பற்றி மீளாய்வு செய்யும் முறை இருக்கிறது. எனினும், இதுபற்றி இந்திய வைத்தியர்களுக்கு தெரியாது. இவ்வாறானவற்றையே நாம் எதிர்க்கிறோம்.

இதேநேரம், புல்மோட்டை என்பது இவ்வளவு காலமும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது மீட்கப்பட்ட பிரதேசமல்ல. எப்போதுமே அரச கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசமே இது. அது மட்டுமல்லாது, அங்கு ஏற்கனவே புல்மோட்டை வைத்தியசாலையும் அருகில் பதவியா வைத்தியசாலையும் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் இவற்றை போதிய வசதிகளுடன் கூடியதாக அபிவிருத்தி செய்யாமல் இந்திய வைத்தியசாலையொன்றை ஏற்படுத்த அங்கு இடமளித்துள்ளது.

அத்துடன், இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு பெரும் சந்தேகமாக இருக்கிறது. இது இலங்கை சுகாதார சேவைக்கும் அதன் பணியாளர்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் பெரும் பாதிப்பாகும்.

எனவே, புல்மோட்டையில் புதிதாக அமைக்கப்படும் வைத்தியசாலையை இலங்கை சுகாதார சேவைக்குள் உள்ளீர்த்து இலங்கையிலுள்ள சுகாதார சேவைப் பணியாளர்களை வைத்து அதைக் கொண்டு நடத்தவேண்டுமென சுகாதார அமைச்சிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம். எமது இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதுமட்டுமல்லாது, இந்திய மருத்துவ அணியின் வருகையும் செயற்பாடுகளும் இலங்கை மருத்துவ ஒழுங்குவிதிகளுக்கு முரணானவை என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

“குடிநீரில் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை”

tap_water.jpgகொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பகிர்ந்தளிக்கபடும் குடிநீரில் எவ்வித நச்சுத் தன்மையும் கலக்கப்படவில்லை எனவும் நேற்றுப் பகல் முதல் சுத்தமான நீரையே வழங்குவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கிறது.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக சேற்றுடன் கலந்த மழை நீர் களனி கங்கையில் கலந்ததால் கொழும்பு பெரும்பாகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் நீர் சேற்று மணத்துடன் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீரில் நஞ்சு கலந்துள்ளதாக வதந்திகள் பரவின.

நேற்றுக் காலை 10.00 மணியளவில் நீர்வழங்கல் சபை நிலைமையை சரி செய்ததுடன் மிகவும் சுத்தமான நீரை விநியோகம் செய்தது.பாவனையாளர்கள் அனைவரும் சேற்று மணத்துடன் காலையில் வந்த நீரை தொட்டிகளில் சேமித்திருப்பின் அவற்றை வெளியேற்றிவிட்டு புதிய சுத்தமான நீரை தொட்டிகளில் நிரப்பிக் கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.