2009

2009

சரத் பொன்சேகாவிடம் அமெரி. விசாரணை நடத்தாத வகையில் இராஜதந்திர நடவடிக்கை – போகொல்லாகம

rohitha-bogollagama_s.jpgகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க சுதேசிய பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்காத வகையில் சகல ராஜதந்திர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவருடனும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கக் கூடிய சகல ராஜதந்திர ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் பிரதிபலன்கள் ஜனாதிபதிக்கு உள்ள சர்வதேச பலத்தை வெளிப்படுத்துவதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை அரசுக்குள்ள சிறப்புரிமைத் தகவல்களை மூன்றாந் தரப்புக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் அரச அதிகாரி ஒருவருக்கு கிடையாது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்தார்.

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்

0511nedu.jpgஇலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபக்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும்.

ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்.

பிரதி கல்வி அமைச்சர் தலைமையிலான குழு யாழ். விஜயம்

யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள பாட சாலைகள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களின் கல்வி மேம்பாடு, பெளதிக, ஆளணி மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முகமாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 06, 07, 08, 09 ஆகிய திகதிகளில் யாழ். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், எழுவைதீவு உள்ளிட்ட தீவகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்வதற்காக செல்லவுள்ள இக் குழுவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர்கள், வடக்கின் வசந்தம் பிரிவின் அதிகாரிகள், பிரதிக் கல்வி அமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஜனவரி முதல் சம்பள உயர்வு – நவம்பர், டிசம்பர் நிலுவைகளுடன் வழங்கப்படுமென ஜனாதிபதி அறிவிப்பு

041109ma.jpgஜனவரி மாதத்திலிருந்து சகல ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (03) அறிவித்தார். புதியதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சம்பள உயர்வு வழங்குவதோடு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான நிலுவையும் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரத் தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய சம்மேளனத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பைச் செய்தார். “அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் சமர்ப்பிக்கவிருந்தேன். ஆனால், புதிய பாராளுமன்றத்திற்கு முன் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்றத்தில் கட்டிப்போட வேண்டாமெனக் கூறினார்கள். அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், ஊழியர்களின் நலனை கவனிப்பதற்கு ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றவகையில் புதிய பாராளுமன்றம் வரை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனவரி மாதம் நிச்சயம் சம்பள உயர்வைப் பெறுவீர்கள். இரண்டு மாத நிலுவையும் கிடைக்கும்” என்று தெரிவித்தார் ஜனாதிபதி.

இதனைத் தாம் இதற்கு முன்பும் கூறியதாகவும் ஆனால், சம்பந்தப்பட்டவர்களைத் தனது அறிவிப்பு சரியாக சென்றடையவில்லையென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அரசியல் பிரச்சினை!

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி மக்களை அழுத்தத்துக்குள்ளாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள். எனவே சூழ்ச்சிகளுக்கு இடமளிக் காதீர்கள்” என்றார் ஜனாதிபதி. அதேநேரம் 180 நாள் வேலை செய்த அனைவரையும் நிரந்தரமாக் குவதற்கு நடவடிக்கை எடுப்பதா கவும் ஜனாதிபதி கூறினார்.

“உடன்படிக்கை செய்து, பிரித்துப் போட்ட நாடு இது! புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியெனத் தனியாகக் குறித்தொதுக்கப்பட்டது. அங்கு எமது இராணுவத்தினர் உள்ளே செல்ல முடியாது. அவர்களின் பகுதிக்குச் செல்பவர்கள் கப்பம் செலுத்த வேண்டும்.

வரி என்று நான் சொல்ல மாட்டேன்! புலிகள் நிர்வாகத்தைப் பிரித்து, பொலிஸ் படை, கடற்படை, விமானப்படை, இராணுவப் படை போன்றவற்றை உரு வாக்கும்வரை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தெற்கில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த உத்தியோகத்தரைக் கொலை செய்த சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

எங்கே குண்டுகள் வெடிக்கும் என்று அஞ்சிய யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான போராட்டத்தில் தொழிலாளர் மக்கள் எமக்கு ஆதரவாக இருந்தனர். நாம் யுத்தத்தின் காரணமாக அபிவிருத்தியை முடக்கவில்லை. நாட்டைப்பற்றிச் சிந்தித்துதான் முன்னேறுகின்றோம்.

எதிர்க் கட்சித் தலைவரைப் போல் அந்தப் பகுதியை நீ பார், இந்தப் பகுதியை நான் பார் என்று புலிகளுக்கு நான் சொல்லவில்லை. எனக்கு என்னைவிட என் தாய் மண் மீதே கூடுதல் அன்பு. நாம் எமது பொறுப்புகளைச் செய்யவேண்டும். நாம் பதவிக்கு வர பாடுபட்டவர்கள், தற்போது வேறு யாருடனோ போவாரெனின் அது உகந்த விடயமல்ல. எனவே சிறு குழுக்களுக்கு எமது சங்கத்தை ஆட்டுவிக்க இடமளித்துவிடாதீர்கள்.

அதுபோல் நிறுவனத் தலைவர்கள் மண்ணில் கால்பதித்துச் செயற்படவேண்டும். வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல் செயல்படக்கூடாது.

ஜனாதிபதி தேர்தலா, பொதுத் தேர்தலா முதலில்?

இரண்டு தேர்தல்களில் எது முதலில் வரும் எனச் சிலர் கேட்கிறார்கள். சிலர் ஒரு தேர்தலைக் கூறுகிறார்கள். என்னவானாலும் எதிர்வரும் 15ம் திகதி சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் எந்தத் தேர்தல் என அறிவிப்பேன்!” என்று ஜனாதிபதி கூறியதும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டார்கள். “சரி உங்கள் கருத்தை அறிந்துவிட்டேன்.

மாகாண சபை மற்றும் பிராந்திய தலைவர்கள் மற்றும் மக்களிடமும் கருத்தைக் கேட்பேன். ஆனால், எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உண்டு. மக்களுக்காக 2 வருடங்களைத் தியாகம் செய்யவும் தயார்” என்று கூறினார் ஜனாதிபதி.

சபையில் இடைக்கால கணக்கறிக்கை; ரூ.362 ஆயிரத்து 687 மில். செலவினம்

parliament.jpgஅடுத்த வருடத்தின் (2010) முதல் நான்கு மாதங்களுக்குமென 36268 மில்லியன் ரூபாவுக்கான (362,687,974,000) இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறை நிரப்பு பிரேரணையில் பொது சேவைகளுக்காக 356,465,507,000 ரூபா அரச திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச திரட்டு நிதியத்திலிருந்து முற்கொடுப்பனவாக 6,222,467,000 ரூபாவை இக்காலப் பகுதியில் வழங்குமாறும் இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம், சபாநாயகர் டப்ளியு. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பிரதிநிதியமைச்சரும், அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து அதன் மீதான பாராளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில் ஜனாதிபதிக்கு 2,300,320,000 ரூபாவும், பிரதமர் அலுவலகத்திற்கு 65,416,000 ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு 17,792,000 ரூபாவும் என்ற படி நிதி யொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 2,109,179,000 ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 616,306,000 ரூபாவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 18,677,883,000 ரூபாவும், சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு 19,666,631,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 8,556,559,000 ரூபாவும், உயர் கல்வி அமைச்சுக்கு 1,947,168,000 ரூபாவும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 1,766,700,000 ரூபாவும், வெளிவிவகார அமைச்சுக்கு 1,874,038,000 ரூபாவும் என்றபடி அமைச்சுகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இலங்கை தரைப் படைக்கு 34,545,666,000 ரூபாவும், கடற் படைக்கு 11,600,666,000 ரூபாவும், விமானப் படைக்கு 7,816,666,000 ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 12,401,766,000 ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2,978,333,000 ரூபாவும் கடற்கரைப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 16,600,000 ரூபாவும் என்ற படி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தேர்தல் திணைக்களத்திற்கு 366,296,000 ரூபாவும், சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களத்திற்கு 3,894,782,000 ரூபாவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு 34,599,000 ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்த இடைக்கால கணக்கறிக்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சுகளுக்கும், அரசாங்க திணைக்களங்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய பாராளுமன்றில் முழுமையான பட்ஜட் அமைச்சர் சரத் அமுனுகம

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் ஐ.ம.சு. அரசு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை புதிய பாராளுமன்றத்தில் அடுத்தவருடம் சமர்ப்பிப்பது உறுதியென பிரதிநிதியமைச்சரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2010ம் ஆண்டு எமக்கு பெரும் நம்பிக்கையூட்டும் ஆண்டாகும். முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கித் தவித்தபோது நாம் நூற்றுக்கு நான்கு வீத பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடங்களில் ஈட்டிக் கொண்டுள் ளோம், அடுத்த வருடத்தில் நூற்றுக்கு ஏழு வீத பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் காட்டுவது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்கவின் சார்பில் அமைச்சர் சரத் அமுனுகம அரசாங்கத்தின் இடைக்கால கண்கறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அமைச்சர் இது தொடர் பில் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால கணக்கறிக்கையை அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி யினர் இது நடைமுறைக்கு முரணானதென எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர்.

இதனை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இது போன்ற இடைக்கால கணக்கறிக்கைகளை சபையில் சமர்ப்பித்து சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் ரொனி டீ மெல் இதுபோன்ற கணக்கறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இது இடம்பெற்றுள்ளதென்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசாங்கம் சமர்ப்பிக்கும் இக்கணக்கறிக்கை க்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது, எனினும் இதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்ளமறுக்கிறது. இத்தகைய பாராளுமன்றத் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாத ஐ.தே.க. வை நாட்டு மக்கள் எப்படி எற்றுக் கொள்ளப்போகிறார்கள்? அடுத்த வருடம் ஏப்ரலில் நாம் புதிய பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்போம். எனினும், இச்சந்தர்ப்பத்தில் சபையிலிருந்து வெளியேறும் ஐ.தே.க.வினர் நிரந்தரமாக சபையை விட்டு வெளியேற நேரும். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது தோல்வியைத் தழுவும் கட்சியே. இவர்கள் ஒருபோதும் வரவு செலவுத் திட்டத்துக்கு முகங் கொடுக்க முடியாதவர்கள். ரணில் விக்கிரமசிங்கவின் இச்செயலுக்கு அடுத்த தேர்தல் தீர்ப்பளிக்கும்.

கடந்த வருடங்களில் யுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகள் பாதிப்புற்றன. தற்போது விவசாயம், சுற்றுலாத்துறை, கைத்தொழில் போன்ற துறைகள் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியானது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பினை வழங்கும்.

நாட்டில் சிறந்த முதலீடுகள் தற்போது இடம்பெறுகின்றன. அடுத்த வருடத்தில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு முதலீடாக வந்து சேரும். உலக நாடுகள் இலங்கை மீதான நம்பிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இலங்கையுடன் பயமின்றி கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில் சர்வதேச நாடுகள் உள்ளன.

மீளக் குடியமர்த்தும் பகுதிகளில் அரச ஊழியர் கடமைக்கு திரும்புவது கட்டாயம்; தவறினால் கொடுப்பனவு ரத்து

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை மீளக் குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள கிராமசேவகர்கள் உட்பட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடனடியாக தத்தம் பகுதிகளுக்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களை மீளக் குடியமர்த்துவதை துரிதப்படுத்துவதற்கும், குடியமர்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூரணப்படுத்திக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றங்கள், குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கென விசேட கூட்டமொன்று நேற்று திருமலையில் நடைபெற்றது.

ஒரு மன நோயாளியை அடித்துக் கொல்லும் இலங்கைப் பொலீஸின் நிறுவனமயப்பட்ட துஸ்பிரயோகம் : ரி சோதிலிங்கம்

Bambalappitty_Police_Brutality மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. தாக்கியவர் இலங்கைப் பொலிசார் என்பதாலும் கொல்லப்பட்டவர் தமிழர் என்பதாலும் இது ஒரு இனவாத செயலாகவே தமிழர்களால் நோக்கப்படுகிறது. இலங்கையின் அரச இயந்திரங்களின் தொடரும் இனவாதப் போக்கு அவ்வாறான முடிவுக்கு தமிழ் மக்களைத் தள்ளியது தவிர்க்க முடியாதது. மேற்படி சம்பவம் தமிழன் என்பதற்காக நடத்தப்பட்டதோ இல்லையோ இவ்வாறான சம்பவங்களின் போது தமிழர்கள் பாதிக்கப்படும் இடத்து அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இதுவே இலங்கை அரசு மீது நம்பிக்கை கொள்வதற்கு காலம் காலமாக தடையாக இருந்து வந்துள்ளது.
 
இலங்கை அரச இயந்திரங்களின் இனவாதப் போக்கு காரணமாகவே தமிழர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் விளைவாகவே உள்நாட்டுப்போரும் உக்கிரமடைந்திருந்தது. இந்த உள்நாட்டுப்போரில் வெற்றியடைந்த அரசும் அதன் அரச இயந்திரங்களும் இனவாத தன்மையிலிருந்து தாம் விடுபட்டுள்ளதாகவும் தாம் இனவாத அரசு அல்ல என்ற கருத்துக்களை உலகெங்கும் பரப்பியும் உள்ளது. ஆனால் பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அரசு சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்ற நிலையையே காட்டுகின்றது.

தற்போதைய அரசும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஆட்சிக்கு வந்ததும் தமிழர்க்கு அரசியல்த் தீர்வு’ என்றனர். பின்னர் ‘புலிகளை அழிக்கும் போதே அரசியல்த் தீர்வு’ என்றனர். ‘புலிகளை அழித்த பின்பு அரசியல்த் தீர்வு’ என்றனர். இன்று ‘ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல்த் தீர்வு’ என்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆக மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ் மொழி, தமிழ் மக்கள் இவர்களது பிரச்சினைகளை தாம் அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. பொலீஸ் இராணுவ நிர்வாகத்தில் தமிழ் அமுலாக்கல்’ என்றெல்லாம் சொல்கின்ற போதிலும் ஒக்ரோபர் 29ல் சிவகுமார் என்ற மலையகத்தைச் சேர்ந்த மனநோயாளியான இளைஞனுக்கு நிகழ்ந்த கொடுமை மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதை இச்சம்பவம் அம்பலப்படுத்தி உள்ளது. இது இலங்கைப் பொலீசாரில் எவ்வித மாற்றங்களும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இன்பம், செல்வம் கொலை, தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலய காவலாளி கொலையிலிருந்து கதிர்காம யாத்திரிகர்கள் மாணிக்க கங்கையில் தீர்த்தமாடும் போது நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நிகழ்ந்த ஒரு மனநோயாளியான இளைஞனின் கொலை என்பவற்றிற்கு இலங்கை அரசும் அதன் பொலீஸ்படையுமே காரணமாகும். இந்தப் பொலீஸ்படை இன்று வரையில் தமது நடவடிக்கையில் மாற்றம் கொள்ளாதது மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியள்ளது.

நாட்டில் பொலீசார் தவறு செய்பவர்களையும் குற்றவாளிகளையும் அவர்கள்மீதுள்ள குற்றங்களை பதிவு செய்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டே தண்டனை அளிக்கபடல் வேண்டும். இதற்காகவும் இதன் காரணமாகவும் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணவுமே பொலீசார் இயங்குகின்றனர். ஆனால் இலங்கைப் பொலிசார் தங்களுக்குள்ள அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்கின்ற போக்கும் இனவாதத் தன்மையும் பொலிஸ்படையில் ஸ்தாபனமயப்பட்டு உள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடே பம்பலப்பிட்டிச் சம்பவம்.

Manikkagangai_Police_Brutalityகதிர்காமத் தீர்த்தத்தின் போதும் இது போன்றே பொலிசார் தமது இடுப்புப் பட்டியாலும் பொல்லுகளாலும் ‘பறத்தெமிழு’ என்று சொல்லியே ஆற்றில் குளித்தவர்களுக்கு அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொலிஸ் படையில் தமிழ் மக்கள் மட்டுமல் சிங்கள மக்களுமே நம்பிக்கை கொள்ள முடியாது. தென்பகுதிகளில் கூட பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கைகள் பற்றி சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொலீஸ் உத்தியோகத்தர்கள் நாளை தண்டனையாக வன்னிக்கு இடமாற்றம் பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள். இதுபோன்ற செயல்களை வெளிக்கொணர எந்த ஊடகமும் இல்லாத நிலையை எப்படிப் பயன்படுத்துவர் என்பதையும் அவதானிக்க வேண்டும்.

‘ரோகண விஜயவீர கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி சித்திராங்கனியையும் பிள்ளைகளையும் வாழ அனுமதித்த இலங்கை அரச படைகள் சரணடைந்த பிரபாகரனையும் போராளிகளையும் கொன்றதை ஒருபுறம் தள்ளினாலும் பிரபாகரனின் மனைவி மதிவதனியையும் சிறுவன் பாலகிருஸ்ணனையும் கொலை செய்தது இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே!!’ என்று அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் ஒக்ரோபர் 17ல் ராவய பத்திரிகையாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் எந்த வழியில் வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரச பயங்கரவாதமாக இருந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

._._._._._.

இளைஞன் கடலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்க பிரதியமைச்சர் சிகாமணி முடிவு

கொஸ்லாந்தையைச் சேர்ந்த இளைஞர் பம்பலப்பிட்டி கடற் பகுதியில் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வும் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி கூறினார். கொஸ்லாந்தையைப் பிறப்பிடமாகவும் இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் கடந்த 29ஆம் திகதி பம்பலப்பிட்டி கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

இவர், ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கும், ரயிலுக்கும் கல் எறிந்தார் என்ற குற்றத்துக்காக அவரைப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவர் மடக்கிப் பிடிக்க எத்தனித்துள்ளனர். அப்போது குறித்த இளைஞர் கடல் பகுதிக்கு ஓடிச்சென்றதுடன் மணலை அள்ளி அவர்கள் மீது எறிந்துள்ளார்.

அதன்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் சிலர் கடற்கரையில் கிடந்த இரண்டு தடிகளை எடுத்து பாதுகாப்புத் தரப்பினர் பக்கமாக வீசித் தாக்குமாறு கூறியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தத் தடிகளைப் பற்றிய பாதுகாப்புத் தரப்பினர் அந்த இளைஞனைத் துரத்தித் துரத்தித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

தாக்க வேண்டாமென அந்த இளைஞன் கும்பிட்டு மன்றாடியும் அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞன் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார். இவரது சடலம் கொள்ளுப்பிட்டி பகுதியில் மீட்கப்பட் டுள்ளது.

இந்தச் சம்பவமும் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்ட யுவதிகள் இருவரின் மர்ம மரணமும் மனிதாபிமானமற்ற படுகொலையாகத் தொடர்வதாகப் பிரதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மலையகத்திலிருந்து கொழும்புக்கு அல்லது பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக குடியேறுபவர்களின் பாதுகாப்பு அச்சமாகவே உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோ அல்லது இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதோ இன்றி, வெறும் பேச்சில் மட்டும் தம் செயலை காட்டாது மலையக தலைமைகள் சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற வேதனைதரும் சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனப் பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான சட்ட நடவடிக்கைகளை தாம் எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் உயர் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக தாம் பேசவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் விசா விண்ணப்பங்கள் 19 முதல் 23 வரை ஏற்கப்படமாட்டா

பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

புதிய விசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 18ம் புதன்கிழமையாகும், விசா விண்ணப்பங்கள் எற்பு எதிர்வரும் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் 18ம் திகதிக்கு முன்னர் விசா விண்ணப்பங்களை மேற்கொள்ளும் பயணிகள் விசா விண்ணப்ப நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் 1வது கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

சு.க. தொழிற் சங்க தலைவராக ஜனாதிபதி தெரிவு

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய மாநாடு நேற்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் தலைவராக அடுத்த மூன்றாண்டுகளுக்கும் ஜனாதிபதி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச் செயலாளராக லெஸ்லி தேவேந்திர மீண்டும் தெரிவானார். பொருளாளராக நொயல் பத்மசிறி காரியவசம் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் நிர்வாகக் குழுவுக்குக் கட்சியின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுமேதா ஜீ. ஜயசேன, அதாவுத செனவிரட்ன, ரீ. பி. ஏக்கநாயக்க, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.