2009

2009

தங்களுக்குரிய உணவு சமைக்கும் பணியை நிவாரணக் கிராம மக்கள் ஆரம்பித்தனர்

risard-badi.jpgவவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று (10) முதல் தாங்களாக சமைக்கத் தொடங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அவர்கள் தாமாக சமைத்து சாப்பிட சமையல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் அடங்கலான சகல நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (10) வவுனியா அரச அதிபர் பணிமனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், மேஜர் ஜெனரல் சந்ரசிரி, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் 4 நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளே இவ்வளவு காலமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தினூடாக அரிசி, மா, பருப்பு, சீனி என்பன வழங்கப்படுவதோடு ஏனைய உலர் உணவுப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் என்பனவற்றை அராசங்கமும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள், மலிகைச் சாமான்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்குவதற்கென வவுனியாவில் களஞ்சியமொன்றை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இனிமேல் வவுனியா அரச அதிபரினூடாக மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்க விரும்புபவர்கள் வவுனியா அரச அதிபரிடம் தமது உதவிகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கான சேமநல திட்டங்களை துரிதப்படுத்துமாறு பணித்தார்.

குடிநீர் மற்றும் மலசலகூட வசதியற்றவர்களுக்கு உடனடியாக உரிய வசதிகள் அளிக்குமாறும் அவர் தெரிவித்தார். மலசல மற்றும் குடிநீர் வசதியற்றவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள சில பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விரைவில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். ஆண்டியபுளியங்குளம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 1346 பேர் இன்று (11) வலயம் 2 இல் தங்கவைக்கப்பட உள்ளனர். அருவித்தோட்டம் சிவானந்த கல்லூரியில் உள்ள மக்களும் விரைவில் நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறியவர் முதல் பெரியவர் வரை சகலரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 910 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனைவரும் இன, மத, பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் எனவும் கோரினார். அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அவர், பருப்பு, கடலை, நெத்தலி, மீன் மற்றும் மலிகைச் சாமான்களே அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்ரசிரி இராணுவத்தினரின், அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறினார்.

முதியவர்களை தமது உறவினர்களுடன் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்து வருவதாகக் கூறிய அவர் பிரிந்த குடும்பத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக வீடமைப்பு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களை வவுனியாவில் களஞ்சியப்படுத்த மூன்று நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

378 பேர் கொல்லப்பட்டதாக செய்தி : தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்கிறது இலங்கை அரசு – பீபீஸி தமிழோசை பேட்டி

gotabaya-rajapakasa.jpgஇலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரை பீபீஸி தமிழோசை பேட்டி கண்டிருந்தது. பீபீஸி இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அப்பேட்டியின் விபரம் வருமாறு:

பீபீஸி தமிழோசை: இன்று (நேற்று 10ஆம் திகதி) 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பீபீஸி தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள், 1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?

கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.

பீபீஸி தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.

கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.

பீபீஸி தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.

கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்கை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார்.

நேற்று இராசையா இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்

ilanthirayan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று   அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் நேற்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என  இணைய செய்திகள் தெரிவிக்கின்றன

நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள சிவிலியன்களை மீட்கும் இறுதி நடவடிக்கை நேற்று ஆரம்பம் – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள சிவிலியன்களையும் மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து நேற்று ஆரம்பித்தனர். இதன் விளைவாக நேற்றுக் காலை முதல் மாலை வரையான காலப்பகுதிக்குள் 1000 சிவிலியன்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் இறுதியாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணை படையினர் கடந்த சனிக்கிழமை மாலை தகர்ந்து அழித்தனர். இதனையடுத்தே பெருந்திரளான மக்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் பிரிகேடியர் கூறினார்.

கரியமுள்ளிவாய்க்காலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் சமர் மூண்டுள்ளது. இதன் போது புலிகள் தரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலிகள் கொல்லப்பட்டதாகவும் பேச்சாளர் நாணயக்கார தெரிவித்தார். சனிக்கிழமை மாலையளவில் புலிகளின் இறுதி மணல்மேடு அழிக்கப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கரியமுள்ளிவாய்க்காலிலிருந்த நேற்று 685 சிவிலியன்கள் 53 ஆம் படையணியினரிடம் வந்து சேர்ந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து 15 சிவிலியன்கள் 59 ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, கடற்படையின் படகுகள் மூலம் 300 சிவிலியன்களை மீட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53ஆம் மற்றும் 59ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள மேற்படி 700 சிவிலியன்களும் புலிகளிடமிருந்து தப்பிவரும் வேளை, புலிகள் அவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி வந்தவர்களுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நால்வரது நிலை கவலைக்கிடமானதையடுத்து அந்நால்வரும் விமானம் மூலம் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் நாணயக்கார குறிப்பிட்டார். இராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மீள வரையறுக்கப்பட்டுள்ளன. இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து புலிகள் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தியமை இராணுவத்தினரின் ராடரில் பதிவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து, சிவிலியன்களின் வருகையைத் தடுக்கும் பொருட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 10.19 மணிவரையிலும் கடும் துப்பாக்கிச் சமரை நடத்தியிருப்பது ராடரில் பதிவாகியுள்ளது. புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்திவிட்டு படையினர் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.

புலிகளின் தொலைத் தொடர்பு சம்பாஷணைகளை இடைமறிந்து செவிமடுத்த போது அவர்களுடைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் நேற்றுக் காலை மாத்திரம் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உயிரிழந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இராணுவத்தின் 58ஆம் படையணியினர் தற்போது புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து 250 மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியது. மேலும் நேற்று இராணுவத்தினராலும் கடற்படையினராலும் மீட்கப்பட்ட ஆயிரம் சிவிலியன்களும் பாதுகாப்பாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவரெனவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 9ம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 493 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.  இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் அரசாங்கம் ஆவலுடன் முன்னெடுத்து வருகிறது. தொடர்ந்தும் புலிகளிடமிருந்து வரும் சிவிலியன்களுக்கு இவ்வசதிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழ் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம் – காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி

06-sonia.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுகிழமை சென்னையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது தமிழகம் அவரது குடும்பத்தினர் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது என நினைவுகூர்ந்ததோடு, இலங்கைப் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கினார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்ததின் வரையறைக்குட்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும் சம அந்தஸ்தும் பெற்றுத்தருவதே காங்கிரசின் லட்சியம் என்று கூறினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.

தவிரவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிவருவதாகவும் சோனியா காந்தி கூறினார்.

அதாவது மத்திய அரசின் விடாமுயற்சியின் காரணமாகத்தான் இலங்கை அரசு போர் நிறுத்ததினை அறிவித்திருப்பதாகவும், போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள மக்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் அவர்களை குடியமர்த்திவிடவேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக இருப்பதாகவும் சோனியா கூறினார்.

சின்னம்மை தாக்கம் – மீட்கப்பட்ட சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து

vanni-0001.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் சகல மக்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சின்னம்மை நோய் பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இம்மருந்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பலர் சின்னம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையும் சுமார் எட்டாயிரம் பேர் சின்னம்மை நோயார்களாக இனம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இந்நோயாளர்களாக இனம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதன் பயனாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் இந்நோய் பரவுவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். சின்னம்மை நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவென வவுனியா, புவரசங்குளம் ஆஸ்பத்திரி தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் தான் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

148 குடும்பங்கள் இன்று முசலியில் மீள்குடியேற்றம் – அடிப்படை வசதிகளும் தயார்

risard-badi.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 148 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேர் இன்று (11) மன்னார், முசலி பிரதேசங்களில் உள்ள 11 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு நேற்று தெரிவித்தது.

இவர்களை வந்தாரவேளி, கூழாங்குளம், மருதமடு, சில்லமுள்ளச்சி மற்றும் பூநொச்சிகுளம் ஆகிய கிராமங்களில் மீள்குடியேற்ற சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களில் 80 வீதமானவர்களை டிசம்பர் 31ம் திகதிக்கு முன் மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது- இதன்படி முதலாம் கட்டமாக மன்னார், முசலி, சவேரியார்புரம் பிரிவைச் சேர்ந்த 122 குடும்பங்களின் 409 பேர் அண்மையில் மீள் குடியேற்றப்பட்டனர். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டனர்.

இன்று (11) 11 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 5 கிராம மக்களே மீள்குடியேற்றப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது. மீள்குடியேற்றப்படும் மக்களை தங்க வைப்பதற்கென தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ள தோடு குடிநீர் வசதி, மின்சார வசதி என்பனவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. இவர்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்கென நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிப்பதற்கென இ. போ. ச. பஸ்கள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதோடு வீதிகள், அரச கட்டடங்கள் என்பனவும் இங்கு அமைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் சுயமாக வியாபார செயற்பாடுகளில் ஈடுபடவும் உதவிகள் வழங்கப்பட உள்ளன எனவும் அமைச்சு தெரிவித்தது. இன்றைய நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், உட்பட பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வான் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

swat-pakkis.jpgமேற்கு ஆஃப்கானிஸ்தானில் போன வாரம் நடந்த அமெரிக்க வான் குண்டு வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூல் நகரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி எனக் கூறும் பதாகைகளுடன் குழமியிருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அந்தத் தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்கள், விமானத் தாக்குதல்கள் இனிமேல் நடக்காது என்று தமது அரசால் உறுதி சொல்ல முடியாது என்றார்.

பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி அக்கரைப்பற்றில் சம்பவம்.

gun00.jpgஅக்கரைப் பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 4 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்(வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 4 பொலிஸார் , 4 மாணவர்கள் உட்பட காயமடைந்துள்ள 11 பேர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா (09) இப்பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இரவு 10 .15 மணியளவில் அமைச்சர் தனது உரையை முடித்து விட்டு திரும்பிய பின்பு கலாச்சார நிகழ்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்ப டையினரும் கடமை முடிந்து அங்கிருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த போது பொலிஸ் கான்ஸ்டபிளொருவரின் தன்னியக்கத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கைத் தமிழ் மக்கள் அவலம் குறித்து சர்வதேசத்திற்கு பொய் உரைப்பவர்கள் யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும், சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை அனுப்புவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா 7 ஆம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்;

அரசாங்கத்திற்கும், அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றது. சர்வதேசத்திற்கு நாம் பொய்யான தகவல்களை கொடுப்பதாக அமைச்சர் ஆதங்கப்படுகின்றார். என்ன பொய்யான தகவல்களை நாம் கொடுத்தோம் என்பதை அரசாங்கமோ, அமைச்சரோ கூறட்டும் பார்க்கலாம்.

யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பலநூறு பேர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா? யுத்தப் பிரதேசத்தில் உள்ள 1,50,000 மக்களுக்கு மாதக்கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப்பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பொய்யா? இலங்கையின் குடிசனத்தில் ஒரு பகுதியாகிய வன்னித்தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் விமானக்குண்டு வீச்சாலும், பல்குழல் பீரங்கி வீச்சாலும் கொலை செய்கின்றதென்பது பொய்யா? கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ 3000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 16,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் பொய்யா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அகதிகளாக்கி வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், இன்றும் அவை பூரணப்படுத்தப்படவில்லை என்பதும் பொய்யா? அகதி முகாம்கள் அனைத்தும் இராணுவ நிர்வாகத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதும் அந்த மக்களுக்கான சகலவிதமான ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல், கவனிப்பு இல்லாமல், நாளாந்தம் வயோதிபர்களும், குழந்தைகளும் உங்கள் நலன்புரி நிலையங்களில் இறக்கின்றார்கள் என்பதும் பொய்யா? இவற்றில் எதையாவது பொய்யென இலங்கை அரசு மறுக்கட்டும் பார்க்கலாம்.

மாறாக, ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் இருந்த வன்னிப்பிரதேசத்தில் 70,000 பேர் இருப்பதாக உலகம் முழுக்க பொய்யைக்கூறி 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடந்த 6 மாதத்துக்கு மேலாக பட்டினி போட்டவர்கள் யார்? 70,000 மக்கள் இருந்திருந்தால் 190,000 மக்கள் இன்று எப்படி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள். இன்னும் ஏறத்தாழ 150,000 மக்கள் புதுமாத்தளனில் இருப்பதாக நாங்கள் கூறுகின்றோம். 20,000 பேர் தான் இருப்பதாக நீங்கள் கூறுவதுடன், அவர்களுக்கு உணவோ, மருந்தோ அனுப்புவதுமில்லை.

நீங்கள் உருவாக்கிய பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய பீரங்கிகளையோ விமானக்குண்டு வீச்சையோ நடத்துவதில்லையென நீங்கள் கடந்த 27.04.2009 இல் அறிவித்தீர்கள். ஆனால் எப்போதாவது அதனை நிறுத்தியதுண்டா? ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்கள் மீது பாரிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது உண்மை இல்லையா? புலிகளை அழிக்கின்றோம், பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் உங்கள் யுத்தத்தில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களா இல்லையா?

யுத்தம் என்ற பெயரில், தமது சொந்தக்காணிகளில் மிகவும் வசதியாக, செழிப்பாக இருந்த மக்களை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் அவர்களை விரட்டியடித்தவர்கள் யார்? உங்கள் இராணுவம் இல்லையா? மக்களை விரட்டி வெறும் நிலங்களை கைப்பற்றுவதுதான் மக்களை விடுவிப்பதென்ற உங்கள் இலட்சணமா? வீடுகள், வாகனங்கள், பூமிகள், விளைநிலங்கள் என தமது அன்றாட வாழ்க்கையை யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்த மக்களை விரட்டியடித்து அகதிகளாக்கி, அவர்கள் எல்லாவற்றையும் இழந்து ஒருவேளை உணவுக்கு வரிசையில் நின்று தட்டேந்த வைத்தவர்கள் யார்? ஸ்ரீ லங்கா அரசாங்கம் இல்லையா?

இவ்வளவு மாத்திரம் அல்ல இதற்கு மேலும் ஆயிரம் தவறுகளை விட்டுக்கொண்டு, ஒரு இனத்தை அழித்துக்கொண்டு செயற்படும் நீங்கள், உண்மைகளை மறைத்து பொய்களையே பிரசாரமாக்கும் நீங்கள், பொய்யர்களா? அல்லது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பொய்யர்களா? நாங்கள் கூறுவது பொய்யாயின் சர்வதேச ஊடகவியலாளர்களை ஏன் அனுப்ப மறுக்கின்றீர்களா? நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையாயின் த.தே.கூட்டமைப்பை ஏனைய எதிர்க்கட்சிகளை ஏன் முகாம்களுக்கு அனுப்ப மறுக்கின்றீர்கள்? நீங்கள் செய்வதெல்லாம் சரியாயின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை முழுமையாக இங்கு இயங்க வைக்க ஏன் மறுக்கிறீர்கள்? யுத்த பிரதேசத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்ட நீங்கள் அவர்களை அனுமதிக்க ஏன் தயங்குகின்றீர்கள்? நீங்கள் உண்மை பேசுபவர்களாக இருந்தால் ஏன் இராணுவ இழப்புகள் தொடர்பான உண்மைகளை வெளியிட மறுக்கின்றீர்களா? யார் பொய் பேசுகின்றார்கள்? யார் உண்மை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். உலகம் தீர்மானிக்கும்.

“அமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு சாதகமாக பேசுகின்றார்கள் என்பது’…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக யார் பேசினாலும் உங்களுக்கு அவர்கள் புலியாகத் தான் தோற்றுவார்கள். பாராளுமன்றத்திலும் வெளியிலும் நீங்களும் உங்கள் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் அவ்வாறுதான் பிரசாரம் செய்கின்றீர்கள். புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். நாங்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கிறோம். எனவே எங்கள் எல்லோரையும் நீங்கள் புலிகளாகத்தான் பார்ப்பீர்கள். புலிகளுக்கு முன்னர் இருந்த தமிழர் தலைவர் செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அவர்கள் இருந்த காலத்தில் உங்கள் கண்களுக்குப் புலிகளாகத் தான் தோற்றினார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் புலியாகப் பார்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யுத்தத்தை நிறுத்துங்கள். மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று கூறும் நாம் உங்களுக்குப் புலிகளாகத் தெரிகின்றோம். யார் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்போர் உங்களுக்குத் நண்பர்களாகத் தென்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உங்களுக்குப் புலியாகத்தான் தெரியும்.

யுத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மயான பூமியாக்கப்பட்டது மாத்திரமல்ல. தென்பகுதி பொருளாதாரமும் சீரழிந்துள்ளது என்பதை நாம் மாத்திரமல்ல சிங்கள மக்களும் அறிவார்கள். உலக வங்கியிடம் பல மில்லியின் டொலர்களுக்காக வரிசையில் நிற்பதையும் நாம் அறிவோம். இன்று உங்கள் பொளாதாரத்தை மீட்க பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பது போல தமிழரைக்காட்டி பிச்சையெடுப்பதையும் நாம் பார்க்கின்றோம். “ஆடு நனைகிறது என ஒநாய் அழுததாம்’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழ் மக்களின் துன்பம் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பேசும் போதும் எங்களுக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

எனவே, எங்களுக்காக நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிகள் என நம்பினால் அவர்களைப் பட்டினி போடாதீர்கள். அவர்களைக் கொல்லாதீர்கள், அவர்களை அகதிகளாக்காதீர்கள். அவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அவர்களது கடமைகளை அவர்களே செய்ய வழிவிடுங்கள். ஊடக அமைச்சர் என்பதற்காக தொடர்ந்து பொய் பேசாதீர்கள். ஏனைய அமைச்சர்களுக்கும் இது பொருந்துமென்றும் தெரிவித்துள்ளார்.