2009

2009

இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

மத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை

sarath-cp-cm.jpgமத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக இந்த மாகாண மக்களின் தகவல் தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் கண்டி கெட்டம்பேயில் மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிர்மாணப்பணிகளுக்காக மத்திய மாகாண சபை 4 கோடி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தகவல் தொழிநுட்ப துறையை முன்னேற்றும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை அமைச்சு திணைக்கள மட்டத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மற்றொருபுறம் இந்த நவீன தொழினுட்பத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு கணினி தொழினுட்ப பயிற்சி அளிக்கும் நோக்கில் பயிற்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிந்தவூரிலிருந்து உணவுப் பொருட்கள்

islam.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.

தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிய பிரச்சினைகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவிப்பு

Minister Tissa Vitharanaசர்வ கட்சி பிரநிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  எனவே, கூடிய விரைவில் தீர்வு யோசனையை தயாரித்து முடித்து விட முடியுமென நம்பிக்கை வெளியிட்ட பேராசிரியர் விதாரண, எனினும் அதற்கு காலவரையறையொன்றை கூற முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரித்து பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்திருந்தார். இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஏற்கனவே பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அக் குழு நூறாவது சந்திப்பையும் தாண்டி கூட்டங்களை நடத்தி வருகிறது.

தீர்வுயோசனையை தயாரிப்பதில் ஏற்கனவே 90 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டபோதிலும் 10 சதவீதமான விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தீர்வு யோசனை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது;

பிரச்சினைக்குரியதாக இருந்த அனைத்து விடயங்களிலும் தற்போது பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதற்கமைய ஒவ்வொரு விடயங்களாக கலந்துபேசி தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, நீண்ட காலம் செல்வதற்குள் தீர்வு யோசனையை தயாரித்து முடித்துவிட முடியுமென நம்புகிறேன்.

எமது இந்த யோசனை தயாரிக்கப்பட்டதும் முதலில் (பிரதான எதிர்க்கட்சியான) ஐ.தே.க.விடம் அதை முன்வைத்து கலந்துபேசிய பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடனும் இந்த தீர்வு யோசனை குறித்து கலந்துபேச எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்குறித்த கலந்தாலோசனைகளின்போது ஏதேனும் திருத்தங்கள், புதிய யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அவை குறித்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்தாராயப்பட்டு அனைவரது பொது இணக்கப்பாட்டையும் எட்டக்கூடிய வகையில் ஏற்புடைய திருத்தங்கள் உள்வாங்கப்படும்.

இறுதியான தீர்வுயோசனை அறிக்கை குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு குழுவின் தலைவராக வஜிர எம்.பி – ஐக்கிய தேசியக் கட்சி

unp.jpgமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் கிரமமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஐ.தே.க.வினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முன்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாள்வதற்கென இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாளும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு

itali.jpgஇலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.  இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையர்களுக்கு இன்னும் சில மாதங்களில் வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இத்தாலிய அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சுகாதாரததுறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைத் தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு  அங்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்குழு அவசரப்பட்டுவிட்டது : ரஜீவ விஜேசிங்க

rajee-vija.jpg“இலங்கை விவகாரம் குறித்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்கள் குழு அவசரப்பட்டுவிட்டது என்று கருதுகின்றோம். இலங்கைக்கு சர்வதேச விசாரணை குழுவை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை சுயாதீன நிபுணர்கள் குழு முன்வைத்திருந்தாலும் அதனை பாதுகாப்பு சபை அங்கீகரிக்கவேண்டியது அவசியமாகும்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்பவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் குழு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மே 12 – சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day) – புன்னியாமீன்

florencenightingale.jpg உலக ளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்  (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland)  என்பவர் இத்தினத்தை  செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர்  நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “செவிலியர்கள்” உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

மறுபுறமாக ‘தாதியார்தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்) (1794- 1875). புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லீ பார்க்’ இது  புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன்படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். 1858 இல் பதவியேற்றதன் மூல அரச புள்ளிவிபரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். அதேபோல இவர் ஒரு எழுத்தாளருமாவார்.

ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே’ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். பெற்றோர் அக் கல்வி நெறியைப் பயில மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் அறிக்கையிடுதல் சார்பான கல்வி நெறியைப் பயில ஊக்கமளித்தனர். இதனை மறுதலித்து நோயாளர்களைப் பராமரி க்கும் கல்வி நெறியை மேற்கொண்டு மூன்றா ண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற்கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர்குடும்பங்களில் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் வழங்கப்படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும்  இவரை மிகவும் கவர்ந்தன. 1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக  ஜெர்மனியில் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.

பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராகப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.

1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. இப்போரின் போது லண்டன் டைம்ஸ் உட்படப் பல முன்னிலைத் தினசரிகள் கிரிமியாவில் காணப்படும் பரிதாபகரமான நிலைமைகளையும் காயமுற்றோரும் ஊனமுற்றோரும் முறையாகப் பராமரிக்கப்படாமை சார்பாக பல கட்டுரைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டன.

இந்த யுத்தப் பகுதியில் போதியளவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாதிமார்கள், மருந்து வகைகள், மருந்துத் துணிகள் இல்லாமை பற்றி மனிதாபிமானத்தோடு சுட்டிக்காட்டி டைம்ஸ் தினசரி கட்டுரை வெளியிட்டது. இதனை வாசித்த புளோரன்ஸ் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் இராணுவ வைத்திய சாலைக்குச் சென்றார். பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். தனதன்பினாலும் சிகிச்சைகளாலும் புளோரன்ஸ் படையினரைக் குணப்படுத்தினார். ஒரே தடவையில் பெருமளவு காயப்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளை இடைவிடாது அவர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். இரவு வேளைகளில் கையில் விளக்கொண்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று சுகம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தம்மைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு வந்துள்ளது என இராணுவவீரர்கள் புளோரன்ஸைக் கெளரவித்தனர். விளக்கேற்றிய பெருமாட்டியை ‘Lady with the Lamp’ என வர்ணித்தனர்.1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

இந்தப்போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருந்துத் தட்டுப்பாடும், குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing),  “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். அத்துடன், அரசாணைக் குழுவிற்கு இவர் சமர்ப்பித்த அறிக்கையில் படை வீரர்களின் இறப்புக்கு படைவீரர்களின் வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமென எடுத்துரைத்தார்.   பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29, 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் ‘தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்’ நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் துணையுடன் புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9, 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியியல் மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் புளோரன்ஸின் அரும்பெருஞ் சேவைகளை அறிந்த இங்கிலாந்து மன்னர் பாம் எட்வேட் ‘Order of Merit’ எனும் பட்டத்தை வழங்கி புளோரன்ஸைக் கெளரவித்தார். உலகில் இப்பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண்மணியெனும் பேரும் புகழும் இவருக்கே உரித்தாகும்.

அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். ஆகஸ்ட் 13, 1910 இல் இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) புதைக்க அரசு முன்வந்தது.  

ஆனால் அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன. ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் புளோரன்ஸ்’  (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தைப் போலவே  இங்கிலாந்தின் பெண்ணியத்திலும் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார். 1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை “சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்” என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப் படவில்லையாயினும் ‘கசான்ட்ரா’ எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணியல் வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.