2009

2009

மேற்குலக தலையீடு குறித்து கமெனெய் எச்சரிக்கை

தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிடுவது குறித்து இரானின் அதியுயர் மதத்தலைவர் அயோத்துல்லா கமெனெய் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அப்படியான தலையீடுகளுக்கு எதிராக தமது நாடு பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி தெரிவிக்கிறது. நாட்டின் அண்மையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு இடம்பெற்ற அமைதியின்மைக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்று இரான் அரசு குற்றம் சுமத்துகிறது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனையும், அமெரிக்காவையும் இது தொடர்பில் இரான் விமர்சித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வீதி போராட்டங்களை இரானிய அதிகாரிகள் அடக்கினர்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

மீன்பிடி நீரியல் வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் கரையோர பாதுகாப்பு பிரிவை தனியாக கரையோர திணைக்களமாக மாற்றி செயற்பட வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திணைக்களம் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  சட்டவிரோத மீன்பிடி, கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும், கடலில் சந்தேகத்துக்குரியவாறு நடமாடுபவர்களை கைது செய்வதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்துக்கிடமான படகுகளை சோதனையிடுவதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் கடல்வழியாக போதைப்பொருட்கள், கடத்தல் பொருட்கள் கடத்திவரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இத்திணைக்களம் அவசியம் செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மீனவர்கள் இந்தியக்கடல் எல்லைக்குள் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருவதாலும் இந்தப்பிரிவை திணைக்களமாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

04.jpgவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 1 முதல் 4 வரையும் மொத்தம் 4 செயல்நூல்களும், 30 விசேட மாதிரிவினாப்பத்திரங்களும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிவினாப்பத்திரங்களும், செயல்நூல்களும் மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு நலன்புரிநிலைய ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதாக நலன்புரிநிலைய பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3900ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும்,  கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாணவர்களுக்கான மாதிரிவினாப்பத்திரங்களையும், செயல்நூல்களையும் அனுப்பும் பணியை தற்போது சிந்தனைவட்டமும், தேசம்நெற்உம் ஆரம்பித்துள்ளது. இப்பணிக்கு லண்டனில் அகிலன் பவுண்டேசன் அமைப்பினரும், இலங்கையில் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும்,  மேலும் சில பரோபகாரிகளும் உதவி வருகின்றனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 4872 நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்களுக்கும் சிந்தனைவட்டம் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சை முடிந்த பின்பு க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் முடிவெடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மாணவர்களை வழிநடத்தக்கூடிய வகையில் இதற்கான செயல்பாட்டு திட்டமொன்றை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து சிந்தனை வட்டமும், தேசம்நெற் உம் வகுத்து வருகிறது.

சட்டவிரோத ஆயுதங்களை கையளித்த இளைஞர்களுக்கு பிரதிபொலிஸ் மா அதிபர் பாராட்டு

kattankudy_arms.gifகிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதனை முன்னுதாரணமாக எடுத்து ஏனைய பிரதேசங்களிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைகளையும் பணி படையினரால் தீவிரப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் எரிசன்குணதிலக தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற ஆயுதம் கையளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில் முப்படையினரைத் தவிர எந்த ஒரு தனிநபரிடமும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்போவதில்லை. இந்த சட்டவிரோத ஆயுதங்களையே நாம் களைந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும், அமைதியையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் பொலிஸார் தீவிரமான முறையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைத்த இளைஞர்களையும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் சம்மேளனத்தினரையும், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வையும் பாராட்டுகின்றேன்.

நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள். எமக்கிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாடு. இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் எவ்விதமான கொலைகளோ, கொள்ளைகளோ, கப்பம் பெறும் நடவடிக்கைகளோ இடம்பெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் இதற்கான சகல நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

யாழ். வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்; கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல் இயக்கம்

யாழ்ப் பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கண்காணிப்பதற்குப் பெப்ரல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் நூறு உள்ளூர் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக பெப்ரல் இயக்கத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் எழுநூறு பேரை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என தேர்தல் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அந்தடிப்படையில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 75 பேரையும், வவுனியா நகர சபைக்கான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 25 பேரையும் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் காண்காணிக்கும் பணியில் 700 பேரும் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர்.

அதேநேரம் தேர்தல் தினத்தில் யாழ்.மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் மூன்று நடமாடும் வாகனங்களும், வவுனியா நகர சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் இரண்டு நடமாடும் வாகனங்களும், ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 20 நடமாடும் வாகனங்களையும் ஈடுபடுத்தவுள்ளோம்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுள் 51 பேர் 12 ஆம் திகதி நாடு திரும்புவர் – பிரதியமைச்சர் நியோமல்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 164 இலங்கை மீனவர்களில் 51 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விசாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விவாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளி விவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளமை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதியமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அதற்கேற்பவே அவர்களது விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிணங்க படிப்படியாக அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும், இவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் திட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி ராஜபக்ஷ

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்தினால் அப் பிரதேசத்திலுள்ள சொத்துக்களுக்கோ அல்லது பிரதேசவாசிகளின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார்.  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட சனிக்கிழமை அங்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் பசுமை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் நாட்டின் மின் விநியோகத்திற்கு மேலும் 900 மெகாவற் மின்சக்தி சேர்க்கப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், அந்தந்த பிரதேசங்களில் உரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது முக்கியமென்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அனைத்து துறையிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் நிகழ்வில் பங்கு கொண்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், மின்உற்பத்தி நிலைய நிர்மாணத்திட்டதுடன் அந்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது மேலும் தெரிவித்திருக்கிறார்.

தவறான அறிக்கைக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஏ.பி.சி.

தவறான விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி.தொலைக்காட்சி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மே 18 இல் 7.30 இல் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக தவறான விதத்தில் அறிக்கையிட்டதாக பார்வையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏ.பி.சி.தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் பெருந்தோட்டத் துறைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர் இலங்கைத் தமிழர்கள் என்று ஏ.பி.சி.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒருபகுதியினர்

தொழிலாளர்களின் வம்சாவளியினராக இருக்கின்ற போதும் அநேகமானோர் 2 ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தமிழ் கலாசார பரம்பரையினராகும். ஏ.பி.சி.யின் கெய்ரன் டொய்ல் இந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். உங்கள் கவலையை ஏ.பி.சி. ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பாக தவறாக குறிப்பிடப்பட்டதையும் தவறான வழிகாட்டலுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருந்ததையும் ஏ.பி.சி.ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஏ.பி.சி.மன்னிப்புக் கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கிரீன் லெவ்ற் வீக்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்தே தீவில் இலங்கைத் தமிழ் மக்கள் இருந்து வருவதை ஏ.பி.சி.விளங்கிக்கொள்கிறது. அநேகமான இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வம்சாவளியினர் என்றும் ஏ.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

பிரபல குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ மரணம்

_arguello.jpgதென் அமெரிக்க நாடானா நிகராகுவாவைச் சேர்ந்த பிரபலமான குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அலெக்ஸிஸ் மூன்று முறை உலக குத்துச் சண்டை பட்டத்தை வென்றவர். 1995 ஆம் ஆண்டு குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகளவில் 82 வெற்றிகளை பெற்றுளார். அதில் 65 முறை எதிரிகளை முழுதாக வீழ்த்தியும் உள்ளார்.

மூன்று பிரிவுகளில் உலகப் பட்டத்தை வென்றுள்ள ஆறு பேரில் அலெக்ஸிஸும் ஒருவர் என்பது குறிப்பிட்த்தக்கது.1968 ஆம் ஆண்டு தொழில்முறை ரீதியில் போட்டியிட தொடங்கிய இவர் உலகப் போட்டிகளில் ஃபெதர் வெயிட், சூப்பர் ஃபெதர் வெயிட் மற்றும் லைட் வெயிட் பட்டங்களை வென்றவர்.

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.