நுரைச் சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்தினால் அப் பிரதேசத்திலுள்ள சொத்துக்களுக்கோ அல்லது பிரதேசவாசிகளின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட சனிக்கிழமை அங்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் பசுமை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் நாட்டின் மின் விநியோகத்திற்கு மேலும் 900 மெகாவற் மின்சக்தி சேர்க்கப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், அந்தந்த பிரதேசங்களில் உரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது முக்கியமென்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அனைத்து துறையிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் நிகழ்வில் பங்கு கொண்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம், மின்உற்பத்தி நிலைய நிர்மாணத்திட்டதுடன் அந்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது மேலும் தெரிவித்திருக்கிறார்.